தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1தொகுப்புரை

1:6 தொகுப்புரை

கவிஞர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், சீர்திருத்தவாதி, முற்போக்குச் சிந்தனையாளர், பெண்ணியப் போராளி, மனிதாபிமானி, தேசிய வாதி, அஞ்சா நெஞ்சினர், அசைவிலா ஊக்கம் கொண்டவர், கூடி வந்த இன்னல்களுக்கு இடையேயும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர் - என்ற பல
அடை மொழிகளுக்கும் உரியவர்
மகாகவி பாரதியார். மரணத்தைக் கண்டு மனம் கலங்காதவர், 'மனிதனுக்கு மரணமில்லை' என்று முழங்கியவர், 'காலா'என்றன் கால் அருகே வாடா ! சற்றேஉனை மிதிக்கிறேன்' என்று காலனை (யமனை) ஏளனம் செய்தவர், தமது 39 -ஆம் வயது முடியும் முன்னரே காலமாகி விட்டார் ! தமிழ் மொழிக்கும்,தமிழ்ச் சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு (contribution)அளவிடற்கு அரிது. தமிழ்மொழி உள்ள அளவிற்கும் அவர் பெயர் நிலைக்கும், ஆம், அறிஞர் வெ.சாமிநாத சர்மா சொன்னது போல்

"தமிழ்மொழியிலே இனிமை இருக்கிறவரையில்
கவிதையிலே உணர்ச்சி இருக்கிறவரையில்,நாட்டிலே
பெண்மைக்கு மதிப்பு இருக்கிறவரையில் பாரதியார்
வாழ்ந்து கொண்டிருப்பார்"!

(நான் கண்ட நால்வர், பக்.261)

தன்மதிப்பீடு வினாக்கள் - 2
1.
'தமிழ்ப் பத்திரிகையின் தந்தை' எனப்
பாராட்டப்பெற்றவர் யார்?
2.
பாரதியார் மொழிபெயர்த்த 'வந்தே மாதரம்'
என்ற புகழ்பெற்ற பாடலின் ஆசிரியர் யார்?
3.
பாரதியார் பணியாற்றிய இரு பத்திரிகைகளின்
பெயர்களைச் சுட்டுக.
4.
பாரதியார் கலந்துகொண்ட காங்கிரஸ்
மாநாடுகளின் பெயர்களைத் தருக.
5.
'சுயராஜ்யம் வேண்டும்' என்ற தாரக
மந்திரத்தினை முழங்கியவர் யார்?
6.
'சுயராஜ்யம் எமது பிறப்புரிமை, அதை
அடைந்தே தீருவோம்' என முழங்கிய
தலைவர்யார்?
7.
'இந்தியா' பத்திரிகையின் மூன்று இலட்சியங்கள்
யாவை?
8.
பாரதியார் பத்திரிகைத் துறையில் நிகழ்த்திய
ஒரு புரட்சியை எடுத்துக்காட்டுக.
9.
புதுச்சேரி வாழ்க்கையின்போது பாரதியாருக்குப்
பேருதவி புரிந்தவர் யார்?
10.
பாரதியாரின் பெண் மக்கள் இருவரின்
பெயர்களைச் சுட்டுக.
11.
பாரதியார் புதுச்சேரி வாழ்வின்போது படைத்த
நூல்கள் யாவை?
12.
பாரதியார் யாருக்குப் பூணூல் அணிவித்தார்?
13.
பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய
சீட்டுக்கவியில் தம்மைப் பற்றி எங்ஙனம்
குறிப்பிட்டிருந்தார்?
14.
பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவுகளாக அமைந்தவை எவை?
15.
மகாகவி மரணம் எப்போது நிகழ்ந்தது?

பயில்முறைப்பயிற்சி

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் நினைவு கூர
உதவும் ஒரு பயிற்சியாகும் இது. பாரதியின் வாழ்க்கையில்
நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
இதற்காகப் பாடத்தை விரைவாக மீண்டும் ஒருமுறை
திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கும். அவ்வாறு நீங்கள்
குறித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் கால வரிசைப்படி - கீழே கண்ட
வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளில் இருக்கின்றனவா என
ஒப்பிட்டுப் பாருங்கள். இனி்வரும் பாடங்களைப்படிக்கும் பொழுது
- பாரதியாரின் தேசிய, இலக்கிய, சமுதாய வளர்ச்சியினை
முற்றிலும் உணர்ந்து தெளிவதற்கு - இக்குறிப்புகளை மீண்டும்
மீண்டும் பார்க்க வேண்டியதிருக்கும்.தேவைப்படின்,
இக்குறிப்புகளில் மாறுதல்களைச் செய்யவும், கூடுதலாகச்
செய்திகளைச் சேர்க்கவும் வேண்டியிருக்கும்.

பயிற்சி1 பயிற்சி 2

BharathiyarGallery

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:41:50(இந்திய நேரம்)