தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   745


முதலியன நுண்மையாகிய பண்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.) ‘நொசிபடு மருங்குல் கசிவுறக் கைதொழா’ ‘இழைமருங் கறியா
நுழைநூற்  கலிங்கம்’  (மலைபடு.561)  ‘நுணங்குதுகில்  நுடக்கம் போல’
(நற்.15)  என  வரும். ‘நுணங்கு நுண்கொடி மின்னார் மழைமிசை’ என
நுணங்கு  நுடக்கத்தை உணர்த்துதல், ‘கூறிய கிளவி’ (390) என்பதனாற்
கொள். (76) 

புனிறு என்பதன் பொருள்

375. புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே.  

இது குறிப்பு. 

(இ-ள்.)     புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே-புனிறு
என்னுஞ்  சொல்  ஈன்றணிமையாகிய  குறிப்புப் பொருளை உடைத்து,
எ-று. 

(எ-டு.)  ‘புனிறுதீர்  குழவிக்  கிலிற்றுமுலை  போல’   (புறம்.68:8)
‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம்.56:11) என வரும்.        (77)

நனவு என்பதன் பொருள்

376. நனவே களனும் அகலமும் செய்யும்.

இதுவும் அது. 

(இ-ள்) நனவே  களனும்   அகலமும்   செய்யும்-நனவு   களனும்
அகலமுமாகிய குறிப்புப் பொருண்மையை உணர்த்தும், எ-று. 

(எ-டு.)  ‘நனவுப்புகு  விறலியிற்  றோன்று   நாடன்’   (அகம்.2:10)
‘நனந்தலை உலகம் வளைஇ’ (முல்லைப்.1) என வரும். (78)  

மத என்பதன் பொருள் 

377. மதவே மடனும் வலியும் ஆகும். 

இதுவும் அது. 

(இ-ள்.) மதவே மடனும்  வலியும் ஆகும்-மத, மடனும் வலியுமாகிய
குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.)   ‘பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்’ (அகம்.14:9) ‘கயிறிடு
(கயிற்றிடு)  கதச்சேப்  போல மதமிக்கு’ (அகம்.36:7) என வரும். மதவு
நடை என்பதில் மத மதவு என ஈறு திரிந்து நின்றது. (79) 

* (பாடம்) மேயலருந்து

மத என்பது வேறு பொருளும் உணர்த்தல்

378. மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. 

இஃது, எய்தியதன்மேல் சிறப்பு விதி.

(இ-ள்.)     மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே - மத, மடனும்
வலியுமே  அன்றி,  மிகுதியும்  வனப்புமாகிய  குறிப்புஞ் சிறுபான்மை
உணர்த்தும் எ-று. 

(எ-டு.)  ‘போராரா ஏற்றின் பொருநா கிளம்பாண்டில், தேரூரச் செம்
மாந்ததுபோல்  மதைஇயினள்’ (கலி.109:,5) ‘மாதர் வாண்முகம் மதைஇய
நோக்கே’ (அகம்.130:14) என வரும். இவையும் ஈறு திரிந்தன. (80) 

யாணர் என்பதன் பொருள்

379. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. 

இதுவும் அது. 

(இ-ள்.)  யாணர்க்  கிளவி   புதிதுபடற்   பொருட்டே -  யாணர்
என்னுஞ் சொல், வருவாய்  புதிதாகப் படுதலாகிய குறிப்பை உடைத்து,
எ-று. 

(எ-டு.)  ‘வீகொடு   சென்ற   வட்டிற்  பற்பல,* மீனொடு பெயரும்
யாணர் ஊர!’ (நற்.210)
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:04:00(இந்திய நேரம்)