தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

  • 3.3 முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

    முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘நீ இச்செயலைச் செய்வாயாக’ என ஏவினால், அவ் ஏவலை வெளிப்படுத்தும் சொல்லுக்கு ஏவல் வினை என்று பெயர்.

    ஏவல் வினை தெரிநிலையில் மட்டும் உண்டு. குறிப்புவினையில் இல்லை. எனவே, ‘ஏவல்’ என்பது ஒரு வினைப் பகுதியானது விகுதி பெற்றோ, பெறாமலோ அமையும் சொல் எனலாம்.

    பெரும்பாலும் ஏவல் வினைமுற்றுகள் ‘ஆய்’ விகுதி பெற்று, இலக்கிய வழக்கில் வருகின்றன.

    வாராய்
    =
    வா
    சொல்லாய்
    =
    சொல்
    பாடாய்
    =
    பாடு

    என்பன போல அமையும். முன்னிலை ஒருமை விகுதியாகிய ஆய் என்பதைப் பெறாமல் வா, சொல், உண் என்பன போலப் பகுதி மாத்திரமே நிற்கும் வினைச் சொற்களும் ஏவல் ஒருமை வினைமுற்றுகளேயாகும். பேச்சு வழக்கில் ஏவல் ஒருமைச் சொற்கள் பெரும்பகுதி விகுதி இல்லாமல் வருவதையே காணலாம்.

    இவ்வாறன்றி ஆய்,, அல், ஏல், ஆல் முதலிய விகுதிகளைப் பெற்றும் ஏவல் ஒருமை வினைமுற்றுச் சொற்கள் வருவதுண்டு.

    வாராய் - (வருவாய்) - ஆய் விகுதி
    சேறி - (செல்லுதி = செல்) - இ விகுதி

    வாரல் - (வரவேண்டாம்) - அல் விகுதி
    எதிர்மறைப் பொருளில் அமைந்தன
    திறவேல் (திறக்க வேண்டாம்) - ஏல் விகுதி
    அழால் (அழ வேண்டாம்) - ஆல் விகுதி

    ஏவல் வினை எதிர்காலத்துக்கு உரியது

    3.3.1 பகுதி மட்டும் வரும் ஏவல்வினைமுற்று

    விகுதி இல்லாமல் தெரிநிலை வினைப்பகுதி மட்டும் வந்து ஏவல் வினைமுற்றுகள் அமைவதுண்டு. பெரும்பாலும் இக்காலப் பேச்சு வழக்கில் இவ்வாறுதான் ஏவல் வினை அமைகிறது எனலாம்.

    முன்னிலை ஒருமை ஏவலில் பொதுவாக வா, போ, இரு, உண், பார் என்பன போன்ற வினைப்பகுதிகளைத்தான் பெரும்பாலும் பேசுகிறோம். ‘நீ வா’ என்பதற்குப் பதிலாக ‘வா’ என்று மட்டும் எதிரில் இருப்பவரை நோக்கிக் கூறும் பொழுது ‘நீ’ என்னும் எழுவாய் தோன்றா எழுவாயாக மறைந்திருக்கிறது. அதாவது கேட்பவரால் ‘நீ’ என்னும் சொல் தானாக உணரப்படுகிறது.

    நன்னூல் பதவியலில் கூறப்படும் பகுபத உறுப்புகள் பற்றிய செய்திகளில் ‘நட, வா, மடி, சீ, விடு, கூ’ என்று தொடங்கும் நூற்பாவில் (நன்னூல்:136), ‘செய்’ என்னும் பொது ஏவல் வாய்பாட்டில் அமைந்த வினைப் பகாப்பதங்களை 23 மாதிரிகளாகப் பட்டியல் இட்டுள்ளார் நூலாசிரியர். தமிழில் உள்ள அனைத்து வினைப்பகுதிகளையும் இந்த 23 மாதிரிகளுள் அடக்கலாம்.

    வா, போ போன்ற ஏவல் சொற்களில் விகுதி இல்லை என்றாலும், முன்னிலை ஏவல் விகுதி சேர்ந்து கெட்டிருப்பதாகவே கொள்வர்.

    முன்னிலை இடத்தில் இவ்வாறு கட்டளைப் பொருளில் வரும் ஏவல் வினைமுற்றுச் சொற்கள், ஒருமை பன்மைக்கேற்ப, தனித் தனி விகுதிகளைப் பெற்று வரும். இவற்றுள், ஏவல் ஒருமை வினைமுற்றுகள் பற்றி இதுவரை பார்த்தோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:56:32(இந்திய நேரம்)