தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5


 

உறங்குந் தண்துறை ஊர"                (அகநா. 286)

என்றவழி, தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும்,

"பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்"           (குறுந்.1)

என்றவழிப்   பெருமணல்  உலகிற்கு    நெய்தல்   சிறந்தமையானும்
இந்நிலங்களை இவ்வாறு குறியிட்டார் என்று கொள்ளப்படும்.

பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலின்
அக்  காலத்துத்  தளிரும்   சினையும்  வாடுதலின்றி  நிற்பது  பாலை
என்பதோர் மரம் உண்டாகலின், அச்  சிறப்பு நோக்கிப் பாலை என்று
குறியிட்டார்.   கைக்கிளை   பெருந்திணை  என்பனவற்றிற்கு நிலமும்
காலமும், பகுத்து ஓதாமையின் இவ்வாறன்றிப் பிறிதோர் காரணத்தினாற்
குறியிட்டார். [ஏகாரம் ஈற்றசை.]                             (5)

6. காரும் மாலையும் முல்லை.

இனிக்     காலத்தால்  திணையாமாறு  உணர்த்துவான்  எடுத்துக்
கொண்டார். இஃது அவற்றுள் முல்லைத்திணைக்குக் காலம் வரையறுத்து
உணர்த்துதல் நுதலிற்று.

காரும்   மாலையும்  முல்லை - கார்காலமும்  மாலைப் பொழுதும்
முல்லைத் திணைக்குக் காலமாம்.

காராவது   மழை  பெய்யுங்  காலம். அஃது  ஆவணித் திங்களும்
புரட்டாசித் திங்களும். மாலையாவது, இராப் பொழுதின் முற்கூறு.  (6)

7. குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்.

இது, குறிஞ்சிக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

குறிஞ்சி  -   குறிஞ்சித்  திணைக்குக்  காலமாவது,  கூதிர் யாமம்
என்மனார் புலவர் - கூதிர்க்காலமும்  யாமப்பொழுதும் என்று கூறுவர்
புலவர்.

கூதிராவது ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களும் யாமமாவது
இராப்பொழுதின் நடுக்கூறு.                                 (7)

8. பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப.
இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

பனிஎதிர் பருவமும் உரித்து என மொழிப  - (குறிஞ்சித்திணைக்கு)
முன்பனிக்காலமும் உரித்தென்று சொல்லுவர்.

இதனைக் கூதிர்க்காலத்தோடு  ஒருங்கு கூறாமையின், அத்துணைச்
சிறப்பிற்று   அன்றெனக்   கொள்க.  குறிஞ்சி என்றது அதிகாரத்தான்
வந்தது.

முன்பனிக் காலமாவது  மார்கழித்   திங்களும்  தைத்  திங்களும்.
உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை.                       (8)

9. வைகறை விடியல் மருதம்.

இது, மருதத் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று.

வைகறை விடியல்  மருதம் -   வைகறை  விடியலும் மருதத்திற்குக்
காலமாம்.

வைகறையாவது      இராப்பொழுதின்   பிற்கூறு.   விடியலாவது,
பகற்பொழுதின் முற்கூறு. பருவம்   வரைந்தோதாமையின், அறுவகைப்
பருவமும் கொள்ளப்படும். இது நெய்தற்கும் ஒக்கும்.             (9)

10. எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.

இது, நெய்தற்றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று.

எற்பாடு-எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெற  தோன்றும் -
நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும்.

எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு.                     (10)

11. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.

இது, பாலைக்குக் காலமும் இடனும் உணர்த்துதல் நுதலிற்று.

நடுவு   நிலைத்திணை -  நடுவு நிலைத்திணையாகிய பாலையாவது,
நண்பகல்  வேனிலொடு முடிவுநிலைமருங்கின்  முன்னிய   நெறித்து -
நண்பகற்பொழுது  வேனிற் காலத்தொடு புணர்ந்து நின்றவழிக் கருதிய
நெறியை உடைத்து.

இஃது,  இளவேனில் முதுவேனில் என்னும் இருவகைப் பருவத்தின்
கண்ணும் வரும்.  நண்பகற்பொழுது   காலமாம் என்பதூஉம், ஆண்டு
இயங்கும் நெறி நிலமாம் என்பதூஉம், உணர்த்தியவாறு.

இளவேனிலாவது    சித்திரைத்  திங்களும்  வைகாசித் திங்களும்.
முதுவேனிலாவது  ஆனித் திங்களும் ஆடித் திங்களும். நண்பகலாவது
பகற் பொழுதின் நடுக்கூறு.

[முதல் ஏகாரம் பிரிநிலை, இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.]       (11)

12. பின்பனி தானும் உரித்தென மொழிப.
இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

பின்பனியும் உரித்து  என  மொழிப - பின் பனிக்காலமும் உரித்து
என்று கூறுப (பாலைக்கு).

இது   வேறோதினமையான்,  வேனில்போலச்  சிறப்பு  இன்றெனக்
கொள்க. பின்பனியாவது மாசித் திங்களும் பங்குனித் திங்களும்.

அஃதற்றாக,    இவ்வறுவகைப்  பருவமும்  அறுவகைப் பொழுதும்
இவ்வைந்திணைக்கு   உரியவாறு   என்னையெனின்,  சிறப்பு  நோக்கி
என்க.  என்னை   சிறந்தவாறு    எனின்?   முல்லையாகிய  நிலனும்,
வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து
கிடந்தன. புயல்கள் முழங்கக்   கவின்பெறும்    ஆகலின்,   அதற்கு
அது  சிறந்ததாம். மாலைப்பொழுது  இந்  நிலத்திற்கு இன்றியமையாத
முல்லை மலருங்காலம் ஆதலானும், அந் நிலத்துக்  கருப்பொருளாகிய
ஆனிரை  வருங் காலமாதலானும், ஆண்டுத்  தனியிருப்பார்க்கு இவை
கண்டுழி வருத்தம் மிகுதலின்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:37:16(இந்திய நேரம்)