Primary tabs
-
6.2 வரையறைகள்
அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
(1)
முதற்பொருள்:நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்
(2)
சிறு பொழுது:ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு
(3)
பெரும் பொழுது:ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்
(4)
கருப்பொருள்:ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.
(5)
உரிப்பொருள்:ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.
(6)
நிமித்தம்:அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்
(7)
கைகோள்:தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்
(8)
களவு:மறைமுகக் காதல் வாழ்க்கை
(9)
கற்பு:வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை
(10)
கைக்கிளை:தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்
(11)
பெருந்திணை:பொருத்தம் இல்லாத காதல்
(12)
குறிப்பறிதல்:தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.
(13)
இயற்கைப் புணர்ச்சி:தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.
(14)
இடம் தலைப்பாடு:தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.
(15)
பாங்கன் கூட்டம்:தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.
(16)
பாங்கியிற் கூட்டம்:தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.
(17)
உள்ளப் புணர்ச்சி:தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.
(18)
மெய்யுறு புணர்ச்சி:உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை
(19)
பூத்தரு புணர்ச்சி:தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.
(20)
புனல் தரு புணர்ச்சி:தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.
(21)
களிறு தரு புணர்ச்சி:தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.
(22)
மதியுடன்பாடு:தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.
(23)
நேர்தல்:பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.
(24)
முன்னுற உணர்தல்:தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.
(25)
குறையுற உணர்தல்:தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.
(26)
சேட்படை:தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.
(27)
குறைநயப்பித்தல்:தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.
(28)
மடல்:பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.
(29)
மடல் கூற்று:தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.
(30)
மடல் விலக்கு:தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.
(31)
குறி இடம்:தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.
(32)
பகற்குறி:பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.
(33)
இரவுக் குறி:இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்
(34)
குறி இடையீடு:தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.
(35)
அல்லகுறிப் படுதல்:இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.
(36)
அறத்தொடு நிற்றல்:தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.
(37)
முன்னிலை மொழி:ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.
(38)
முன்னிலைப் புறமொழி:ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.
(39)
இற்செறிப்பு:தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.
(40)
அறப்புறம் காவல்:அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.
(41)
வாயில்கள்:தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.
(42)
வரைவு கடாதல்:தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.
(43)
வரைவு மலிதல்:திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.
(44)
ஆற்றாமை:தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.
(45)
உவர்த்தல்:தலைவனது களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.
(46)
செலவு அழுங்குதல்:தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.
(47)
வன்புறை - 1:தலைவியின் ஐயத்தைத் தீர்க்கும் நோக்கில் தலைவன் உண்மையை வற்புறுத்திக் கூறுதல்.
(48)
வன்புறை - 2:தோழி, தலைவியை இடித்துரைத்து அறிவுரை கூறுதல்.
(49)
வன்புறை - 3:தலைவனது பிரிவு அவசியமானது; அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே பொருத்தமுடையது என்று தோழி கூறுதல்.
(50)
வன்பொறை:தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல்.
(51)
மருளுற்று உரைத்தல்:தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மயக்கம் கொண்டு பேசுதல்.
(52)
தெருளுற்று உரைத்தல்:தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் தெளிவு பெற்றுப் பேசுதல்.
(53)
தெய்வம் தெளிதல்:இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத் தன்னோடு இணைத்த தெய்வம் இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும் என்று தலைவன் தெளிவுடன் பேசுதல்.
(54)
விடை தழாஅல்:தலைவன் ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்றும் கூறுவர்.
(55)
குற்றிசை:தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.
(56)
குறுங்கலி:தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.
(57)
சுரநடை:தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.
(58)
முதுபாலை:தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.
(59)
தாபத நிலை:தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.
(60)
தபுதார நிலை:தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.
(61)
போக்கு:தலைவன் தலைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே உடன்போக்கு என்றும் கூறப்படும்.
(62)
கற்பொடு புணர்ந்த கவ்வை:தலைவியின் காதலைப் பற்றிப் பலர் பேசும் அலர் எழுந்து அதன் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள்.
(63)
மனை மருட்சி:இதனை அனை மருட்சி என்றும் கூறுவர். நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு தலைவியின் பிரிவிற்காக வருந்துதல்.
(64)
மீட்சி - (1):உடன்போக்காகச் சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி அவளைக் காணாமல் திரும்பி வருதல்.
(65)
மீட்சி - (2):உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதல்.
(66)
பிரமம்:தகுதியுடைய பிரம்மசாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.
(67)
பிரசாபத்தியம்:தலைவன் தலைவி இருவரது பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.
(68)
ஆரிடம்:ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.
(69)
தெய்வம்:வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.
(70)
கந்தர்வம்:கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.
(71)
ஆசுரம்:பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை வாங்கி மணந்து கொள்வது.
(72)
இராக்கதம்:தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.
(73)
பைசாசம்:உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக் களிப்பது.
(74)
செவ்வணி:பூப்பெய்திய தலைவி நீராடியதை அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச் சிவப்பு ஆடையும், சிவந்த அணி மணிகளும் அணிவித்தல்.
(75)
வெள்ளணி:புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் கடந்து நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி மூலமாகத் தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு வெள்ளாடை, வெள்ளை அணிகளை அணிவித்தல்.
(76)
புனைந்துரை:அகப்பாடலின் நாடகப் பாங்கினைக் குறிப்பது, கற்பனையானது.
(77)
உலகியல்:உலகியல்பை உள்ளவாறே அகப்பாடலில் அமைப்பது.
(78)
பாலது ஆணை:முன்பின் அறிமுகம் இல்லாத தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும் ஊழ்.
(79)
யாழோர் கூட்டம்:கந்தர்வர் எனப்படும், வானில் திரியும் தலைமக்கள் கூடி மகிழ்வது.
(80)
கிளவித் தொகை:அகப்பொருள் செய்திகளைப் பிரித்து விளக்கும் துறைத் தொகுதி.
(81)
கிளவித் தலைவன்:அகப்பாடலில் இயற்பெயர் சுட்டப் படாமல் இடம்பெறும் தலைவன்.
(82)
பயன்:அகப்பாடலில் ஒருவர் கூற்று நிகழ்த்த அதனால் அடையும் பயன்.
(83)
முன்னம்:ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும் செய்தி.
(84)
மெய்ப்பாடு:உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது.
(85)
எச்சம்:சொல்லோ, கருத்தோ விடுபட்டு நின்று அதையும் உணர்ந்து பொருள் கொள்ளும் இலக்கண அமைப்பு.
(86)
உள்ளுறை:புலவன் தான் சொல்லுகிற உவமத்தோடு ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் அணி அழகு.
(87)
இறைச்சி:புலவன் செய்யுளில் கூறிய பொருளுக்குப் புறத்தேயும் வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது.
(88)
திணை மயக்கம்:முதற்பொருளும், கருப்பொருளும் ஒரே திணைக்கு உரியதாக அமைய, உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு திணைக்குரியதாக மாறியிருப்பது.