Primary tabs
3.7 தொகுப்புரை
சமூகம் நன்கு விளங்க அறநூல்கள் தேவை. தனி மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க அறநூல்கள் அடிப்படையாகும். இவ்வகையில் பலப்பல நூல்கள் தமிழகத்தில் தோன்றி தமிழர் பண்பாட்டைக் காத்துவந்துள்ளன. கள் மனிதனின் அறிவைக் கெடுப்பது. அதனைக் குறித்துப் பத்துக் குறள்பாக்களில் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கண்டீர்கள். திருவள்ளுவர்தான் கள்ளுண்ணுதலை முதன் முதலாகக் கண்டித்த அறநூல் ஆசான். ஒருவன் - ஒருத்தி என்ற நிலையில் வாழும் இல்லறமே உயர்ந்தது என்பதையும் திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார். எல்லா உயிர்க்கும் அருள் உணர்வு பூண்டு வாழ்வதே துறவறம். திருக்குறளுக்குப் பின்வந்த அறநூல்கள் பலவும் பண்பாடு மிக்க வாழ்க்கை நடத்தத் தேவையான நீதிகளை வற்புறுத்தியுள்ளன. இவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.