Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.அகப்பொருள் மரபுகள் நான்கினை எழுதுக.
(1) அகப்பொருள் பாடல்களில் இடம் பெறும் தலைவனது இயற்பெயரைக் குறிப்பிடுதல் கூடாது.
(2) தலைவன் தனக்குரிய தலைவியை மணந்துகொள்வதற்கான சூழல் வாய்க்காதபோது மடலேறுதல் என்னும் செயலை மேற்கொள்வான். பனை ஓலைகளால் செய்யப்பட்ட குதிரை வடிவத்தை ஊர் நடுவே கொண்டு வந்து நிறுத்தித் தனது காதலைப் புலப்படுத்தி அதன் மீது ஏறுவேன் என்று தலைவன் கூறுவது அல்லது செய்வது மடலேறுதல் ஆகும்.
(3) கற்பியலில் இல்லறத் தலைவி - தலைவனோடு சேர்ந்து வாழும் புணர்ச்சிக்கு ஏற்புடையவளாகத் திகழ்கிறாள் என்பதை வெளிப்படுத்துவதற்கு நெய்யாடுதல், வெள்ளணி அணிவித்தல், செவ்வணி அணிவித்தல் முதலான நிகழ்ச்சிகளை அக்காலத்தில் நடத்தி உள்ளனர். ஒவ்வொன்றும் ஒரு கால கட்டத்தில் தலைவியின் குறிப்பை வெளிப்படுத்துவதற்கான குறியீடாக அமைந்துள்ளது.
(4) தமிழ் இலக்கண மரபுப் படி துறவு என்பது மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து மிக்க காமவேட்கை தீர்ந்த பிறகே மேற்கொள்ளப்படுவதாகும். தலைவன் தலைவியோடு சேர்ந்தே அத்துறவை மேற்கொள்ளலாம் என்பதையும் இலக்கண நூலார் வலியுறுத்தியுள்ளனர்.