Primary tabs
-
3.6 நாட்டுப்புற வழக்காறுகளில் மருத்துவம்
நாட்டுப்புற மருத்துவம் பற்றிய குறிப்புகளை நாட்டுப்புற மக்கள் எவ்வாறெல்லாம் தங்களுடைய வாய்மொழி இலக்கியங்களான பாடல்கள், பழமொழிகள் மற்றும் நம்பிக்கைகளில் பதிவுசெய்து பாதுகாத்து வந்துள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. சில சான்றுகளைப் பார்ப்போம்.
மருத்துவப் பழமொழிகள்
பழமொழிகளில் மருத்துவக் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை:
1) பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
2) சனிதோறும் நீராடு
3) ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டும் போக்கும்
4) ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
5) நோயைக் கட்ட வாயைக் கட்டு
6) நாற்பது வயதில் நா குணம்
7) ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
8) பிள்ளை இல்லையென்றால் முல்லையாற்றில் முழுகு (குளி)போன்றனவாகும்.
ஒரு தாயின் தாலாட்டு குழந்தைக்கு மருத்துவம் கூறுகிறது
வயிற்றுலைச்சல் மிஞ்சிப்போய் - கண்ணே உனக்கு
வயிற்றுவலி வந்திருச்சா
வெற்றிலையும் உப்பும் வச்சு -கண்மணியே
வெறுவயிற்றில் தின்னிடம்மாஎன்ற பாடல் வயிற்று வலிக்கு மருந்து சொல்கிறது.
மருத்துவ நம்பிக்கைகள்
நாட்டுப்புற மக்களை நம்பிக்கைகளே வழிநடத்துகின்றன. மருத்துவம் குறித்தும் இம்மக்களிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன.
1) அமாவாசை நாளில் நோய் தீவிரமாகும்.
2) கை, கால்களில் ஏற்படும் சுளுக்கு இரட்டைப் பிறவியர் தடவினால் நீங்கும்.
3) தெய்வக் குற்றங்களால் நோய் ஏற்படும்.
4) தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செய்தால் நோய்கள் நீங்கும்.
5) ஏவல், பில்லி, சூனியம். தீய ஆவிகள் இவற்றால் நோய்கள் வரும்.இத்தகைய நம்பிக்கைகள் இன்றளவும் நாட்டுப்புற மக்களிடம் நிலவுகின்றன.