Primary tabs
4.0 பாட முன்னுரை
இடைக்காலத் தமிழில் சோழர் காலத் தமிழை நடு இடைத்தமிழ் என்று கூறலாம். இச்சோழர் காலம் அரசியல், சமூகம், பண்பாடு போன்ற எல்லா நிலைகளிலும் வளர்ந்து இருந்ததைப் போலவே, மொழியிலும் வளர்ந்து மாற்றத்தைப் பெற்றிருந்தது. சைவ, வைணவ சமயங்களும். சமண, பௌத்த மதங்களும், தமிழன்னைக்குப் பற்பல காப்பிய, புராண, சிற்றிலக்கிய, இலக்கணங்களைப் படைத்துப் பெருமை சேர்த்தன. இதனால் சோழர் காலமானது தமிழிலக்கிய வரலாற்றின் பொற்காலமாகக் கருதப்படும். இக்காலக் கட்டத்தில் மொழியில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. செந்தமிழ் நடையின் இடையே மணிப்பிரவாளம் என்னும் கலப்பு நடையில் நூல்கள் இயற்றப்படத் தொடங்கிய காலம் அது. வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றிய பல இலக்கண நூல்கள் தமிழில் வெளிவந்த காலம் அது. எனவே, இத்தகைய சூழலில் ஏற்பட்ட மொழி மாற்றங்களை விளக்குவதாக இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.