தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021322-வினை உருபுகள்

  • 2.2 வினை உருபுகள்

    • வினைச்சொல்

    ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல். வினைச்சொல் பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை, விகாரம் என்னும் ஆறு உறுப்புகளையும் பெற்றுவரும். இவ்வுறுப்புகள் குறைந்து வரும் வினைச்சொற்களும் உண்டு. என்றாலும் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்று உறுப்புகளும் முக்கியமானவை.

    பகுதி - வினையை (செயலை)க் காட்டும்
    இடைநிலை - காலத்தைக் காட்டும்
    விகுதி - திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்

    இங்கு இடைச்சொல் வரிசையில் இரண்டாவதாகச் சொல்லப்படும் வினை உருபுகளாகிய விகுதிகள் பற்றியும், இடைநிலைகள் பற்றியும் காணலாம்.


    2.2.1 வினை விகுதிகள்

    ஒருவினைச் சொல்லில் முதலில் இருப்பது பகுதி. அதனால் பகுதியை முதல் நிலை என்பர். விகுதி எப்போதும் சொல்லின் இறுதியில் இருக்கும். அதனால் அதனை இறுதி நிலை என்பர். பகுதி, விகுதியாகிய முதல் நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையில் இருப்பது இடைநிலை ஆகும். வினைச்சொல்லின் விகுதி பால், இடம் முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொல்லாகும்.

    தன்மை வினைமுற்று விகுதிகளும், முன்னிலை வினைமுற்று விகுதிகளும் எண், இடம் என்ற இரண்டை மட்டுமே காட்டும். திணையையும் பாலையும் காட்டா.

    எடுத்துக்காட்டு

    நடந்தேன்
    -
    ஏன்
    -
    தன்மை ஒருமை
    நடந்தோம்
    -
    ஓம்
    -
    தன்மைப் பன்மை
    நடந்தாய்
    -
    ஆய்
    -
    முன்னிலை ஒருமை
    நடந்தீர்
    -
    ஈர்
    -
    முன்னிலைப் பன்மை

    படர்க்கை வினைமுற்று விகுதிகள் திணை, பால், எண், இடம் என்ற நான்கையும் காட்டும்.

    செய்கிறான் - இது செய்+கிறு+ஆன் என்பதாகும். இதில்

    செய்
    -
    பகுதி (வினை /செயல்)
    கிறு
    -
    இடைநிலை (நிகழ்காலத்தைக் காட்டும்)
    ஆன்
    -
    விகுதி (திணை, பால், எண், இடம்  காட்டுகிறது)
     
    திணை
    -
    உயர்திணை
     
    பால்
    -
    ஆண்பால்
     
    எண்
    -
    ஒருமை
     
    இடம்
    -
    படர்க்கை

     ‘ஆன்’ என்னும் விகுதி பல பொருள்களைச் சுட்டி நிற்கிறது. இவ்வாறே பெண்பால் படர்க்கை விகுதிகள் (அள், ஆள்), பலர்பால் படர்க்கை விகுதிகள் (அர், ஆர், ப) ஆகியவை திணை, பால், எண், இடம் உணர்த்தும் இடைச்சொற்களாம்.


    2.2.2 காலம் காட்டும் இடைநிலைகள்

    வினைச்சொல்லில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது இடைநிலை என்று பார்த்தோம். அது காலத்தைக் குறிப்பது ஆகும். காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படும். அந்த மூன்று காலங்களுக்கும் உரிய இடைநிலைகளை இங்கே காண்போம்.

    பொதுவாக ஒரு வினைச்சொல்லுக்குப் பகுதியும் பால், இடம் காட்டும் விகுதியும் இன்றியமையாதன என்பதனை மேற்காட்டிய சான்றுகளால் தெளியலாம். மேலும் வினைச்சொல்லில் காலம் காட்டும் உருபு நடுவில் இருக்கும். அதனை இடைநிலை என்பர். (இடை = சொல்லின் நடுவில், நிலை = நிற்பது)


    • இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்

    இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக த், ட், ற், இன் ஆகியன குறிக்கப்படுகின்றன. இவ் இடைநிலைகள் இறந்த காலத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை வினைச்சொற்களைப் பகுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

    எடுத்துக்காட்டு

     
    பகுதி
    கால இடைநிலை
    விகுதி
    செய்தான்
    =
    செய்
    +
    த்
    +
    ஆன்
    உண்டான்
    =
    உண்
    +
    ட்
    +
    ஆன்
    கற்றான்
    =
    கல்
    +
    ற்
    +
    ஆன்
    ஓடினான்
    =
    ஓடு
    +
    இன்
    +
    ஆன்

    செய்து முடித்த அல்லது நிகழ்ந்து முடிந்த ஒன்றைத்தான் இறந்த காலத்தில் கூறுவோம். செய்தான் என்ற வினைச்சொல்லில் செய் என்ற பகுதிக்கும் ஆன் என்ற விகுதிக்கும் இடையில் த் என்ற இடைநிலை நின்று இறந்த காலத்தைச் சுட்டுகிறது. இதே போல, ட், ற், இன் ஆகியவையும் இறந்த காலம் சுட்டுகின்றன.


    • நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்

    நிகழ்காலத்தைக் காட்டும் உருபுகளாகக் கிறு, கின்று, ஆநின்று என்னும் மூன்று உருபுகள் குறிக்கப்படுகின்றன. உண்கிறான், உண்கின்றான், உண்ணா நின்றான் என்பன நிகழ்கால வினை முற்றுகள். கிறு, கின்று என்னும் இடைநிலைகள் இன்று வழக்கில் உள்ளன. ஆநின்று என்னும் (உண்ணா நின்றான்) இடைநிலை உலக வழக்கில் இன்று இல்லாதது.

    எடுத்துக்காட்டு

     
    பகுதி
    கால இடைநிலை
    விகுதி
    உண்கிறான்
    =
    உண்
    +
    கிறு
    +
    ஆன்
    பாடுகின்றான்
    =
    பாடு
    +
    கின்று
    +
    ஆன்
    செய்யாநின்றான்
    =
    செய்
    +
    ஆநின்று
    +
    ஆன்

    ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருப்பதைச் சுட்டுவதற்கு, பகுதிக்கும் விகுதிக்கும் இடையே நிகழ் காலத்தைக் குறிக்கும் கால இடைநிலைகள் வந்துள்ளன.


    • எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்

    எதிர்காலத்தைக் குறிக்கும் இடைநிலைகள் ப், வ் என்ற இரண்டும் ஆகும். நிகழப்போகும் ஒரு செயலைக் கூறுவதற்கு இவ் இடைநிலைகள் பயன்படுகின்றன.

    எடுத்துக்காட்டு

     
    பகுதி
    கால இடைநிலை
    விகுதி
    காண்பான்
    =
    காண்
    +
    ப்
    +
    ஆன்
    செய்வான்
    =
    செய்
    +
    வ்
    +
    ஆன்

    காண், செய் என்னும் வினைப்பகுதிகள் பால், இட விகுதிகளோடு இணையும்பொழுது இடையில் ப், வ் என்னும் கால இடைநிலைகள் நின்று எதிர்காலத்தை உணர்த்தின.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வேற்றுமை உருபு என்றால் என்ன?
    2.
    வேற்றுமை உருபுகள் இடைச்சொல் ஆவது எங்ஙனம்?
    3.
    ஒரு வினைச்சொல்லில் இருக்க வேண்டிய முக்கியமான மூன்று உறுப்புகள் யாவை?
    4.
    படர்க்கை வினைமுற்று விகுதிகள் எவற்றையெல்லாம் உணர்த்தும்?
புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 18:26:55(இந்திய நேரம்)