Primary tabs
-
4.0 பாட முன்னுரை
இனிய மாணவர்களே! தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள்.உலகின் மிகப் பழமையான இலக்கியங்கள் எனவும் இவை கருதப்படுகின்றன. மக்கள் வாழ்வை அகத்திணை, புறத்திணை என்னும்இருவகை ஒழுக்கங்களாகப் பகுத்து, இவைதாம் இலக்கியமாகப் படைப்பதற்கு உரிய பொருள்கள் என்று வகுத்துள்ள தமிழரின் மரபு பற்றியும் அறிந்துள்ளீர்கள்.
ஏழு புறத்திணைகளில் மிகச் சிறந்தது பாடாண்திணை என்பதைச் சங்க இலக்கியத்தை ஆழ்ந்து கற்றால் அறிவீர்கள். இதுதான் ஒரு மனிதனின் தலைமைப் பண்புகளின் உயர்வைப்பாடுகிறது. அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு,அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்டவன்தான் மனிதருள் உயர்ந்த தலைமகன் ஆவான். ஒருவனிடம் இருக்கும் இவற்றை ஆராய்ந்து பாராட்டிப் புகழ்வது அவனை மேலும் உயர்த்தும். அவனைப் பின்பற்றும் மக்களிடையே அவனது ஆளுமை பரவி அவர்களையும் உயர்த்தும். இவர்களைக் கொண்ட சமுதாயம் முழுதும் உயர்ந்த பண்புகளால் சிறக்கும். எனவே, பண்புகளின் உயர்வைப் பாடும் பாடாண் திணையே மிக உயர்ந்தது.
பாடாண்திணை பல துறைகளைக் கொண்டது. அவற்றுள் ஆற்றுப்படை என்பது ஒரு துறை ஆகும்.
தொகை நூல் ஆகிய புறநானூற்றில் பல சிறு பாடல்களாக இத்துறை பாடப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்திலும் சில பாடல்கள் ஆற்றுப்படையாக அமைந்துள்ளன. நீண்ட பாட்டுகளான பத்துப்பாட்டில் சரி பாதி ஆன ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். இத்தகைய சிறந்த இலக்கியம் பற்றி இப்பாடம் விளக்கிக் கூறுகிறது.