Primary tabs
என்பதனை உறுதியாக நான் சொல்லமுடியும். கட்சிக் காழ்ப்புக்கு சிறிதேனும்
இடந்தராத வகையில் எனது எழுதுகோலைப் பயன் படுத்தியுள்ளேன்.
இன்றைய காங்கிரஸ் கட்சியானது பிற கட்சிகளுடன் நடத்தி வரும்
போட்டி - போராட்டம் காரணமாக , அதன் கடந்தகாலப் புனித வரலாறு
மறக்கப்பட்டோ , மறைக்கப்பட்டோவிடுமானால், அது இந்தியாவுக்கும் தமிழர்
இனத்துக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாக முடியும் என்பது என் கருத்து.அந்த
இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே, 'கப்பலோட்டிய தமிழன்', 'சுதந்திரப்
போரில் தமிழகம்' , 'தமிழர் கண்ட காந்தி' என்னும் நூற்களை ஏற்கனவே
வெளியிட்டுள்ளேன் . அவற்றின் தொடர்ச்சியாகவே இந்த நூல் வெளி
வருகின்றது. இன்னும் பல நூல்களையும் வெளியிட எண்ணியுள்ளேன். தமிழ்
மொழியை வளர்த்த பெருமையிலே, இன்றுள்ள அரசியல் கட்சிகளிலே எந்த
ஒரு கட்சிக்கும் தனிவுரிமை இருப்பதாக நான் நம்பவில்லை என்பதனை
இங்கு அழுத்தந்திருத்தமாக எடுத்துக்காட்ட விரும்புகின்றேன் . ஆம் ;
என் தலைமையின் கீழ் இயங்குகின்ற - தமிழ்மொழியை வளர்ப்பதற்கென்றே
வாழ்ந்து வருகின்ற - தமிழரசுக் கழகத்தையும் நினைவில் கொண்டே
இதனைக் கூறுகின்றேன்.
தமிழ்மொழியை வளர்க்கும் பணி அம்மொழி தோன்றிய காலந்தொட்டே
தொடர்ந்து நடந்து வருகின்றது . அதிலே கடவுளுக்கும் பங்குண்டு என்பது
பண்டைப் புலவர் பெருமக்களின் நம்பிக்கை.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் பாண்டிய வேந்தர்கள்.
தொல்காப்பியருக்கு முந்திய காலத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆனால், தொல்காப்பியர் காலந்தொட்டு , மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
காலம்வரை தமிழிலே திருக்குறள் , சிலப்பதிகாரம் போன்ற முதல் நூல்கள்
படைத்தும்; வில்லிபாரதம் ,கம்பராமாயணம் போன்ற - வேற்று மொழி முதல்
நூல்களுக்கு- வழி நூல்கள் தந்தும் ; மூல நூல்களுக்கு உரைகள் இயற்றியும்
சிதறிக் கிடந்த பேரிலக்கியங்களைத் தொகுத்து 'எட்டுத் தொகை'-'பத்துப்பாட்டு'
எனப்பெயர் தந்தும்;நவீன அச்சு இயந்திரம் தோன்றிய பின்னர் பழைய பனை
யோலைஏடுகளைச் செப்பனிட்டுச் சீர்படுத்தி நவீன முறையில்
பதிப்பித்தும் தமிழ் வளர்த்த சான்றோர் பலராவர்.
அவர்களிலே அரசர்களுண்டு; ஆண்டிகளுமுண்டு. புலவர்களும் உண்டு;
புரவலர்களுமுண்டு. புலவர்களிலே பெண்பாற் புலவர்களும் பெருந்தொண்