தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒப்பீட்டுத் திறனாய்வு

    • 2.3 ஒப்பீட்டுத் திறனாய்வு

          இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களை ஒரு சேர வைத்து,    அவற்றிற்கிடையேயுள்ள     ஒப்புமையையும், வேற்றுமையையும் பார்ப்பது மனித இயல்பு. அதுபோலவே, கலை இலக்கியங்களுக்கிடையே ஒன்றுபட்ட பண்புகளைப் பார்ப்பது என்பது படிப்பவரின் மன இயல்பு. ஒப்பிடுவது என்பது சில கூறுகளில் வேறுபட்டும் சிலவற்றில் ஒன்றுபட்டும் இருக்கின்ற இரண்டு பொருட்களின் மேல் நிகழ்த்துகின்ற ஒரு செயல். ஒப்புமைக்கு நேர்மாறான பொருள் சாத்தியம் இல்லை. இரண்டு பொருள்களின் ஒத்த தன்மைகள் ஒப்பீட்டு முறைக்கு வாய்ப்பாக அமையும். ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று பேசுவது அல்ல. ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு     ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தியே ஆகும்.

      2.3.1 ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள்
      (1)
      ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் அல்லது பின்புலத்தில் பிறக்கும் இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும்.
      (2)
      ஏற்புத் திறனைச் சார்ந்து, ஓர் இலக்கியம் இன்னோர் இலக்கியத்தைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தக்கூடும்.
      (3)
      மொழியாலும், இனத்தாலும் அரசியல்-புவியியல் பரப்பாலும் வேறுபட்டாலும் அத்தகைய வரையறைகளை மீறி, இலக்கியங்கள் தமக்குள் ஒன்றுபட்ட பண்புகளையும் பயன்களையும் பெற்றிருக்கக் கூடும்.
      (4)
      ஒன்றுபட்டும் வேறுபட்டும் அமைகிற பின்புலங்களிலிருந்து பார்க்கிறபோது, குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும் கூறுகளும் தெளிவாகவும் விளக்கமாகவும் காணக்கூடும்.

          இந்தக் கருத்து நிலைகளே ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள்கள் ஆகும்.

      2.3.2 ஒப்பிடுவதற்குக் காரணம்
      (1)
      ஒன்றனை ஒன்று ஒப்பிடுவதற்குக் காரணம் குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளை மேலும் சரியாகவும், நிறைவாகவும் புரிந்து கொள்ளவும் பிறர்க்கு விளக்கவும் உதவும்.
      (2)
      ஒரு புதிய கோணத்தில், இலக்கியப் பொதுமைப் பண்புகளின் பின்னணியில் ஒப்பீட்டுத் திறனாய்வு செய்கின்ற போது, அந்த இலக்கியம் ஏற்புடைய தளத்தில் வைத்துத் திறனாய்வு செய்யப்படுகின்றது.
      (3)
      இது மதிப்பீட்டு முறையில் வரையறை செய்யப்படுகின்றது.
      (4)
      இந்த ஒப்பீட்டின் மூலம் குறிப்பிட்ட இலக்கியம் பெற்றிருக்கின்ற குறிப்பிட்ட தளத்தை அறிய முடிகிறது.
      2.3.3 தமிழில் ஒப்பிலக்கியம் வளர்ந்த நிலை
      (1)
      தமிழ் உரையாசிரியர்களிடம், தாம் கூறும் உரைக்கும் நூலுக்கும் இணையான பிற இலக்கிய, இலக்கண மேற்கோளை ஒப்பீட்டு முறையில் எடுத்துக்காட்டுகின்ற போக்கு இருக்கின்றது. இதன் மூலம் ஒப்பீட்டு முறை, பழங்காலந்தொட்டே இருத்தலை அறிய முடிகிறது.
      (2)
      ஒப்பீட்டு முறை, மேலை நாட்டுக்கல்வி மற்றும் அந்த நாட்டு இலக்கியங்களின் வரவு முதலியவை காரணமாக 19ஆம் நூற்றாண்டில் மேலும் வளர்ந்தது.
      (3)
      கிரேக்க இலக்கியமும் தமிழ் இலக்கியமும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும், சமுதாய நிலையிலும் பெரும் ஒற்றுமைகள் பெற்றிருக்கின்றன என்று க.கைலாசபதி விளக்கிக் கூறுகிறார்.
      பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
      (4)
      பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, காவிய காலம் என்னும் தனது நூலில் கிரேக்கக் காவியம், காவியக் கூறுகள், பண்புகள், அமைப்பு நிறைவுகள் முதலியவை தமிழ்க் காவியங்களோடு ஒத்துள்ளன ; வேறுபட்டும் உள்ளன என்று கூறுகிறார்.
      (5)
      வ. வே. சு. ஐயரின் ‘Kamba Ramayana - A Study’ எனும் நூல் கம்பனை வால்மீகியுடனும் மில்டனுடனும் ஒப்பிடுவது, ஒப்பீட்டுத்துறைக்கு மேலும்ஒருநல்ல உதாரணம் என்று கூறலாம்.
      ஷெல்லி
      (6)
      தொ.மு.சி. ரகுநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், க.செல்லப்பன் வை. சச்சிதானந்தன், முதலியஅறிஞர்கள் தமிழ்க் கவிஞர்களை ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் முதலிய மேலை நாட்டுக் கவிஞர்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
      கல்கி
      (7)
      கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் முதலிய தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களை, ஸ்காட், டி.எச்.லாரன்ஸ், மாப்பசான் முதலிய மேலைநாட்டு ஆசிரியர்களோடு ஒப்பிட்டுப் பல ஆய்வேடுகள் வெளிவந்துள்ளன.
      2.3.4 மேலை நாட்டில் ஒப்பிலக்கியம்
      (1)
      சென்ற நூற்றாண்டின் ஃபிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் இது தொடங்கியது. மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இது அமெரிக்காவில் வளர்ச்சி பெற்றது.
      (2)
      பிரான்சில் இலக்கிய வரலாற்றின் ஓர் அங்கமாக இது கருதப்பட்டது.
      (3)
      அமெரிக்காவில் பரந்த நிலையில் வளர்ந்தது.
      (4)
      ஒப்பீட்டுத் திறனாய்வு, இன்று வளர்ச்சி பெற்று ஒப்பிலக்கியம் (Comparative literative) என்ற தனி அறிவுத் துறையாக வளர்ந்துள்ளது.

          ஒப்பிலக்கியம் என்பதற்கு அமெரிக்கா - இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெச்.ஹெச்.ரீமாக் (H.H.Remack) கூறிய வரையறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

          ‘ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக்கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், சமுதாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ; இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது’ என்று ரீமாக் குறிப்பிடுகிறார்.

      இசை
      ஓவியம்
      கூத்து

      2.3.5 ஒப்பிலக்கியம் - இன்றைய நிலை
      (1)
      இன்று பிரெஞ்சு ஒப்பிலக்கியக் கொள்கை, இலக்கியங்களோடு பிற கருத்து நிலைகளையோ, பிற கலைகளையோ ஒப்பிட்டுக் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை.
      (2)
      இன்று ஒப்பிலக்கியம் தனித்துறையாக, ஆனால் திறனாய்வோடு தொடர்புடையதாக வளர்ந்துள்ளது.
      (3)
      ஒப்பீட்டுத் திறனாய்வு என்பது, இலக்கியங்களை ஒப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஒரே மொழியிலுள்ள இலக்கியங்களையும் ஒரே படைப்பாளியின் வெவ்வேறு இலக்கியங்களையும், அதுபோல ஒரே நாட்டிலுள்ள வெவ்வேறு மொழி இலக்கியங்களையும் என்ற தளங்களில் இலக்கிய ஒப்பீடு நிகழ்த்தப்படுகின்றது.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 15:35:14(இந்திய நேரம்)