381-390

381. முல்லை
''அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்'' எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
5
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
10
மாரி இரீஇ மான்றன்றால் மழையே.

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்

382. நெய்தல்
கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
5
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி,
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை!-
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.

ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

383. குறிஞ்சி
கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
5
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள்,
அருளினை போலினும், அருளாய் அன்றே-
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,
ஓங்கு வரை நாட! நீ வருதலானே.

தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.-கோளியூர்கிழார் மகனார் செழியனார்

384. பாலை
பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
5
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு
10
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே.

உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

385. நெய்தல்
எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
5
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால்,
பொழுதன்றுஆதலின், தமியை வருதி:
எழுது எழில் மழைக்க..............

386. குறிஞ்சி
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
5
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்.
''அணங்குடை அருஞ் சூள் தருகுவென்'' என நீ,
''நும்மோர் அன்னோர் துன்னார் இவை'' என,
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
10
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.

பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, ''பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப

387. பாலை
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
5
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர்
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
10
நெடும் பெருங் குன்றம் முற்றி,
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்

388. நெய்தல்
அம்ம வாழி, தோழி!-நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே-நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
5
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக்
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
10
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?

வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;''மனையுள் வேறுபடாது ஆற்றினாய்'' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

389. குறிஞ்சி
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்-
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
5
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென,
''சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ'' என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
10
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.

பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

390. மருதம்
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
5
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;
யாணர் ஊரன் காணுநன்ஆயின்,
வரையாமைஓ அரிதே; வரையின்,
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
10
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய-தோழி!-தொலையுந பலவே.

பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்