தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5263


 

எனவே     குறை   யுறுவார்  சொல்லுமாற்றானே   கண்ணி  முதலிய
கையுறையொடு   சேறலுங் கொள்க. பகுதியென   வரையாது   கூறலில்
தனித்துழிப் பகுதி   முதலியனவும்    இருவரு    முள்வழி    இவன்
தலைப்பெய்தலுடையன் எனத்தோழி உணருமாறும் வினாவுதல் கொள்க.
இவை குறையுறவுணர்தலும் இரு வருமுள்வழி அவன் வரவுணர்தலுமாம்.
முன்னுறவுணர்தல்  ‘நாற்றமுந்  தோற்றமும்’  (தொல்.பொ.114) என்புழிக்
கூறுப. மதியுடம்பாடு மூவகை யவென மேற்கூறுப. (127)

தோழி குறை அவட் சார்த்தி  மெய்யுறக்கூறலும்  -  தோழி  இவன்
கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய்  இருந்ததென்று  அவள்  மேலே
சேர்த்தி அதனை உண்மையென்றுணரத் தலைவன் கூறுதலும்:

உ-ம்:

“கருங்கட லுட்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ளோப்பு மொளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற வெமக்கு.”

“பண்பும் பாயலுங் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதமர்ந் தகன்ற வல்குற்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.”        (ஐங்குறு.176)

இவை வெளிப்பட்டன. இவற்றின் வேறுபாடு உணர்க.

“குன்ற நாடன்குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அஞ்சிலோதி யசையியற் கொடிச்சி
கண்போன் மலர்தலு மரிதிவள்
தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே.”      (ஐங்குறு.299)

இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே
இவள்கண்ணது  இவன்  வேட்கையென்று  தோழி  குறிப்பான் உணரக்
கூறியது.

குன்றநாடன், முருகன்; அவள் தந்தையுமாம்.

“உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில்
ஆரம் நாறும் அறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.”       (குறுந்.286)

இதுவும் அது.

இது முதலியவற்றைத் தலைவன்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:22:09(இந்திய நேரம்)