Primary tabs
- 3.4 நாவலில் உரையாடல்
நாவலில் உரையாடல் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. உரையாடலை ஆங்கிலத்தில் ‘Conversation’ அல்லது 'Dialogue' எனக்கூறுவர். இரு பாத்திரங்களுக்கு இடையே நிகழும் பேச்சே உரையாடல் எனப்படும். கதை ஓட்டத்திற்கு உரையாடல் துணை நிற்கிறது. மேலும் பாத்திரங்களின் பண்பினையும் உரையாடல் விளக்குகின்றது.
- உரையாடலும் வாசகனும்
உரையாடலைப் படிக்கும் வாசகன் பாத்திரங்களுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள முடிகிறது. சிறந்த உரையாடல்தான் நாவலின் கதையை விளக்கமுறச் செய்கிறது. பாத்திரங்களின் மனநிலை, உணர்ச்சி, உள்நோக்கங்கள் ஆகியவற்றை வெளிக் கொணர்வது உரையாடலின் பணியாகும். பாத்திரங்கள் அவை பேசுகின்ற பேச்சின் மூலம் தம்மை அடையாளப் படுத்துகின்றன.
உரையாடலின் மொழிநடையைப் படைப்பாளி கவனமாக அமைக்க வேண்டும். வட்டார நாவல்களில், அவ்வட்டார மக்களின் பேச்சு நடையிலேயே உரையாடல் அமைய வேண்டும். இலக்கிய நடையைப் பயன்படுத்தக்கூடாது. நாக நாட்டரசி அல்லது குமுதவல்லி என்ற நாவலில் மறைமலையடிகளார் தனித்தமிழ் உரைநடையைப் பயன்படுத்தினார். அதன் பின்னர்ப் பிற்கால நாவலாசிரியர்கள் எவரும் தனித்தமிழ் நடையைப் பின்பற்றவில்லை. நாவல் உரைநடையில் எளிய தமிழ்ச் சொற்களால் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் மு.வரதராசனார். இருப்பினும் அவர் தமிழ்நடை மக்கள் உரையாடும் நடையில் இருந்து சற்று மாறுபட்டு இருந்தது. அவருக்குப் பின் வந்த ஜெயகாந்தன் போன்றவர்கள் மக்கள் பேசும் மொழியிலேயே உரையாடலை அமைத்தனர். இந்நடை இன்று வரை நாவலாசிரியர்களால் பின்பற்றப்படுகின்றது. ஆனால் இந்நடையில் மொழித்தூய்மை பாதுகாக்கப்படுவதில்லை. இருந்தாலும் அந்தந்த மக்களின் மொழியிலேயே இருப்பதால் வாசகர் மனத்தில் இந்நடை தக்க இடம் பெறுகிறது.
மறைமலையடிகளார்
மு.வரதராசனார்ஜெயகாந்தனின் இல்லாதவர்கள் என்ற நாவலில் டோனி என்கிற துரைசாமி என்ற இளைஞனின் மொழிநடை கீழ்க்கண்டவாறு இருக்கிறது.
‘........ த்தா! அரசியலு பெரிய மனுசங்க சமாசாரமா இருந்ததெல்லாம் முந்திடா! இப்ப, அது மொட்டப் பசங்க, முக்காடுப் பசங்க சமாசாரமாத்தான்டா பூடுச்சி...... த்தா! எவன் வேண்ணாலும் எந்தக் கட்சிக்கு வேண்ணாலும் போங்கடா! ஆனா...... டேய் எம்மவனுங்களா இந்த டோனி உசிரு இருக்கிற வரைக்கும் இந்தக் கொடிதான்டா! அதான்டா பறக்கணும் அங்கே!’
இவ்வாறு மக்களின் அன்றாட மொழியே, உரைநடை மொழியாக ஆகிவிட்டது.
நாவலின் உரைநடை கீழ்க்கண்ட ஐந்து வகையுள் அடங்கும் என்பர் ஆய்வாளர்.
(1)கதை சொல்லல்(2)உரையாடல்(3)வருணனை(4)விளக்கவுரை(5)பாத்திரத்தின் தனிமொழிகதை சொல்லலைப் படைப்பாளியே நிகழ்த்துவார். இது சிறப்புடையதாகப் போற்றப்படாது. உரையாடல் இரு பாத்திரங்களுக்கு இடையே நிகழ்ந்து, கதையை நடத்திச் செல்லும். வருணனையைப் படைப்பாளியோ, பாத்திரமோ செய்யலாம். விளக்கவுரை என்பது ஒரு செயலை அல்லது பாத்திரப் பண்பை நாவலாசிரியரே விளக்கியுரைக்கும் வண்ணம் அமைவது. ஒரு பாத்திரம் தன் பண்பை - தன் செயலை மற்றவருக்குக் கூறாமல் தனக்குத் தானே உரைத்துக் கதை ஓட்டத்திற்குத் துணை நிற்பது தனி மொழியாகும்.
- கதை சொல்லல்
கதை சொல்லலைப் படைப்பாளியே நிகழ்த்துவார். சிறு குழந்தைகளுக்கு எழுதப்படும் ராஜாராணிக் கதை போலக் கதை ஆசிரியரே கதையைக் கூறிச் செல்வார்.
வல்லிக்கண்ணனின் துணிந்தவன் எனும் நாவலில் கதையை அவரே சொல்லி வருவார்.
‘அழகை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்தது நிலவு.
.........................
அன்று பௌர்ணமி
....................ஊருக்கு வடக்கேயுள்ள குளத்தின் கரை மீது ஆழ்ந்த யோசனையில் இலயித்திருந்த மாதவன் கண்கள் கூட இயற்கையின் மோகன எழிலால் வசீகரிக்கப்பட்டன.’
என்று சொல்லிக் கொண்டு செல்கிறார்.
- உரையாடல்
உரையாடல் இரண்டு பாத்திரங்களுக்கிடையே நிகழ்ந்து, கதையைச் சொல்லிக் கொண்டு செல்லும். மோகமுள் எனும் நாவலில் தி.ஜானகிராமன் கதைத் தலைவன் பாபுவை ஓர் உரையாடல் மூலம் அறிமுகப்படுத்தி அவனது இசை ஞானத்தையும், அவன் ஒரு கல்லூரி மாணவன் என்பதையும் விளக்குகிறார்.
மேலக்காவேரி சண்முகானந்த சாஸ்திரிகள் கூறுகிறார்,
‘ஓய்! ஆறுமுகம், இதைப்பாரும். சார் கூட உம்ம பேச்சைப் பார்த்து அஞ்சு நிமிஷம் அசந்து போய் நிற்கிறார்; சாரைத் தெரியுமா? உமக்கு’ என்று பாபுவைப் பார்த்துக் கொண்டே ஆறுமுகத்தைக் கேட்டார் சாஸ்திரிகள்.
‘கடைக்கு வர்ர வாடிக்கை தானே! தெரியாம என்ன?’
‘அவ்வளவு தான் தெரியுமா?’
‘சொல்லுங்களேன்’
‘அட போமய்யா, இவ்வளவு பேச்சு பேசறீர்! ஊரையே விலைக்கு வாங்கறேங்கிறீர். சாரைத் தெரியாதுங்கிறீரே?’
.........
‘போன வருஷம் காலேஜ்லே நாடகம் போட்டாளே பார்த்தீரா?’
‘பார்த்தேன்’
‘அப்படின்னா சொல்லும் சார் யாருன்னு?’
‘சொல்லும்’
‘இருங்க’
‘எத்தனை நாழி? ஏன்யா இது தெரியலீயா?’ ‘லீலாவதி வேஷம் போட்டுண்டாரய்யா.’
.................
என்ன சாரீரம் பார்த்தீரா? என்ன பொட்டு என்ன ரவை! பொல பொலன்னு மத்தாப்பூவா உதிர்க்கிற சாரீரம்’
என்று பாத்திரத்தை உரையாடல் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.