Primary tabs

சொற்கள் தாம் அவ்வச் சொற்குக் கூறிய அவையே பொருளென
நிலைபெறச் சொல்லப்பட்ட இயல்பையுடைய ஆயினும், வினையொடும்
பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்து வேறுபடினும்-தாம்
அடைந்து வரும் வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத்
தோன்றி வேறு பொருளவாயும் அசை நிலையாயும் திரிந்துவரினும்,
தெரிந்தனர் கொளல்-ஆராய்ந்து கொள்க. எ-று.
வேறு பொருள என்று உணர்தற்குச் சார்பு, வினையும் பெயரும்.
(எ-டு.) ஓகாரம்: ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ?’
(அகம்.46:16) என ஈற்றசையாயும், ‘கலக்கொண்டன கள்ளென்கோ!
காழ்க் கொண்டன சூடென்கோ!’ என எண்ணாயும், ‘நீங்கின ளோவென்
பூங்கணோளே!’ (ஐங்குறு.375) என இரக்கக் குறிப்பாயும் வந்தது. என
என்பது: ‘ஊரெனப் படுவ துறையூர்’ எனச் சிறப்பின்கண் வந்தது.
அவர் நமக்குத் தஞ்சம் அல்லர் எனத் தஞ்சக் கிளவி, பற்று
என்கின்றது. மா: ‘ஓர்கமா தோழி! அவர் தேர்மணிக் குரலே’ என
முன்னிலைக்கண் அசைச்சொல்லாயும், ‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா
காலே’ (புறம்.193:4) என முன்னிலையன்றி அசைச்சொல்லாயும் வந்தது.
‘அதுமன் கொண்கன் தேரே’ என மன் அசைநிலையாய் வந்தது.
சாரியை இன்: ‘காப்பின் ஒப்பின்’ (73) என அசை நிலையாயும் வந்தது.
இனி, உருபு பொருண்மை நோக்கிய ஐகாரமும், ‘நேரை நோக்க நாரரி
பருகி’ எனவும், ‘முனையுண்டவ ருருகும் பசுந்தினைப் பிண்டியும்’
எனவும் அசைநிலையாய் வருதலுங் கொள்க.
‘தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே’
(ஐங்குறு.78)
‘விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே’ (ஐங்குறு.74)
என்பன தண்ணென்றது, போன்றது என முற்றுச்சொற்கண் சின்
அசை நிலைப்படு

