Primary tabs
- 5.5 தொகுப்புரை
பக்தியை இயக்கமாக மாற்றி ஊர் ஊராகச் சென்று திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார். நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் எதையும் பாடாமல் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான மதுரகவியின் சிறப்பையும் பக்தியையும் கண்டோம்.
நம்மாழ்வார் திருவாய்மொழியால் பக்திக்கும் தமிழுக்கும் வளம் சேர்த்தவர். திருமங்கை ஆழ்வார் இரண்டு திருமடல்களையும் இரண்டு திருத்தாண்டகங்களையும் அருளி, புதிய இலக்கிய வகைக்கு வித்திட்டவர்; அகப்பொருள் மரபில் ஒரு துறையாக இருந்த மடலைத் தம் பக்தி பரப்புக் கொள்கையால் ஒரு தனி இலக்கிய வகையாக உருவாக்கியவர். கோவில்களில் எழுந்தருளியுள்ள இறைவனின் திரு உருவில் அதிக ஈடுபாடு கொண்டவர்; ஆழ்வார்களுள் அர்ச்சாவதாரத்துக்கு அதிகமாகப் பாசுரங்கள் அருளியவர். மதுரகவி அடியார்க்கு அடியாராகிய ஆழ்வார்களுள் ஒருவரான பெருமைக்குரியவர். மொத்தத்தில் இவர்கள், பக்தி இயக்கக் காலத்தில் மக்களின் தேவையையும் காலத்தையும் கருதிப் பாசுரங்கள் பாடி வைணவச் சமயத்தை வளர்த்தவர்களுள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை இப்பாடவழி அறிந்து கொண்டோம்.