தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0212660-6.2 வரையறைகள்

  • 6.2 வரையறைகள்

    அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    (1)

    முதற்பொருள்
    :

    நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்

    (2)

    சிறு பொழுது
    :

    ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு

    (3)

    பெரும் பொழுது
    :

    ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்

    (4)

    கருப்பொருள்
    :

    ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.

    (5)

    உரிப்பொருள்
    :

    ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.

    (6)

    நிமித்தம்
    :

    அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்

    (7)

    கைகோள்
    :

    தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்

    (8)

    களவு
    :

    மறைமுகக் காதல் வாழ்க்கை

    (9)

    கற்பு
    :

    வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை

    (10)

    கைக்கிளை
    :

    தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்

    (11)

    பெருந்திணை
    :

    பொருத்தம் இல்லாத காதல்

    (12)

    குறிப்பறிதல்
    :

    தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.

    (13)

    இயற்கைப் புணர்ச்சி
    :

    தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.

    (14)

    இடம் தலைப்பாடு
    :

    தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.

    (15)

    பாங்கன் கூட்டம்
    :

    தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

    (16)

    பாங்கியிற் கூட்டம்
    :

    தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

    (17)

    உள்ளப் புணர்ச்சி
    :

    தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.

    (18)

    மெய்யுறு புணர்ச்சி
    :

    உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை

    (19)

    பூத்தரு புணர்ச்சி
    :

    தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

    (20)

    புனல் தரு புணர்ச்சி
    :

    தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

    (21)

    களிறு தரு புணர்ச்சி
    :

    தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.

    (22)

    மதியுடன்பாடு
    :

    தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.

    (23)

    நேர்தல்
    :

    பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.

    (24)

    முன்னுற உணர்தல்
    :

    தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.

    (25)

    குறையுற உணர்தல்
    :

    தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.

    (26)

    சேட்படை
    :

    தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

    (27)

    குறைநயப்பித்தல்
    :

    தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.

    (28)

    மடல்
    :

    பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.

    (29)

    மடல் கூற்று
    :

    தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.

    (30)

    மடல் விலக்கு
    :

    தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.

    (31)

    குறி இடம்
    :

    தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.

    (32)

    பகற்குறி
    :

    பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.

    (33)

    இரவுக் குறி
    :

    இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்

    (34)

    குறி இடையீடு
    :

    தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.

    (35)

    அல்லகுறிப் படுதல்
    :

    இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.

    (36)

    அறத்தொடு நிற்றல்
    :

    தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.

    (37)

    முன்னிலை மொழி
    :

    ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.

    (38)

    முன்னிலைப் புறமொழி
    :

    ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.

    (39)

    இற்செறிப்பு
    :

    தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.

    (40)

    அறப்புறம் காவல்
    :

    அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.

    (41)

    வாயில்கள்
    :

    தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.

    (42)

    வரைவு கடாதல்
    :

    தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.

    (43)

    வரைவு மலிதல்
    :

    திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.

    (44)

    ஆற்றாமை
    :

    தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.

    (45)

    உவர்த்தல்
    :

    தலைவனது களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.

    (46)

    செலவு அழுங்குதல்
    :

    தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.

    (47)

    வன்புறை - 1
    :

    தலைவியின் ஐயத்தைத் தீர்க்கும் நோக்கில் தலைவன் உண்மையை வற்புறுத்திக் கூறுதல்.

    (48)

    வன்புறை - 2
    :

    தோழி, தலைவியை இடித்துரைத்து அறிவுரை கூறுதல்.

    (49)

    வன்புறை - 3
    :

    தலைவனது பிரிவு அவசியமானது; அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே பொருத்தமுடையது என்று தோழி கூறுதல்.

    (50)

    வன்பொறை
    :

    தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல்.

    (51)

    மருளுற்று உரைத்தல்
    :

    தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மயக்கம் கொண்டு பேசுதல்.

    (52)

    தெருளுற்று உரைத்தல்
    :

    தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் தெளிவு பெற்றுப் பேசுதல்.

    (53)

    தெய்வம் தெளிதல்
    :

    இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத் தன்னோடு இணைத்த தெய்வம் இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும் என்று தலைவன் தெளிவுடன் பேசுதல்.

    (54)

    விடை தழாஅல்
    :

    தலைவன் ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்றும் கூறுவர்.

    (55)

    குற்றிசை
    :

    தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.

    (56)

    குறுங்கலி
    :

    தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.

    (57)

    சுரநடை
    :

    தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.

    (58)

    முதுபாலை
    :

    தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.

    (59)

    தாபத நிலை
    :

    தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.

    (60)

    தபுதார நிலை
    :

    தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.

    (61)

    போக்கு
    :

    தலைவன் தலைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே உடன்போக்கு என்றும் கூறப்படும்.

    (62)

    கற்பொடு புணர்ந்த கவ்வை
    :

    தலைவியின் காதலைப் பற்றிப் பலர் பேசும் அலர் எழுந்து அதன் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள்.

    (63)

    மனை மருட்சி
    :

    இதனை அனை மருட்சி என்றும் கூறுவர். நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு தலைவியின் பிரிவிற்காக வருந்துதல்.

    (64)

    மீட்சி - (1)
    :

    உடன்போக்காகச் சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி அவளைக் காணாமல் திரும்பி வருதல்.

    (65)

    மீட்சி - (2)
    :

    உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதல்.

    (66)

    பிரமம்
    :

    தகுதியுடைய பிரம்மசாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.

    (67)

    பிரசாபத்தியம்
    :

    தலைவன் தலைவி இருவரது பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.

    (68)

    ஆரிடம்
    :

    ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.

    (69)

    தெய்வம்
    :

    வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.

    (70)

    கந்தர்வம்
    :

    கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.

    (71)

    ஆசுரம்
    :

    பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை வாங்கி மணந்து கொள்வது.

    (72)

    இராக்கதம்
    :

    தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.

    (73)

    பைசாசம்
    :

    உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக் களிப்பது.

    (74)

    செவ்வணி
    :

    பூப்பெய்திய தலைவி நீராடியதை அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச் சிவப்பு ஆடையும், சிவந்த அணி மணிகளும் அணிவித்தல்.

    (75)

    வெள்ளணி
    :

    புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் கடந்து நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி மூலமாகத் தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு வெள்ளாடை, வெள்ளை அணிகளை அணிவித்தல்.

    (76)

    புனைந்துரை
    :

    அகப்பாடலின் நாடகப் பாங்கினைக் குறிப்பது, கற்பனையானது.

    (77)

    உலகியல்
    :

    உலகியல்பை உள்ளவாறே அகப்பாடலில் அமைப்பது.

    (78)

    பாலது ஆணை
    :

    முன்பின் அறிமுகம் இல்லாத தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும் ஊழ்.

    (79)

    யாழோர் கூட்டம்
    :

    கந்தர்வர் எனப்படும், வானில் திரியும் தலைமக்கள் கூடி மகிழ்வது.

    (80)

    கிளவித் தொகை
    :

    அகப்பொருள் செய்திகளைப் பிரித்து விளக்கும் துறைத் தொகுதி.

    (81)

    கிளவித் தலைவன்
    :

    அகப்பாடலில் இயற்பெயர் சுட்டப் படாமல் இடம்பெறும் தலைவன்.

    (82)

    பயன்
    :

    அகப்பாடலில் ஒருவர் கூற்று நிகழ்த்த அதனால் அடையும் பயன்.

    (83)

    முன்னம்
    :

    ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும் செய்தி.

    (84)

    மெய்ப்பாடு
    :

    உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது.

    (85)

    எச்சம்
    :

    சொல்லோ, கருத்தோ விடுபட்டு நின்று அதையும் உணர்ந்து பொருள் கொள்ளும் இலக்கண அமைப்பு.

    (86)

    உள்ளுறை
    :

    புலவன் தான் சொல்லுகிற உவமத்தோடு ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் அணி அழகு.

    (87)

    இறைச்சி
    :

    புலவன் செய்யுளில் கூறிய பொருளுக்குப் புறத்தேயும் வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது.

    (88)

    திணை மயக்கம்
    :
    முதற்பொருளும், கருப்பொருளும் ஒரே திணைக்கு உரியதாக அமைய, உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு திணைக்குரியதாக மாறியிருப்பது.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:01:32(இந்திய நேரம்)