தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1158


றவாறு;  ஏகாரம்  பிரிநிலை  யேகாரம்.  வழீஇயினும்  என்ற  உம்மை
சிறப்பும்மை.  எனவே,  வினா  வழீஇயினவிடத்து அமையாது என்பது.
அப்பொருள்  புணர்ந்த கிளவியான என்பது -- அப்பொருட்கு இயைபு
பட வரின் என்றவாறு.  

அவ்வாறு வழீஇ  யமையுஞ்  செப்பாவன  :  உற்றது  உரைத்தலும்,
உறுவது கூறலும், ஏவுதலும் என இவை.  

அவற்றுள்,  உற்றது  உரைத்தல்  என்பது : ‘சாத்தா, உறையூர்க்குச்
செல்லாயோ?’ எனின்,  ‘கான்  முட்  குத்திற்று  ;  தலை நோகின்றது’
என்பது.  இனி  உறுவது  கூறல்  என்பது  :  ‘சாத்தா,  உறையூர்க்குச்
செல்லாயோ?’  எனின்,  ‘கடமுடையார்  வளைப்பர் ; பகைவர் எறிவர்’
என்பது. இனி, ஏவுதல் என்பது : ‘சாத்தா, உறையூர்க்குச் செல்வாயோ?’
எனின், ‘நீ செல்’ என்பது. 

இவை     மூன்றும்   வழீஇ   யமைவன:    வழூஉவேயெனினும்
அப்பொருள்பட   வந்தமையின்   அமைக  என்பது,  மற்றுள்ளனவும்
மேலேயடங்கின. (15)  

16.  செப்பினும் வினாவினுஞ் சினைமுதற்கிளவிக்
கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே.
 

இச்சூத்திரம்         என்னுதலிற்றோவெனின்,       செப்புவானொடு
வினாவுவானிடைக் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை:  செப்பினும்  வினாவினும்   என்பது   --  செப்புமிடத்தும்
வினாவுமிடத்தும்  என்றவாறு  ;  சினைமுதற்  கிளவிக்கு  என்பது  --
சினைக்கிளவிக்கும்  முதற்கிளவிக்கும்  என்றவாறு  ; அப்பொருளாகும்
உறழ்துணைப்  பொருளே என்பது  --  முதலொடு  முதலே பொரூஉக
சினையொடு சினையே பொரூஉக என்றவாறு. 

வரலாறு: ‘கொற்றவன் மயிர் நல்லவோ? சாத்தன் மயிர் நல்லவோ?’
என்று  வினாவின  விடத்து, ‘கொற்றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல ;
சாத்தன்  மயிரிற் கொற்றன் மயிர் நல்ல’ என்றிறுக்க. இது சினையொடு
சினை பொரீஇயினவாறு. 

இனி, ‘கொற்றன் நல்லனோ? சாத்தன் நல்லனோ?’ என்று கூறியவிட
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:12:41(இந்திய நேரம்)