கோவில்களில் தமிழில் வழிபாடு
நடைபெற வேண்டும் என்றும் பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில்
நடைபெற வேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார். அவர்வழி நின்றொழுகும் எனக்குத்
தமிழ் வழிபாட்டுக்குரிய 22 போற்றி நூல்களை வெளியிடும் வாய்ப்புக் கிட்டியமை
குறித்து மகிழ்கிறேன்.
‘பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாறு‘ எழுதுபவர்கள் தொல்காப்பியம், கழக
இலக்கியங்கள் தொடங்கி, இக்கால இலக்கிய வகைகளான ‘நாடகம், உரைநடை, புதினம்,
சிறுகதை, கவிதை‘ என்பவைவரை விரிவாக எழுதி முடிப்பர். இக்காலப் புதுக்கவிதையார்கள்
பற்றியும் விரிவான செய்திகள் இடம்பெறும். ஆனால் பாவாணர் எழுதிய வரலாற்று நூலில்
சில புதுமைகள் உள்ளன. வையாபுரிப் பிள்ளை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில்
தொடங்கி, பின்னர் வெளிவந்த ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி‘ போன்றவை
தமிழுக்கு ஆக்கம் சேர்க்காதவை; ஒதுக்கப்பட வேண்டியவை என்று எழுதுகிறார்.
பொதுவான
இலக்கிய வரலாற்றில் வையாபுரிப் பிள்ளையின் பணி அவர் படைத்த நூல்கள்பற்றிய
குறிப்புகள் மட்டுமே இடம்பெறும். ஆனால் பாவாணர் நூல் அந்த கோணத்தில் செல்லவில்லை.
நச்சு எழுத்து எதுவாயினும் எந்தச் சூழலிலும் துணிந்து கண்டிக்கும் - சுட்டிக் காட்டும்
பண்பு பாவாணர்க்கு உண்டு என்பதையே இது காட்டுகிறது.
வடமொழி வல்லாண்மையை ஒழித்துக் கட்டுவதில்
முனைப்பாக இருந்த பாவாணர், வடமொழியாளர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தார்கள் என்பதையும்
சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றார்.
பரிதிமாற் கலைஞர் எனும் வி.கோ.சூரியநாராயண
சாத்திரியார் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார். வடவர், தமிழ்நூல்கள் பலவற்றைத்
தம் மொழியில் மொழிபெயர்த்துக்கொண்டு, பின்னர் மூலநூல்களை அழித்துவிட்டனர்
என்றார். இந்தக் கருத்தை வலிமையாகப் பற்றிக்கொண்ட பாவாணர், விரிவான
கருத்துகளை வெளியிட்டதுடன் ‘பேரன் பாட்டனைப் பெற்றான்‘ என்பதுபோல் வடமொழியாளர்
போலியாகப் புலம்புகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அவருடைய நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க
ஒன்று உள்ளது. "தாம் எழுதிய சில நூல்கள் மட்டும் வெளிவந்து விட்டால், தமிழர்கள்
தெளிவு பெற்று விடுவார்கள் என்றும், தமிழ்நாடே மாறிப் போய்விடும் என்றும்" அவர்
நம்பினார்.
அவர் கருதியவாறே அந்த நூல்களும் வெளிவந்துவிட்டன.
அரசும் உருபா 20 இலட்சம் பரிபுத் தொகையாக வழங்கி, அவரது நூல்களை நாட்டுடைமையாக்கிவிட்டது.
இன்ன பதிப்பகத்தார் வெளியிட முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டுகளெல்லாம் நீங்கி,
யாரும் வெளியிடலாம் எனும் நிலை வந்துவிட்டது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சில நூல்களை வெளியிட்டது. தற்போது நண்பர் இளவழகன் அனைத்துப் படைப்புகளையும்
வெளியே கொண்டுவந்துவிட்டார்.