தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.4 கணியான் கூத்து என்னும் கதைப்பாடல்

  • 2.4 கணியான் கூத்து என்னும் கதைப்பாடல்

    கதை கூறல் (story telling) மரபில் விளங்கி வரும் கதைப்பாடல் வகையில் கணியான் கூத்து அமைந்துள்ளது. ஒரு கதையை எளிய பாடல் வடிவில் வெளிப்படுத்துவதே கதைப்பாடல் (ballad) என்றழைக்கப்படுகிறது. இது இசைப்பாடல் வகையில் அமையும்.

    இவ்வகைப்பாடல்கள் பொதுவாக மக்கள் நன்கு அறிந்த கதைகளின் மையமான உச்ச நிலையில் தொடங்கி நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் தொகுத்துத் தரவல்லனவாகும்.

    தமிழகக் கிராமக் கோவில்களில் கதைகூறல் என்னும் நிகழ்வு முக்கியமான ஒன்றாகும். இவ்வகையில் தென் தமிழகத்தில் உள்ள சுடலைமான், இசக்கி அம்மன், பிச்சைக்காலன், செங்கிடாக்காலன் ஆகிய சிறு தெய்வக் கோயில்களின் விழாக்களின் போது கணியான் கூத்து நடை பெறுகிறது. இதனைக் கணியான் ஆட்டம், மற்றும் மகுடாட்டம் என்றும் கூறுவர்.

  • பெயர்க்காரணம்


  • ‘கணியான்’ என்னும் பழங்குடி இனத்தவரால் நடத்தப் பெறுவதால் இக்கலை கணியான் கூத்து எனப் பெயர் பெறுகிறது. குமரி, நெல்லை மாவட்டங்களில் இக்கலை செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. முக்கூடற்பள்ளு, தெய்வச்சிலையார் விறலிவிடுதூது போன்ற நூல்களில் கணியான் கூத்துக் குறித்த செய்திகள் காணக்கிடைக்கின்றன.
    2.4.1 மேடை

    கணியான் கூத்துக்கான     மேடையானது கோவிலின் முன்புறத்தில் அமைக்கப்பெறும். விழாக்கால மேடையாக இது அமைவதால் இதற்கென்று எந்த அளவு கோலும் இல்லை. பொதுவாக எந்த மேடையும் கணியான் கூத்திற்கான மேடையாகப் பயன்படுத்தத்தக்கது ஆகும்.

  • ஒளியமைப்பு


  • கணியான் கூத்து நிகழ்ச்சிக்கான தனிப்பட்ட ஒளியமைப்புக் கருவிகள் ஏதுமில்லை. தற்போது மேடையில் பொதுவாக இடம் பெறும் ஒளியமைப்புக்கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன. சில காட்சிகளின் போது மங்கலான குழல் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதுண்டு. இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்துத் தொடங்குவதால் மின்சார ஒளியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

  • இசை


  • கணியான் கூத்தில் இசை மிகவும் முக்கியமாக இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். மகுடம், டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். மகுடத்தின் மரம் வேப்ப மரத்தின் வேர்ப்பகுதிகளால் செய்யப்படுகிறது. தோல் கன்றுக்குட்டியின் தோலாகும்.

    கணியான் கூத்தில் முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். ஆசிரியர் பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப்பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வருவதுண்டு.

    கர்நாடக சங்கீதம், கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும் கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறுகின்றன.

  • ஒப்பனை


  • உடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொள்வதும் கணியான் கூத்தின் ஒரு பகுதியான ‘அம்மன் கூத்தின்’ போது இலை தழைகளைக் கட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்க ஒப்பனையாக உள்ளது. மேலும் சுடலை மாடன் கோவிலில் கணியான் கூத்துக் குழுவினர் ‘வேதாள ஆட்டம்’ என்னும் நிகழ்வினை நடத்தும்போது விகாரமான தோற்றத்துடனான முகமூடியும் அணிந்து கொள்ளுவதுண்டு. மேலும் இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். நீளமான கூந்தல் கொண்டையும் விளங்கும். கழுத்தில் ஆபரணமும், கைக்கடிகாரமும் கூட கட்டப்பட்டிருக்கும்.
    2.4.2 கதை

    கணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி ஆடப்படுகிறது. கணியான் கூத்தின் கதையைக் காண்போம்.

    சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. சிவபெருமான் இரண்டு முரடர்களைப் படைத்து பூவுலகிற்கு அனுப்பினார் என்றும் அதில் ஒருவன் சுடலைமாடனாகவும் மற்றொருவன்     கணியான் ஆகவும் அழைக்கப்பெற்று, கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளில் உதவி செய்து அவன் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இது கணியான் கூத்தின் ஒரு பகுதியாக அமைந்து வருகிறது. தன் குருதி சிந்தி, சுடலைமாடனுக்கு உதவுவதைக் காட்ட, சுடலையை நோக்கி ஓடும் சுடலைமாடனுக்கு, தனது விரல் அல்லது நாக்கை அறுத்துக் குருதியை ஒர் இலையில் ஒத்திக் கொடுப்பான்.

    வெட்டிய இடத்தில் திருநீறு பூசப்படும். அப்போது பின்வரும் பாடல் பாடப்படும்.

    குருதி கொடுத்து மாடனுக்கு
    உறுதியாக உதவும் கணியான்
    பருதி இருக்கும் காலம் வரை
    இறுதி யின்றி வாழ் வானே

    கணியான் கூத்து நடக்கும் கோயிலின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலைமாடன் கதை, முத்துப்பட்டன் கதை, முத்தாரம்மன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும்.

    2.4.3 அமைப்பு

    கணியான் கூத்து இசைப்பகுதி மிகுந்து காணப்படும். கதைப்பாடல்களைப் பாடிய பின் அவற்றை ‘அண்ணாவி’ விளக்கிச் செல்வதாகக் கணியான் கூத்து அமைக்கப்பட்டுள்ளது. (அண்ணாவி - முதன்மை வேடதாரி) பாடலுக்கு நடுவே பேச்சும் கலந்து வருவதுண்டு.

  • நோக்கம்


  • சிறு தெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் ‘பேயாட்டம்’, ‘அம்மன் கூத்து’ போன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம்.

  • கால அளவு


  • இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் ‘சாமியாடி’ கணியானைக் கூப்பிடுகிறார். (வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் ‘சாமியாடி’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும்.) இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும்     சாமியாடி     தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது.

    தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை.
    2.4.4 நடத்து முறை

    கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் ‘அண்ணாவி’ எனப்படுவார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர்.

    கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு.

    கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொணடு தோற்றமளிப்பார்கள்.

    ‘அண்ணாவி’ முதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படுகிறது. பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. தங்களது கால் சதங்கையை மட்டும் தட்டி ஒலி எழுப்புவர்.

    பொதுவாக, பெண் வேடதாரிகளின் நடனத்தில் பாத வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. வேகமான பாத அசைவுகளில் தேர்ந்து விளங்குகிற கலைஞர்களாக இவர்கள் உள்ளனர்.

    இது தெய்வ     வழிபாட்டோடு இயைந்த கலையாக விளங்குவதால் சில சடங்குகளும் இக்கூத்தின் வாயிலாகப் படைக்கப்படுகின்றன.     இவற்றில்     குறிப்பிடத்தக்கது இரத்தப்பலியிடுதல் என்னும் ‘கைவெட்டு’ நிகழ்ச்சியாகும்.

    இவ்வகையில் ஒரு கதையானது கூத்து, சடங்கு என்னும் இருவகைப் படிநிலைகளில்     கோவில் விழாவின்போது செயல்படுவதைக் காணலாம்.

    2.4.5 பயன்பாடு

    வழிபாட்டுக் கலையாக விழாக்காலங்களில் இடம்பெறும் கணியான் கூத்தின் பயன்பாட்டு நிலைகள் என்னவெனக் காண்போம்.

    அடித்தட்டு மக்கள் நடத்திக்காட்டும் ஒரு கூத்துக் கலையானது சிறு தெய்வ வழிபாட்டில் கொண்டுள்ள பெரும்பங்கையும் முக்கியத்துவத்தையும் கணியான் கூத்து அறியத் தருகிறது.

    பல்வேறு இசைக் கூறுகளை இசைப்பாடல் தன்மைக்கு ஏற்ப இராகத்துடன் பாடும் ஒரு தலைமைக் கலைஞரைச் (அண்ணாவி) சுற்றியே கதை நிகழ்வு அமைவது, குறிப்பிடத்தக்க மேடை நிகழ்வு ஆகும்.

    1.
    சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாக விளங்கும் குறிப்பிடத்தக்க விழாக்கள் எவை?
    2.
    தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த சிற்றூர் நாடக வடிவம் எது?
    3.
    குறிப்பிடத்தக்க தெருக்கூத்துக் கதைகள் மூன்றன் பெயர்களைத் தருக.
    4.
    கதைப்பாடல் - குறிப்புத் தருக.
    5.
    கணியான் கூத்தின் முதன்மைக் கலைஞர் என்ன பெயரால் அழைக்கப்படுகிறார்?
    6.
    கணியான் கூத்தில் எத்தனைக் கலைஞர்கள் பெண் வேடமிடுவர்?
புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 12:33:56(இந்திய நேரம்)