Primary tabs
-
2.2 மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
திறனாய்வின் பணி, இலக்கியத்தை மதிப்பீடு (Evaluation) செய்கிற பண்பினை அடியொற்றியது ஆகும். இலக்கியத்தைப் பகுத்தாய்வதும் விளக்கியுரைப்பதும் அதனுடைய சமுதாய நிலைகளையோ, உளவியல் பண்புகளையோ அளவிட்டுரைப்பது மட்டுமல்ல; அதே தளங்களிலிருந்து அவ்விலக்கியத்தை மதிப்பிட்டுரைப்பதும் ஆகும். உதாரணமாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய செய்திகள் எவ்வளவு ஆழமாகவும், உண்மையாகவும், திறம்படவும் சொல்லப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் அவ்விலக்கியத்தை மதிப்பிடலாம். இவ்வாறு மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும்.
திறனாய்வின் பல அணுகுமுறைகளின் போக்கிலும் நோக்கிலும், மதிப்பீட்டு முறை என்பது அடிநாதமாக விளங்குகிறது. காட்டாகப், புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் ஒன்றான கயிற்றரவு எனும் கதையில் அத்துவைத தத்துவம் இருக்கிறது; அதனைத் தத்துவ நோக்கில் ஆராய்கிற போது, அதன்வழி அந்தக் கதை மதிப்பிடவும்படுகிறது.
மதிப்பீட்டுத் திறனாய்வு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் பிறவும் இலக்கிய மதிப்பு (Literary value) உடையவை என்பதையும் பேசுகிறது. இலக்கிய மதிப்பு என்பது மேலே குறிப்பிட்ட கூறுகளும் பண்புகளும், பிறவும் இலக்கியமாகியிருக்கின்ற கலைநேர்த்தி பற்றியது ஆகும்.
ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் நிறை குறைகளைக் கண்டு, குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்கன கொண்டு அது இத்தகையது என மதிப்பீடு செய்தல், மதிப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஆகும்.
பல இலக்கியங்களுக்குப் பொதுவாகவும், பலராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், அதேபோது, குறிப்பிட்ட இலக்கியத்திற்கு மிகவும் ஏற்புடையதாகவும் சிறப்புடையதாகவும் கருதப்படுவது இலக்கிய மதிப்பீடு எனப்படும். சொல்கிற செய்தி, சொல்லப்படுகிற உத்தி, உள்ளடக்க வீச்சு, செய்ந்நேர்த்தி முதலியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புக் கூறு அல்லது பண்பு அமைந்திருப்பது, இலக்கிய மதிப்பு எனப்படுகிறது. அத்தகைய மதிப்பினை இனங்கண்டறியவும், திறனறிந்து கூறவும் வழித்துணையாக இருப்பதே மதிப்பீட்டு முறையாகும். இதுவே இதன் அளவுகோல் ஆகும்.
- ஓர் எடுத்துக்காட்டு
ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ்மதிப்புப் பற்றிய கணக்கீடும், தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடும் திறனாய்வுக் கோட்பாட்டின் இரண்டு தூண்கள் என்று மதிப்பீட்டு முறைத் திறனாய்வு பற்றி ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறுவார். சங்க இலக்கியத்திலிருந்து நாம் ஓர் எடுத்துக்காட்டுத் தரலாம்.
“சுடர்த்தொடீஇ களோய்” எனத் தொடங்கி “நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என முடியும் கபிலரின் குறிஞ்சிக்கலிப் பாடல் (பா.51), தான் காதலுற்ற செய்தியினைத் தலைவி, தோழியிடம் கூறுவதாக அமைந்தது. இப்பாடலில் தலைவனின் குறும்பு, தலைவியின் மென்மையான உரைப்பாங்கு, தாயின் பரிவு, அவர்கள் வாழும் சமுதாயத்தின் ஒழுக்கம் ஆகியவை ஆழமாகவும் உண்மையாகவும் சொல்லப் பட்டிருக்கின்றன. இப்பாடலில் உள்ளமைந்த மதிப்பு என்ன?
“தோழீ! கேட்பாயாக. அன்னையும் யானும் இல்லின்கண் இருந்தோம். ‘இல்லீரே! உண்ணுநீர் வேட்டேன்’ எனச்சொல்லி வாயில் முன் வந்து நின்றவனுக்கு, அன்னை, ‘பொற்குவளையில் வார்த்து உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள். யானும் என்னை அறியாமல் சென்றேன். சென்ற பின்னர் அவன் என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்ற, யானோ அச்சத்தால் நடுங்கி, ‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றதும், உள்ளிருந்த அன்னை அலறிக்கொண்டே ஓடிவந்தாள். அதற்குள், அவன் செய்ததை மறைத்து, அன்னையிடம் ‘உண்ணுநீர் விக்கினான்’ என்று ஓர் பொய்யைச் சொன்னேன். அன்னையும் அவனுடைய முதுகை நீவிக் கொடுக்க, அவனோ என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல நோக்கி நகைக்கூட்டம் செய்தான்.”
இப்பாடலின் அமைப்பில், கதை சொல்லுகின்ற பாணி, நாடகப் பாங்கு மற்றும் நகை, இவற்றோடு மெல்லிய தூய்மையான காதல் உணர்வுகள் ஆகியவை இலக்கிய மதிப்புகளாய் அமைந்துள்ளன.
-