Primary tabs

இச் செப்புத்தான் ஆறு வகைப்படும் : வினாவெதிர் வினாதலும்,
ஏவுதலும், மறுத்தலும், உற்றது உரைத்தலும், உறுவது கூறலும்,
உடம்படுதலும் என.
அவற்றுள் மறுத்தலும்,
உடம்படுதலுமே ஈண்டுச்
செப்பிலக்கணமாவன : ஒழிந்தனவற்றை முன் னமைத்துக் கூறுக
என்றவாறு.
வினா ஐந்து வகைப்படும் : அறியான் வினாதல், அறிவொப்புக்
காண்டல், ஐயமறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக்
காட்டல் என.
அவை வழுவாமற் சொல்லுக எனவே வழுவுதலும் உண்டென்பதாம்.
அவை வருமாறு : ‘கருவூர்க்கு வழியெது?’ என்றாற்குப் ‘பருநூல்
பன்னிரு தொடி’ என்பது செப்புவழூஉ. ஒரு விரல் காட்டி, ‘நெடிதோ?
குறிதோ?’ என்பது வினா வழூஉ. இதுவும் ஒரு
சொற்றொகையுணர்த்தியவாறு.
(13)
14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், வினாவும் இறையாகும்
ஒரோவழி யென்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை: வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே என்பது --
வினாவும் இறையாகும் அதற்கு இறைபடவரின் என்றவாறு.
அது வினாவெதிர்வினாதல் என்னுங் குற்றப்படாததன் கருத்து.
வரலாறு: சாத்தா வுண்ணாயோ? என்று வினாயினாற்கு உடம்படுதல்,
மறுத்தல் என் றிரண்டினுள் ஒன்று ஏற்றற்பாலது. உண்ணேனோ? என்று
வினாவினான் வினா உண்பதென்னும் பொருள்பட்டமையின்
வினாத்தானுஞ் செப்பு ஆயிற்று. (14)
15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் அவ் வழீஇ
யமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை: செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே என்பது --
செப்புத்தான் வழீஇயினவிடத்தும் வரைந்து மாற்றப்படாது என்ற