தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.2 தேசிய உணர்வு



     ஒருசமயம், காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப்
போராட்டத்தைத் தொடங்கினார். வடநாட்டில் தண்டி என்னும்
இடத்தில் உப்புக்காய்ச்சக் காந்தியடிகள் தம் தொண்டர்களோடு
நடந்து சென்றார். அதே நாளில் தென்னாட்டில் நம்
மதிப்புக்குரிய இரா
ியும் அவர் தம் தொண்டர்களும்
வேதாரண்யம் என்ற இடத்திலிருந்து அணிவகுத்துச் சென்று
உப்பு எடுத்தார்கள். அப்படி அவர்கள் உப்புச்சத்தியாக்கிரகம்
செய்யச் சென்றபோது தேசபக்தியை வளர்க்கத் தகுந்தவாறு
நம் கவிஞர் பெருமான் பாடிக்கொடுத்த பாடல்களை மிகவும்
உற்சாகத்துடன் பாடிச் சென்றனர். அப்பாடலை அச்சிட்டு
ஆயிரக்கணக்கில் தமிழகம் எங்கும் காங்கிரசுத் தலைவர்கள்
வழங்கினர் . அப்பாடலை அறியாதார் யார்? நாமும் இங்கு ஒரு
முறை பாடுவோம்.

     கத்தியின்றி ரத்தமின்றி
     யுத்தமொன்று வருகுது
     சத்தியத்தின் நித்தியத்தை
     நம்பும் யாரும் சேருவீர்

         (நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்கம் - 115)


     இந்தப் பாடலே நம் கவிஞரைத் தேசியக் கவிஞர் என்ற
பாராட்டிற்குரியவராக்கியது.



காந்தியடிகள் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர். இந்திய
விடுதலைப் போராட்டத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர்.
காந்தியின் தலைமையில் விடுதலை உணர்வுடைய நாட்டுமக்கள்
இந்தியாவின் விடுதலைக்காகப் போராடினர். காந்தியின்
வாழ்க்கை பலருக்கு     முன்னுதாரணமாக     இருந்தது.
அதைக் கடைப்பிடித்தவர்களுள் நாமக்கல் கவிஞர்
குறிப்பிடத்தக்கவர் .இதற்கு ஓர் உதாரணம் பார்க்கலாமா?
  • ஈ.வெ.ரா.வும் நாமக்கல் கவிஞரும்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியோடு இணைந்து
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் போராடினார்.அப்பொழுது
அவர் காங்கிரசு இயக்கத்தில் இருந்தார். ஆனால், காங்கிரசு
இயக்கத்தின் செயல்பாடுகளில் ஈ.வெ.ரா முரண்பட்டார்.
அந்தச் சமயத்தில் ஈ.வெ.ரா.வுடன் நாமக்கல் கவிஞர் மிகுந்த
தோழமையோடு பழகிவந்தார்.ஆனால் ஈ.வெ.ரா காங்கிரசு
இயக்கத்தை விமரிசனம் செய்வதை நாமக்கல் கவிஞர்
விரும்பவில்லை . ஏனென்றால் காந்தி அந்த
இயக்கத்திலிருந்துதான் பாடுபட்டு வந்தார். காங்கிரசு
இயக்கச் செயல்பாடுகளில் முரண்பாடு கொண்டதால் காங்கிரசை
விட்டு ஈ.வெ.ரா வெளியே வந்தார்.அவரைச் சமாதானப்படுத்திக்
காங்கிரசுக்கு அழைத்தார் நாமக்கல் கவிஞர்.அப்போது ஈ.வெ.ரா
இனி அந்தப் பேச்சுக்கே இடமில்லை. நாட்டுக்குச்
சுதந்திரம்வாங்குமுன்நம்தமிழ்மக்களுக்குப்பகுத்தறிவை
ஊட்ட வேண்டும்; மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க
வேண்டும்; அதற்காகப் பாடுபடப் போகிறேன். நீங்களும்
காங்கிரசு இயக்கத்திலிருந்து வெளியேறி என்னுடன்
பகுத்தறிவு இயக்கத்திற்குப் பாடுபட வாருங்கள்
என்று
கூறினார். அதற்கு நாமக்கல் கவிஞர், தாங்கள் ஆரம்பிக்கும்
இயக்கத்தை எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்;
ஆனால் மகாத்மா காந்தியைப் போல ஒரு தலைவரை நம்
வாழ்நாளில் பார்க்க முடியாது. காந்தியடிகள் வழியைப்
பின்பற்றி என் வாழ்நாள்     முழுதும் சுதந்திர
இயக்கத்துக்காகப் பாடுபடுவேன்
என்று கூறி நாமக்கல்
திரும்பினார். அதன்பின்னர் காந்தியைப் புகழ்ந்து பாடினார்.
  • சொல்லும் செயலும் ஒன்றாகப் பொருந்தியவர் காந்தி
     காந்தியால் நாமக்கல் கவிஞர் ஈர்க்கப்பட்டதற்கு, காந்தி
கடைப்பிடித்த கொள்கைகள் மீது ஏற்பட்ட மதிப்பே
காரணமாகும்.

     ஒருமுறை, காந்தியார் தம் சொற்பொழிவில் இந்தியாவில்
உள்ள ஏழ்மையை விளக்கிப் பேசினார். ஏழைகளைக்
காப்பாற்றுவதில் மன்னர்கள் தவறிவிட்டனர் எனச் சுட்டிக்
காட்டினார். அதனால் காங்கிரசுத் தலைவர்களும் மன்னர்களும்
காந்தியை வெறுத்தனர். திலகர் (தீவிரவாத விடுதலைச்
சிந்தனையாளர் ) போன்றவர்கள் தீவிரவாதம் பேசிக்கொண்டே
கொடுங்கோலர்களின்     கொடுஞ்செயல்களைக் கண்டிக்க
அஞ்சினர். ஆனால்     காந்தி, தம் மனத்தில் உள்ளதை
வெளிப்படையாகக் கூறினார்.    இதனைக் கண்ட நாமக்கல்
கவிஞர், காந்தியாரிடமே சொல்லும் செயலும் ஒன்றாகப்
பொருந்தியிருப்பதாகப் பாடினார். ‘இதை, சொல்வதிங்கு
எல்லார்க்கும் சுலபம் ஆகும்; ஆனால் சொன்னது போல்
செயல்பட முயன்றார் காந்தியார் ஒருவரே அன்றோ?’ என்று
குறிப்பிட்டார். அதுவரையில் காந்தியாரின் சாத்விகப் போரில்
நம்பிக்கை கொள்ளாதிருந்த கவிஞர், அப்போரைப் பற்றியும்
காந்தியத்தைப் பற்றியும் நன்கு தெளிவாக அறிந்து கொண்டு
காந்தியக் கவிஞராக மாறிவிட்டார்.

காந்தியம் நம் உடமை - அதனைத்
காப்பது நம் கடமை
காந்தியம் வாழ்ந்தொளிர - தெய்வக்
கருணையைச் சூழ்ந்திடுவோம்.

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 104)

காந்தியக் கொள்கையைப் பறைசாற்ற நாமக்கல் கவிஞர்
முயன்றதற்கு ஒரு சான்றாக     இந்தப் பாடலைக்
கொள்ளலாமல்லவா?
  • அகிம்சை
இந்திய விடுதலைப் போராட்டத்தினர் காந்தியின் அகிம்சை
நெறியைப் பின்பற்றி விடுதலை வேள்வி நடத்தினர். போரில்
உயிர்ப்பலி ஏற்படுவது இயல்பு. போரில் ஆயுதங்களைப்
பயன்படுத்துவது போர் தர்மம். ஆனால் ஆயுதப் போரைக்
காந்தி     வெறுத்தார்.     சத்திய நெறியில்     அகிம்சை
அடிப்படையில் போரிடுவதை     விரும்பியவர்     காந்தி.
ஆங்கிலேயர்கள் தாங்களாகவே     இந்தியாவை விட்டு
வெளியேற , காந்தியின் அகிம்சைப் போரே காரணமாகும்.

அற்புதன் காந்தி அறநெறி கொண்டோம்
அடிமை விலங்குகள் அகன்றன கண்டோம்

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 134)


அடிமை     விலங்கு பூட்டியவர் ஆங்கிலேயர்கள்.
அவர்களிடமிருந்து விடுதலை அடையக் காந்தியின் அறநெறியே
காரணமாயிருந்தது என்பதை மேற்சொன்ன வரிகளிலிருந்து
புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

ஒண்டி அண்டி குண்டுவிட்டிங்
குயிர் பறித்த லின்றியே
மண்டலத்தில் கண்டி லாத
சண்டை ஒன்று புதுமையே
கத்தியின்றி..........

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 115)


கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற இந்தப்
பாடலின் பின் உள்ள வரலாற்றுச் செய்தி இதுதான்.

படை தேவையில்லை என்பதை,


     குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசை
    இல்லையே


என எளிமையாகப் பாடுகின்றார்.
  • மதுவிலக்கு
    நல்ல குடிமகனாக இருக்க, யாரும் குடிக்கக்கூடாது
என்றும் பாடியுள்ளார். கவிஞர்,

மதுப்பழக்கம்,     மனிதனை எல்லா வகையிலும்
கெடுத்துவிடும். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உழைப்பு
அவசியமாக இருக்கின்றது.     இந்தச் சூழலில் அவர்கள்,
உழைப்பில் அக்கறை செலுத்தாமல் குடித்துவிட்டு மதிமயங்கிக்
கிடப்பதால்தான் தேசம் நலிவடைந்தது என்று கூறுகின்றார்.

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததி்ந்தக் கள்ளினால் ;
நாசமுற்று நாட்டினர்
நலிந்ததிந்தக் கள்ளினால்

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 117)


என்ற வரிகள் மூலம், தேசம் கள், மதுப்பழக்கத்தால்
பாழ்பட்டிருக்கிறது என்று வருந்திப் பாடியுள்ளார்.

ஆண்கள் குடிப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என
அழுத்தமாகக் கூறியுள்ளார்.
  • தீண்டாமை
மனிதருக்குள் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது.தீண்டாமை
என்னும் கொடிய நோயை     ஒழிப்பதற்கு, தீண்டப்படத்
தகாதவர்கள் என்பவர்களைத் தீண்டுவது என்பது பொருளல்ல;
மாறாக, தீண்டாதோர் (untouchable) என்ற சாதி இல்லை
என மனத்தெளிவு தேவை என்று கூறியவர் நாமக்கல் கவிஞர்.
இதை விளக்கும் பாடலைக் கீழே காணலாம்.

தீண்டாமை போவதென்றால் தின்பதும் உண்பதல்ல
தீண்டாமை தீர்வதென்றால் தீண்டியே ஆவதல்ல
தீண்டாமை விலக்கலென்றால் திருமணம் புரிவதல்ல
தீண்டாத(து) என்றோர் ஜாதி இலையெனத்
        தெளிவதேயாம்

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 468)

தீண்டாமை என்பது பேய். அது மனிதனை மனிதனாக
நடந்துகொள்ள விடாது. எனவே, அது நாட்டின் ஒற்றுமையைச்
சீர் குலைக்கும் நச்சு என்று கூறுகின்றார். உயர்ந்தவன்,
தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உருவாக்குவதும், மனத்தில்
தாழ்வு     மனப்பான்மையை     வளர்ப்பதும் தீண்டாமைக்
கொள்கையே . தீண்டாமையைப் போக்குவது என்றால்,
தாழ்ந்தவர் என்று கருதப்படும்     ஒருவர் இல்லத்தில்
விருந்து உண்பது     என்பது பொருளல்ல. சாதி இல்லை
என்பதை     மட்டும் உணர்வுப் பூர்வமாக உணர்ந்து
கொள்ளவேண்டும் .

நாமக்கல் கவிஞர், மேலும்

தாழ்ந்தவர் உயர்வதென்றால் உயர்ந்தவர் தாழ்வதல்ல
வீழ்ந்தவர் எழுவதென்றால் நின்றவர் வீழ்வதல்ல
ஆழ்ந்தவர் உயிர்ப்பதென்றால் மற்றுளோர் அமிழ்வதல்ல
வாழ்ந்திட வேண்டும் எல்லா மனிதரும் என்பதே யாம்.


- என்று பாடுகிறார்.

எல்லோரும் சமமாக வாழ வேண்டும்.ஒரு மனிதர் மற்றொரு
மனிதரைத் தொடுவது தீட்டு என்று கருதுவதும்,தீண்டத்தகாதவர்
எனச் சொல்லி அவரை ஒதுக்குவதும் கண்டிக்கப்பட வேண்டும்
என்ற சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறார் நாமக்கல் கவிஞர்.
  • கதர் ஆதரவு
இந்திய விடுதலைப் போராட்டத்தில், அந்நியர்கள் நெய்த
ஆடையை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்றும்,இந்தியர்களால்
நெய்யப்படும் கதராடையை ஆதரிக்க வேண்டும் என்றும்
பாடியவர் நாமக்கல் கவிஞர். ஏழைகள் வாழ அவர்கள் நெய்யும்
கதர்த்துணிகளை வாங்கி, அவர்கள் வாழ்க்கைக்கு உதவிட
வேண்டும் என்று கூறியவர்.

கதர்த்துணி வாங்கலையோ - அம்மா!
கதர்த்துணி வாங்கலையோ அம்மா

ஏழைகள் நூற்றது; எளியவர் நெய்தது;
கூழும் இல்லாதவர் குறைபல தீர்ப்பது

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 386)


என்றும் நெசவாளர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்
காட்டுகிறார். ‘கதர்த்துணியுடுத்தச் சித்தமில்லாத நீ கத்தியெடுத்து
என்ன செய்யப் போகின்றாய். கூனர்கள் நூற்ற ஆடை;
குருடர்கள் நெய்தது. மானத்தோடு வாழ வழி ஏற்படுத்தித்
தருவது. தாழ்ந்தவர்கள் நூற்றது; தளர்ந்தவர்கள் நெய்தது.
வாழ்ந்திடும்     மக்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிடக்
கதராடை வாங்க வேண்டும்’ எனப் பாடுகின்றார்.

ஒரு நெசவாளன் நெசவுத் தொழிலால் வாழ்க்கையில்
உயர்ந்துவிட முடியாது என்ற அவலம் இந்தப் பாடலில்
சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அவலம் மறைய வேண்டும்.
நெசவாளர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
அதற்கு, அந்நியத் துணிகளை வாங்குவதைத் தவிர்க்க
வேண்டும். கதராடையை     வாங்கி அவர்களை உயர்த்த
வேண்டும் என்பதே இப்பாடலின் பொருளாகும்.

கதராடையை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம், அந்தக்
கதராடையை நெய்பவரின் வயிற்றுக்கு நாம் உணவிடுகிறோம்
என்பதை மிக அழகாகப் பாடுகிறார்.

கன்னியர் நூற்றது; களைத்தவர் நெய்தது
அன்னதானப் பலன் அணிபவர்க் களிப்பது

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 388)


நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, நமது நாட்டில்
உற்பத்தியாகும்     பொருட்களையும்,     உடைகளையும்
பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என
வலியுறுத்துகிறார்.


விடுதலை வேட்கையோடு எழுச்சிமிகு பாடல்களைப் பாடிய
நாமக்கல் கவிஞர், விடுதலை இல்லாத நாடு புலிகளும்
பேய்களும் மிகுந்த பெருங்காடு எனக் கூறுகிறார். எதிர்த்துப்
போர் செய்யும் ஆங்கிலேயர்களுக்குப் பயப்படாமல், நமது
விடுதலை எது என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்; இதை,

‘ஆங்கிலேயர் நடத்திய ஆதிக்கம் தன்னை அழித்திட
விரும்புகின்றோம். அதற்காக, ஆங்கிலேயர் நாசத்தை விரும்பிட
மாட்டோம். நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து காப்பாற்றுவோம்.
ஆயுதப் போரின்றி, தீயன சிறிதும் இல்லாமல் உலகமெல்லாம்
திகைக்கும்படியாக, காந்தியின் நன்னெறி மனத்தில் கொண்டு
நாட்டைக் காக்க வேண்டும்’ என்று பாடுகின்றார்.

பொதுஜன நாயக முறைகாணும்
பூரண சுதந்திரம் பெறவேணும்
எது தடை நேரினும் அஞ்சாமல்
எவரையும் அதற்கினிக் கெஞ்சாமல்

(நாமக்கல் கவிஞர் பாடல், பக்கம் - 135)


சுதந்திரத் திருநாள் தொழவேண்டும் எனப் பாடுகிறார்.
பொன்னைக் காட்டிலும் உயர்ந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கப்
பொறுப்புணர்ந்து கடமைகளைப் புரிய வேண்டும் என்றும்
கூறுகின்றார்.


‘அந்நியர்கள் இந்தியர்களை ஆண்ட காலம் போதும்.
அவர்களால் அல்லல் பட்டது போதும். விடுதலையின் இன்பம்
காண, நிறைய மனமாற்றம் தேவை. விடுதலை ஆர்வத்தில்
வேகத்தை மூட்ட வேண்டும். நம் நாடு செழிக்க வேண்டும் நாம்
மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்றால், இந்திய நாட்டை
என்னுடைய நாடு என உணர வேண்டும். இனி யாரும் இந்த
நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கக் கூடாது. அதற்கு
இந்தியர்கள் எழுச்சி     பெற வேண்டும். உறக்கம் கலைய
வேண்டும்’ எனப் பாடுகிறார். இதைக் கீழ்வரும் பாட்டு
வரிகளால் உணர்ந்து கொள்ளலாம்.


இந்தியநாடு இது என்னுடைய நாடு
என்று தினம் தினம் நீயதைப்பாடு
சொந்தமில்லாதவர் வந்தவர் ஆள
தூங்கிக்கிடந்தது போனது மாள;
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
வாடின காலங்கள் ஓடின தம்பி!


“இந்தத் தினம் முதல் இந்திய நாடு என்னுடைய நாடு என்ற
எண்ணத்தைக் கூடு” என்று அழுத்தமாகக் கூறுகிறார். இந்த
நாட்டை வேறு ஒருவர் ஆளக்கூடாது; என்று உறுதிபடப்
பாடியுள்ளார்.
  • விடுதலை இயக்க ஈடுபாடு
    o அதிகார மோகம் இருக்கக் கூடாது
    o ஆதிக்க தாகம் கூடாது
    o சதிகார எண்ணமில்லாத சமதர்ம உணர்ச்சி தேவை
    o துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் தேவை
    o காங்கிரசின் நிதியாக இருந்து சுதந்திரம் சிறக்கப்
    பாடுபடவேண்டும்.

    நாமக்கல் கவிஞர் 1914இல் திருச்சி காங்கிரசு கமிட்டிச்
செயலராகப் பணியாற்றியிருக்கிறார். 1921 முதல் 1930 வரை
நாமக்கல் வட்டக் காங்கிரசுச் செயலாளராகவும்
பணியாற்றியிருக்கிறார். காங்கிரசுக் கூட்டங்களில் கணீரென்ற
குரலில் தேசபக்தி நிறைந்த சொற்பொழிவுகளைப்
பொழிந்திருக்கிறார். எழுத்தாளர்கள் கல்கி, அகிலன்
ஆகியோர் அவரது சொற்பொழிவால் மனமாற்றம்
பெற்றவர்கள்.
  • போராட்டம்
நமது கவிஞர் 1932இல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போரில்
கலந்து கொண்டு ஓராண்டுச் சிறைத் தண்டனை பெற்றவர்.
வேலூரிலும், மதுரையிலும் சிறையில் இருந்தவர். சிறையிலிருந்து
திரும்பியபின் காங்கிரஸ் ஊழியர்களை உபசரித்தும் முழுநேர
அரசியலில் கலந்து கொண்டும் தனது பூர்வீகச் சொத்து
முழுவதையும் இழந்தார்.

1)
வெங்கட்ராமர் யார்?
2)
நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் யாது?
3)
நாமக்கல் கவிஞரின் ஆரம்பப்பள்ளி எது?
4)
நாமக்கல் கவிஞரின் ஓவியப் புலமை எவ்வாறு
வெளிப்பட்டது?
5)
கவிஞர் யாருடைய படங்களை எல்லாம்
வரைந்தார்?
6)
நாமக்கல் கவிஞர் படைத்த கவிதைகள்
எத்தனை?
7)
நாமக்கல் கவிஞரின் தேசப்பற்றை உணர்த்தும்
நூல் எது?
8)
நாமக்கல் கவிஞரைத் தேசியக் கவிஞராக
அறிமுகப்படுத்திய புகழ்வாய்ந்த பாடல் எது?
9)
தீண்டாமை என்றால் என்ன? இதைக் கவிஞர்
எவ்வாறு பாடுகிறார்?
10)
கவிஞரின் விடுதலை இயக்க ஈடுபாட்டிற்குக்
காரணமாக அமைந்தவை யாவை?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:12:25(இந்திய நேரம்)