Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.திணை மயக்கம் என்பதைச் சான்றுடன் விளக்குக.
திணை மயக்கத்திற்குக் கீழ்க்காணும் செய்யுள் உதாரணமாக அமையும்:
புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை
வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்றுகெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே(ஐங்குறுநூறு, 265)
விளக்கம்: இப்பாடல்களில் இடம்பெற்ற முப்பொருள்களாவன:
முதற்பொருள்
குன்று (மலை)
இது குறிஞ்சித் திணை
கருப்பொருள்
புலி, பன்றி
இவையும் குறிஞ்சித் திணைக்கு உரியவை
உரிப்பொருள்
புதல்வனையும், என்னையும் விட்டுவிட்டுத் தலைவன் வேறிடம் சென்று விட்டான் என்று கூறித் தலைவி பிணக்குக் கொள்வது (ஊடல்)
இது மருதத் திணைக்கு உரியது.
இப்பாடலில் குறிஞ்சித் திணையில் மருதத்திற்கு உரிய உரிப்பொருளாகிய ஊடல் மயங்கி வந்துள்ளதை மேற்காணும் விளக்கம் நன்கு புலப்படுத்தும்.