தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சிற்பி-சிற்பி

  • 4.1 சிற்பி

    தமிழ்நாட்டின் தென்மேற்கு எல்லையில் கேரளத்தை ஒட்டி இருக்கும் மாவட்டம் கோயம்புத்தூர். கோவை என்ற இந்த மாவட்டத்தில் உள்ள ஆத்துப் பொள்ளாச்சியில் 29-7-1936-இல் பிறந்தார். பொ.பாலசுப்பிரமணியன் என்ற தம் பெயரைக் கவிதைக்காகச் சிற்பி என்று புனைந்து கொண்டார்.

    • கல்வியும் பணியும்

    இளம் வயதிலேயே கவிதைகள் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாள மொழியையும் நன்கு அறிந்தவர். மலையாள மகாகவி வள்ளத் தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார். பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றினார். பின்னர்க் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றார்.


    • கவிஞர் சிற்பி

    மரபு இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றுப் பின்னர்ப் புதுமை நாட்டத்தால் புதுக்கவிதை எழுத வந்த கவிஞர்களுள் பலர் தமிழ்ப் பேராசிரியர்கள். சிற்பி, மீரா, அப்துல் ரகுமான், அபி, நா.காமராசன், தமிழன்பன், இன்குலாப், மு.மேத்தா..... என்று இப்பட்டியல் நீளும். இவர்களுள் தமக்கென்று ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு எழுதி வருபவர் சிற்பி.

    பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் உந்து விசையாய் இருந்து, புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கேற்றவர்.

    • படைப்புகள்

    நிலவுப்பூ (1963), சிரித்த முத்துக்கள் (1968), ஒளிப்பறவை (1971), சர்ப்ப யாகம் (1974), புன்னகை பூக்கும் பூனைகள் 1980), மௌ மயக்கங்கள் (1982), சூரிய நிழல் (1991), இறகு (1996) ஒரு கிராமத்து நதி முதலிய கவிதை நூல்களைப் படைத்திருக்கிறார். இன்னும் எழுதி வருகிறார். கவிதை நாடகம் : ஆதிரை, குழந்தை இலக்கியம்: வண்ணப்பூக்கள், சிற்பிதரும் ஆத்திசூடி. உரைநடையிலும் பத்துக்கு மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் ஒரு நூலையும் படைத்துள்ளார்.

    • விருதுகள்

    சாகித்ய அகாதமி விருது, தமி்ழ்நாடு அரசின் பரிசு, பாவேந்தர் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகப் பரிசு எனப் பல பெருமைகளைப் பெற்றவர்.

    தம் பெயரில் ஒரு ‘கவிதை அறக்கட்டளை’யை நிறுவி இருக்கிறார். ஆண்டுதோறும் சிறந்த முதுபெரும் கவிஞர் ஒருவரையும் இளங்கவிஞர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறார்.

    இக்காலத் தமிழ்க் கவிஞர்களுள் ஒரு தனிச்சுடராய் ஒளிர்கிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 18:10:38(இந்திய நேரம்)