தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.4 தலையங்க அமைப்பு

  • 3.4 தலையங்க அமைப்பு

    தலையங்கம் எப்படி அமைய வேண்டும் என்ற அமைப்பு முறை ஒன்று உண்டு. தலையங்கம் இல்லாத இதழ்களும் உள்ளன. தமது விருப்பப்படி தலையங்கத்தை அமைத்துக் கொள்ளும் இதழ்களும் உள்ளன.

    நாளிதழ், வெகுசன இதழ், சிற்றிதழ் என அனைத்து இதழ்களிலும் தலையங்கம் வெவ்வேறாக அமைகின்றது. அது முழுமையாக ஆசிரியர் கருத்து ஆதலால் அவ்வாறு அமைவது இயல்பாகிவிடுகிறது.

    தலையங்கம் மூன்று பகுதிகள் கொண்டதாக இருக்கும். அவை,

    (1)

    கருப்பொருள்

    (2)

    விளக்கம்

    (3)

    முடிவு

    என அமையும்.

    தலையங்கம் கூற இருக்கும் செய்தி அடிப்படையில் தலைப்பு அமைத்தல், அதற்கான கருப்பொருளை உருவாக்கல், அதனை விளக்கிக் கூறல், அதற்கு விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலையோடு முடிவு கூறல் என அமையும்.

    அவை திறனாய்வு நிலையிலும், கருத்து பற்றிய தீர்வினை விருப்பு வெறுப்பு இன்றி மக்கள் அதாவது படிப்பவர் நலன் கருதி வெளியிடுபவையாகவும் அமையும்.

    தலையங்கம் ஆசிரியரின் கொள்கையையும் சமூகத்தை அவர் பார்க்கும் முறையையும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும்.

    தலையங்கம் ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதப்படுவதுண்டு. பொதுவாக மையக் கருத்தின் அடிப்படையில் அதாவது அப்போதைய சூழலில் தேவையான செய்தியைத் தலைப்பிட்டு எழுதுவது உண்டு.

    “இட ஒதுக்கீட்டின் எதிர்காலம்”, “தேர்தல் ஆணையத்துக்குச் சங்கடம்”, “அச்சுறுத்தும் மதச் சார்பின்மை”, “இப்படியும் ஒரு எலி வேட்டை”, “ஆதிக்க வேரறுப்போம்” முதலிய தலைப்புகள் சான்றுக்காகத் தரப்பட்டுள்ளன.

    இதழில் தலையங்கம் அமையும் இடம் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

    பொதுவாக நாளிதழ்களில் தலையங்கம் இரண்டாம் பக்கத்தில் அமையும். எடுத்துக்காட்டு விடுதலை நாளிதழ். வார இதழ்களில் முதல் பக்கத்திலோ, கடைசிப் பக்கத்திலோ இடம் பெறலாம். எங்கு இடம் பெறலாம் என்பது இல்லை. சிற்றிதழ்களில் முதல் இரண்டு பக்கங்களில் தலையங்கம் அமையும்.

    தலையங்கம், ‘ஆசிரியரிடமிருந்து’ என்று பெயர் எதுவும் இன்றி வரலாம். அல்லது ஆசிரியர் பெயர் மட்டும் இடம்பெற்றும் வருவதுண்டு.

    தலையங்கம் ஆசிரியர் எழுதும் பகுதி என்பதால் ஓர் இதழின் உண்மைத் தன்மையை நிறுவும் பகுதி இதுவே ஆகும். பலர் தலையங்கத்திற்கு அதிகக் கவனம் கொடுத்துப் படிப்பதும் உண்டு. அதனால் இந்த இதழில் இந்த இடத்தில் தலையங்கம் அமையும் என்று நிர்ணயித்திருப்பது இதழ்களுக்கும், படிப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். தலையங்கம் இல்லாமல் இதழ்கள் வெளியிடுவது ஒரு பொறுப்பில்லாத தன்மை என்று கூடச் சொல்லலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:13:25(இந்திய நேரம்)