தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    இலக்கிய வளமும் இனிமையும் கொண்டது தமிழ்மொழி. இலக்கிய வகைகள் பலவற்றையும் எண்ணற்ற இலக்கியச் செல்வங்களையும் தமிழ்மொழியில் காணலாம். அவற்றுள் அற இலக்கியங்கள் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கும் இலக்கிய வகையாகும்.

    • பதினெண்கீழ்க்கணக்கில் அறம்

    பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூல்களின் இயல்புக்கேற்பவும், பாடல் அடிகளின் அளவிற்கேற்பவும் பாகுபாடு செய்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகையெனத் தொகுத்தனர். மேலும் மேற்கணக்கு நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள் என்று பாடல் அடிகளின் அளவைக் கொண்டும் பகுத்தனர்.

    இவற்றுள் நான்கடிக்கு மேல் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டவை மேற்கணக்கு எனப்படும். நான்கடிக்குள் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டவை கீழ்க்கணக்கு எனப்படும். மேல் என்றால் பெரிது என்றும் கீழ் என்றால் சிறிது என்றும் பொருள்படும். கணக்கு என்பது நூலைக் குறிக்கும்.

    பதினெண் மேற்கணக்கு பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாம். கீழ்க்கணக்கு திருக்குறள் முதலாகக் கைந்நிலை ஈறாக உள்ள  பதினெட்டு நூல்களுமாம். எனவே இவை பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

    நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
    பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
    இந்நிலைய காஞ்சி யுடன் ஏலாதி என்பவே
    கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

    என வரும் பழைய பாடலொன்று பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களைக் குறிப்பிடுகிறது. இதனை நீங்கள் நினைவு வைத்துக் கொள்கிறீர்களா?

    • முப்பாலும் நாலடியும்

    முப்பால் (திருக்குறள்), நாலடி என்ற இரண்டு நூல்களும் உறுதிப் பொருள்களைப் பால், இயல் என்னும் அதிகாரங்களாக வகுத்துக் கூறுகின்றன. இன்னாமை இவை எனக் கூறுவது இன்னா நாற்பது. இனியவை இவை எனக் கூறுவது இனியவை நாற்பது. பெரும்பாலும் நிலையாமையைக் கூறுவது முதுமொழிக்காஞ்சி என்ற நூல். பழமொழி முற்காலத்துத் தமிழ் நாட்டில் வழங்கிய பழமொழிகள் பலவற்றைச் செய்யுளின் ஈற்றடியில் வைத்துச் சொல்ல வந்த கருத்தை விளக்குகிறது.

    நான்மணிக்கடிகை அறிய வேண்டிய உறுதிப்பொருள்களில் நான்கினை ஒவ்வொரு பாடலிலும் விளக்குகின்றது. ஆசாரக்கோவை, அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய நெறிகளைத் தொகுத்து உணர்த்துகிறது. திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி இவை மூன்றும் நோய் நீக்கும் மருந்துப் பெயர்களை மேற்கொண்டு உயிர்க்கு நலமான பொருட்களை முறையே மூன்று, ஐந்து, ஐந்தின் மேற்பட்டனவாக அமைத்து மொழிகின்றன என்பர் அறிஞர் வையாபுரிப்பிள்ளை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:08:11(இந்திய நேரம்)