Primary tabs

பறாஅக் குருகின் உயிர்த்தலு முயிர்த்தனன்
தொய்யி லிளமுலை இனிய தைவந்து
தொய்யலம் தடக்கையின் வீழ்பிடி யளிக்கும்
மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;”
அதனால்,
“அல்லல் களைந்தனென் தோழி நந்நகர்
அருங்கடி நீவாமை கூறி னன்றென
நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்து
இன்னது செய்தா ளிவளென
மன்னா உலகத்து மன்னுவது புரைமே.”
எனக் கைப்பட்டுக்
கலங்கிப் புணர்ச்சி நிகழ்ந்தமை கூறி ‘அருங்கடி
நீவாமை கூறின் நன்’றெனத் தமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலைவி
கூறினாள். சுரிதகத்து இருகாற் றோழி யென்றாள் நாணுத் தளையாக,
மறைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனாக.
“எரியகைந் தன்ன செந்தலை யன்றில்
பிரியின் வாழா தென்மோ தெய்ய
துறைமேய் வலம்புரி துணைசெத் தோடிக்
கருங்கால் வெண்குருகு பயிறரும்
பெருங்கடற் படப்பையெஞ் சிறுநல் லூரே.”
இஃது, அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென்றது.
“ஐயோ வெனயாம் பையெனக் கூறிற்
கேட்குவர் கொல்லோ தாமே மாக்கடற்
பரூஉத்திரை தொகுத்த நுண்கண் வெண்மணல்
இன்னுந் தூரா காணவர்
பொன்னி னெடுந்தேர் போகிய நெறியே.”
இஃது, அவர் இன்னும் போவதற்குமுன்னே நம் வருத்தத்தை
வெளிப்படக் கூறென்றது.
“என்னைகொ றோழி யவர்கண்ணு நன்கில்லை
யன்னை முகனுமதுவாகும் - பொன்னலர்
புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல நில்லென் றுறை”
(ஐந்.எழு.58)
இவை
தலைவி அறத்தொடு நிற்றற்பகுதி. தோழிக்கே உரைத்தற்குத்
தோழிக்கென்றார். (21)
தலைவி கூற்றிற் சிறப்பில்லனகூறி அவையும்
அகமெனல்
செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவ னுள்வழிப் படினுந்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே.

