தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பஞ்சையானேன்

முத்து மழை பேயும்
மொத வாய்க்கால் தண்ணி வரும்
மொத வாய்க்காத் தண்ணிக்குத்தான்
மொளவு சம்பா நெல் விளையும்
மொளவு சம்பா நெல்லுக்குத்தா
மொதலாளியா நானிருந்தேன்
எனக்கு வந்த சாமி சின்ன நடையிழந்து
சிறு நாடு காலம் போவ
மொளவு சம்பா நெல்லுக்கு
மொற மெடுக்கப் பஞ்சையானேன்
கனத்த மழை பேயும்
கனிவாய்க் காத்தண்ணி வரும்
கனிவாய்க் காதண்ணிக்குத்தா
கடுகு சம்பா நெல் விளையும்
கடுகு சம்பா நெல்லுக்குத்தான்
கணக்காளியா நானிருந்தேன்
கணக்கரு காலம் போக
கடுகு சம்பா நெல்லுக்கு
களங் கூட்டப் பஞ்சையானேன்

வட்டார வழக்கு : மொளவு-மிளகு ; மொறம்-முறம் ; கணக்காளி-சொந்தக்காரி.

குறிப்பு : விதவையின் நிலை கண்டு அண்ணன் தம்பி, அக்கா தங்கையர் யாரும் இரங்கவில்லை. அவளைக் காண வருவதில்லை. அவளைத் தங்கள் வீடுகளுக்கு அழைப்பதுமில்லை. கணவன் வாழ்ந்தபோது அடிக்கடி விருந்தாளி வந்த சுற்றத்தார், அவனிறந்ததும் வருவதை நிறுத்தி விட்டனர். அவனா அவர்களுக்கு உறவு? உறவை ஏற்படுத்துவதும் செல்வம்தானே? கணவனோடு அவளுக்குச் செல்வம் போயிற்றல்லவா? அதை நினைத்து மனமுருகிப் பாடுகிறாள் விதவை.

உதவியவர் : நல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி

இடம்:
சேலம் மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:01:43(இந்திய நேரம்)