தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகாப்பதம்

  • 5.1 பகாப்பதம்

    இப்பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைளைக் காண்போம். பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

    5.1.1 பகாப்பதத்தின் இலக்கணம்

    பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும். அது இடுகுறியாக வழங்கிவரும்; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக அமைந்திருக்கும். (இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல்).

    எடுத்துக்காட்டு :

    ‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை, பொழிகிறது என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது, ஆகவே ‘மழை‘ , ‘பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும்.

    இப் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,

    (1)
    பெயர்ப்பகாப்பதம்
    (2)
    வினைப் பகாப்பதம்
    (3)
    இடைப் பகாப்பதம்
    (4)
    உரிப் பகாப்பதம்

    ஆகியன.

    5.1.2 பகாப்பதத்தின் வகைகள்

    (1) பெயர்ப் பகாப்பதம்:

    பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    நிலம், நீர், நெருப்பு, காற்று என வருவன.

    (2) வினைப் பகாப்பதம்:

    வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    நட, வா, உண், தின் முதலியன.

    (3) இடைப்பகாப்பதம் :

    இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    மன், கொல், போல், மற்று என்பன.

    (4) உரிப் பகாப்பதம் :

    உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.

    எடுத்துக் காட்டுகள் :

    கூர், மிகு, உறு, தவ, நனி, கழி,

    மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது.

    பகுப்பால் பயனற்று இடுகுறியாகி
    முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
    பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம்     (131)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:28:06(இந்திய நேரம்)