Primary tabs
-
3.4 இடையின மெய்களின் பிறப்பு
வல்லின மெல்லின மெய்யெழுத்துகளின் பிறப்பினைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கண்டோம். மெய்யெழுத்துகளில் இனி எஞ்சி இருப்பவை இடையின எழுத்துகள் ஆகும். இடையின எழுத்துகள் ய், ர், ல், வ், ழ், ள் என்ற வரிசையில் அமைந்துள்ளன. இவை பிறப்பதற்கு ஒலி உறுப்புகள் செயற்படும் முறையை இனிக் காண்போம்.
ஆறு இடையின எழுத்துகள் அவை பிறக்கும் இயல்பிற்கு ஏற்ப நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
(1)ய்(2)ர் ழ்(3)ல் ள்(4)வ்என்பன.
3.4.1 தொல்காப்பியமும் நன்னூலும்
இடையின மெய்களின் பிறப்பினை விளக்குவதில் தொல்காப்பியமும் நன்னூலும் பெரிதும் வேறுபடவில்லை. எனவே, அவை ஒவ்வொரு இடையின மெய்யெழுத்தினையும் விளக்குவதைச் சேர்த்தே அறிந்து கொள்ளலாம்.
3.4.2 யகர மெய்யெழுத்தின் பிறப்பு
யகர மெய், மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது, கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
யகர மெய் பிறப்பதை நன்னூலும்,
அடிநா அடிஅணம் உறயத் தோன்றும் (நூற்பா. 81)
என்ற நூற்பாவில் விளக்குகின்றது. நாக்கின் அடியானது மேல்வாய் அடியைச் சென்று பொருந்த யகரம் பிறக்கும் என்று நன்னூல் சுருக்கமாகக் கூறுகின்றது.
மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர், ழ் மெய்கள் தோன்றுகின்றன எனத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன.
ரகர, ழகர மெய்களின் பிறப்பினை நன்னூல்,
அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் (நூற்பா. 82)
என்று கூறுகின்றது.
3.4.4 ல் ள் - மெய்களின் பிறப்பு
ல் ள் என்னும் இரண்டு இடையின மெய்களும் உச்சரிப்பில் சிறிதளவே வேறுபாடு உடையவை. எனினும் அவற்றிற்கு இடையில் வேறுபாடு தோன்றுமாறு ஒலித்துப் பழகுவதே சிறப்பு.
மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும். இதனை,
நன்னூல் பின்வரும் நூற்பாவில் விளக்குகின்றது.
அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (நூற்பா. 83)மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது. இதனைத் தொல்காப்பியம்,
பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும் (எழுத்து. 3 : 98)
என்று கூறுகிறது.
இக்கருத்தையே நன்னூலும்,
மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே (நூற்பா. 84)
என்று விளக்கிக் கூறுகின்றது.
தொல்காப்பியம் பல், இதழ் என்று பொதுவாகக் கூறியிருப்பதைச் சற்று விளக்கமாக மேற்பல் என்றும் கீழ் இதழ் என்றும் நன்னூல் பிரித்துக் காட்டி விளக்கியுள்ளதை உணர வேண்டும்.