Manimeagalai

22 சிறைசெய் காதை

 
 

[ மணிமேகலை பொருட்டால் மடிந்தான் உதயகுமரன் என்பது மாதவர்வாய்க்கேட்ட மன்னவன் மணிமேகலையை மந்திரியாகிய சோழிகஏனாதியால் காவல்கொண்ட பாட்டு ]

 

 

கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப

நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு

முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்

உதய குமரற்கு உற்றதை உரைப்பச்

5

சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து

மாதவர் எல்லாம் மணிமே கலைதனை

இளங்கொடி அறிவதும் உண்டோ இதுஎனத்

துளங்காது ஆங்குஅவள் உற்றதை உரைத்தலும்

ஆங்குஅவள் தன்னை ஆர்உயிர் நீங்கிய

10

வேந்தன் சிறுவனொடு வேறுஇடத்து ஒளித்து,

மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்துக்

கோயில் மன்னனைக் குறுகினர் சென்றுஈங்கு

உயர்ந்துஓங்கு உச்சி உவாமதி போல

நிவந்துஓங்கு வெண்குடை மண்அகம் நிழல்செய

15

வேலும் கோலும் அருள்கண் விழிக்க

தீதுஇன்று உருள்கநீ ஏந்திய திகிரி

நினக்குஎன வரைந்த ஆண்டுகள் எல்லாம்

மனக்குஇனி தாக வாழிய வேந்தே!

இன்றே அல்ல இப்பதி மருங்கில்

20

கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து

பத்தினிப் பெண்டிர் பால்சென்று அணுகியும்

நல்தவப் பெண்டிர் பின்உளம் போக்கியும்

தீவினை உருப்ப உயிர்ஈறு செய்தோர்

பார்ஆள் வேந்தே பண்டும் பலரால்:

25

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்

தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்

கன்னி ஏவலின் காந்த மன்னவன்

இந்நகர் காப்போர் யார்என நினைஇ

நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக்

30

காவல் கணிகை தனக்குஆம் காதலன்

இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்

ககந்தன் ஆம்எனக் காதலின் கூஉய்

அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின்

பரசு ராமன்நின் பால்வந்து அணுகான்

35

அமர முனிவன் அகத்தியன் தனாது

துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்

ககந்தன் காத்தல் காகந்தி என்றே

இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு

உள்வரிக் கொண்டுஅவ் உரவோன் பெயர்நாள்

40

தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்

பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்

யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக்

காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்

நீவா என்ன, நேர்இழை கலங்கி

45

மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்

பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்

புக்கேன் பிறன்உளம் புரிநூல் மார்பன்

முத்தீப் பேணும் முறைஎனக்கு இல்என

மாதுயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்

50

பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்

கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இலேன்

கண்டோன் நெஞ்சில் கரப்புஎளி தாயினேன்

யான்செய் குற்றம் யான்அறி கில்லேன்

55

பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்

தெய்வம் நீஎனச் சேயிழை அரற்றலும்,

மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி

நீகேள் என்றே நேர்இழைக்கு உரைக்கும்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்

60

பெய்எனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்

பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு

விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்

கடவுள் பேணல் கடவியை ஆகலின்

65

மடவரல் ஏவ மழையும் பெய்யாது

நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப்

பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை

ஆங்குஅவை ஒழிகுவை ஆயின் ஆயிழை

ஓங்குஇரு வானத்து மழையும்நின் மொழியது

70

பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்

கட்டாது உன்னைஎன் கடுந்தொழில் பாசம்

மன்முறை எழுநாள் வைத்துஅவன் வழூஉம்

பின்முறை அல்லது என்முறை இல்லை

ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால்

75

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்

ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன

இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப்

பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன்

தாதை வாளால் தடியவும் பட்டனன்.

80

இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த

மண்ஆள் செல்வத்து மன்னவர் ஏறே!

தரும தத்தனும் தன்மா மன்மகள்

பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித்

தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்

85

கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்

மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு

ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர்எழப்

புனையா ஓவியம் புறம்போந்து என்ன

மனைஅகம் நீங்கி வாள்நுதல் விசாகை

90

உலக அறவியின் ஊடுசென்று ஏறி

இலகுஒளிக் கந்தின் எழுதிய பாவாய்

உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீஎன,

மாநகர் உள்ளீர் மழைதரும் இவள்என

நாஉடைப் பாவை நங்கையை எடுத்தலும்,

95

தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின்

மையல் ஊரோ மனமாசு ஒழியாது

மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்

இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே

நல்தாய் தனக்கு நல்திறம் சாற்றி

100

மற்றுஅவள் கன்னி மாடத்து அடைந்தபின்,

தரும தத்தனும் தந்தையும் தாயரும்

பெருநகர் தன்னைப் பிறகிட்டு ஏகித்

தாழ்தரு துன்பம் தலைஎடுத் தாய்என

நாஉடைப் பாவையை நலம்பல ஏத்தி

105

மிக்கோர் உறையும் விழுப்பெருஞ் செல்வத்துத்

தக்கண மதுரை தான்சென்று அடைந்தபின்,

தரும தத்தனும் தன்மா மன்மகள்

விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது

பெண்டிரைப் பேணேன் இப்பிறப்பு ஒழிகெனக்

110

கொண்ட விரதம் தன்னுள் கூறி

வாணிக மரபின் வருபொருள் ஈட்டி

நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்

எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு

ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்.

115

அந்த ணாளன் ஒருவன் சென்றுஈங்கு

என்செய் தனையோ இருநிதிச் செல்வ

பத்தினி இல்லோர் பலஅறம் செய்யினும்

புத்தேள் உலகம் புகாஅர் என்பது

கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்

120

நீட்டித்து இராது நின்நகர் அடைகெனத்

தக்க மதுரை தான்வறிது ஆக

இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே!

மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டுப்

பொன்தொடி விசாகையும் மனைப்புறம் போந்து

125

நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்

அல்லவை கடிந்த அவன்பால் சென்று

நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்நாள்

மம்மர் செய்த வனப்புயாங்கு ஒளித்தன?

ஆறுஐந்து இரட்டி யாண்டுஉனக்கு ஆயதுஎன்

130

நாறுஐங் கூந்தலும் நரைவிரா வுற்றன

இளமையும் காமமும் யாங்குஒளித் தனவோ

உளன்இல் லாள! எனக்குஈங்கு உரையாய்

இப்பிறப்பு ஆயின்யான் நின்அடி அடையேன்

அப்பிறப்பு யான்நின் அடித்தொழில் கேட்குவன்

135

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா

வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணை ஆவது

தானம் செய்எனத் தரும தத்தனும்

140

மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி

ஆங்குஅவன் அவளுடன் செய்த நல்அறம்

ஓங்குஇரு வானத்து மீனினும் பலவால்.

குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்

அமரன் அருளால் அகல்நகர் இடூஉம்

145

படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண்

கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்

மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்

கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்

சுரிஇரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த

150

விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்

தொல்லோர் கூறிய மணம்ஈது ஆம்என

எல்அவிழ் தாரோன் இடுவான் வேண்டி

மாலை வாங்க ஏறிய செங்கை

நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்,

155

ஏறிய செங்கை இழிந்திலது இந்தக்

காரிகை பொருட்டுஎன, ககந்தன் கேட்டுக்

கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான்

மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்

ஊழிதொறு ஊழி உலகம் காத்து

160

வாழி எங்கோ மன்னவ என்று

மாதவர் தம்முள்ஓர் மாதவன் கூறலும்,

வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன்

இன்றே அல்ல என்றுஎடுத்து உரைத்து

நன்றுஅறி மாதவிர் நலம்பலம் காட்டினிர்

165

இன்றும் உளதோ இவ்வினை உரைம்என,

வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத்

தீதுஇன்று ஆக செங்கோல் வேந்துஎன

மாதவர் தம்முள்ஓர் மாதவன் உரைக்கும்:

முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில்

170

கடியப் பட்டன ஐந்துஉள அவற்றில்

கள்ளும் பொய்யும் களவும் கொலையும்

தள்ளா தாகும் காமம் தம்பால்

 

ஆங்குஅது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்என

நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள்

175

நீங்கார் அன்றே நீள்நில வேந்தே!

தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்

சேய்அரி நெடுங்கண் சித்திரா பதிமகள்

காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள்

மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்.

180

மற்றவள் பெற்ற மணிமே கலைதான்

முற்றா முலையினள் முதிராக் கிளவியள்

செய்குவன் தவம்எனச் சிற்றிலும் பேரிலும்

ஐயம் கொண்டுஉண்டு அம்பலம் அடைந்தனள்

ஆங்குஅவள் அவ்இயல் பினளே ஆயினும்

185

நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும்

காரிகை பொருட்டால் காமம் காழ்கொள

ஆர்இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்

காயசண் டிகைவடிவு ஆயினள் காரிகை

காயசண் டிகையும் ஆங்குஉளள் ஆதலின்;

190

காயசண் டிகைதன் கணவன் ஆகிய

வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி

ஈங்குஇவள் பொருட்டால் வந்தனன் இவன்என

ஆங்குஅவன் தீவினை உருத்தது ஆகலின்;

மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன்

195

உதய குமரன் ஒழியான் ஆக,

ஆங்குஅவள் தன்னை அம்பலத்து ஏற்றி

ஓங்குஇருள் யாமத்து இவனைஆங்கு உய்த்துக்

காயசண் டிகைதன் கணவன் ஆகிய

வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்

200

விஞ்சை மகள்பால் இவன்வந் தனன்என

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி

ஆங்குஅவன் தன்கை வாளால் அம்பலத்து

ஈங்குஇவன் தன்னை எறிந்ததுஎன்று ஏத்தி

மாதவர் தம்முள்ஓர் மாதவன் உரைத்தலும்,

205

சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி

யான்செயற் பாலது இளங்கோன் தன்னைத்

தான்செய் ததனால் தகவுஇலன் விஞ்சையன்

மாதவர் நோன்பும் மடவார் கற்பும்

காவலன் காவல் இன்றுஎனின் இன்றால்

210

மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர்

துயர்வினை யாளன் தோன்றினன் என்பது

வேந்தர் தஞ்செவி உறுவதன் முன்னம்

ஈங்குஇவன் தன்னையும் ஈமத்து ஏற்றிக்

கணிகை மகளையும் காவல்செய்க என்றனன்

215

அணிகிளர் நெடுமுடி அரசுஆள் வேந்துஎன்.

 

சிறைசெய் காதை முற்றிற்று.