Primary tabs
குறித்து நின்றது, ‘தீண்டா விடுதலரிது‘ (நாலடி. 109) என்புழிப்போல. (56)
அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய
வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்
(இ-ள்.) இடுக்கண் வந்து உறவும் - (உங்கள் உயிருக்கே) இறுதி வரவும், எண்ணாது (அதனை ஒருபொருட்டாகக்) கருதாது, எரிசுடர் விளக்கின் - எரிகின்ற விளக்கின் சிகை நடுங்குவது போல, நடுக்கம் ஒன்று இன்றி - நடுக்கம் சிறிது மின்றி, நம்பால் - நம்மிடத்தில், நகுபொருள் என் கொல் - நீவிர் சிரித்தக்காரணம் என்னை? கூறுக-இயம்புக, என்ன - என்று (அரசன்) கேட்க, அடுக்குவது அடுக்கும்ஆனால் - ஒன்றன்மேலொன்றாகப் பிணித்துள்ள பழவினை (பயனீயுங்கால் உதயமாகி) வெளிவருமாயின்,அஞ்சுதல் பயன் இன்று என்று- (அதற்கு) அஞ்சுவதனால் உண்டாகும் பயன் சிறிதும் இல்லை என்று கருதி, நடுக்கம் அது இன்றி நின்றாம் - நடுக்கம் என்பது சிறிதும் இலரானோம், நல் அறத் தெளிவு சென்றாம் - திருவறத்தைத் தெளிதலாகிய நற்காட்சியை அடைந்துளோம். (எ-று.) இடுக்கணை நினையாது சிரித்தது யாது காரணம் என்று வினவிய அரசனுக்கு, யாம் நற்காட்சி யுடையேமாதலின் அச்சமிலரானோம் என்றன ரென்க.
சுடர்-சிகைவு; விளக்கின் கொழுந்து, விளக்கு எரியும் போது சிகை காற்றிலசைவது போல நடுங்கும் நடுக்கம்.