45. படைதலைக் கொண்டது

 

 

இதன்கண்: உதயணகுமரன் வாசவதத்தையைக்   கைப்பற்றிக் கொண்டு தன்ஊர் நோக்கிச் செல்லு   தலைஅறிந்த பிரச்சோதன மன்னன் படைமறவர் அவனைத்   தடுத்தற்கு வருதலும், அம்மறவரோடு யூகியின் மறவர் போர்   செய்தலும் பிறவும் கூறப்படும்.

            பெருந்தகை அண்ணல் பிடிமிசை ஏற்றித்
            திருந்திழை அணிந்த பரந்தேந்து அல்குல்
            நீர்மைப் பல்காசு நிழல்உமிழ்ந்து இமைப்பப்
            பார்வை முள்கிய பட்டுநிறம் பயப்பத்
        5   தானம்மீக் கூரி மேனிவந்து ஓங்கி
            அமிழ்துபெய் செப்பின் அன்ன வெம்முலை
            நுகர்பூங் காமத்து நுதிமுகம் முரிஞ்சிக்
            கடாஅ யானைக் கண்ணகம் மறைத்த
            படாஅத்து அன்ன படிவத்து ஆகிய
       10    வடகப் போர்வையை வனப்பொடு திருத்திக்
            கடக முன்கைக் காஞ்சன மாலை

     
              உரத்தகை அண்ணல் வரத்திற் பெற்ற
            வழிவரு நல்லியாழ் வயந்தகற்கு ஈத்துப்
            பொற்படைப் புளகமிசைப் பொங்குஞ் சாமரை
       15    நற்பிடி நடத்தொறும் நடுங்கும் தோழியைப்
            பொற்கொடி மருங்குல் புல்லுவனள் அருளிப்
 
              பவனத்து அரசன் உவனித்து எறிந்த
            குந்தக் கடைமணி உறுதலின் முரிந்த
            வலப்பால் எயிற்றின் குற்றமும் மலைத்துடன்
       20   வலிந்துமேற் சென்ற கலிங்கத்து அரசன்
            குஞ்சரம் மருப்பில் குறிஇடப் பட்டுச்
            செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து
            மார்பினது வனப்பும் தோளினது திரட்சியும்
            நிறத்தது நீர்மையும் நெடுமையம் அளவும்
       25   சிறைத்துயர் நீக்கற்குச் செய்த வேடமும்
            குறிக்கொளற்கு அமைந்தவை பிறவும் திறப்பட
            வாகியல் அமைச்சன் யூகிக்கு உள்ளவை
            சாங்கிய முதுமகள் தான்தெரிந்து உணர
            அறிவின் முன்னே செறியச் செய்த
       30   பொறியுடை ஓலை பொருக்கென வீழ்த்து
 
              மடத்தகை பொருந்திய வயத்தகை மாதரை
            நடுக்கம் ஓம்பி விடுக்குநள் போலச்
            சார்ந்தனள் ஆகிஅவள்கு ஓம்படைக் குறிப்பொடு
            நண்ணிய பொழுதுஇடைக் கண்ணிற் காட்ட
       35   வயந்தக குமரன் மறைத்து நீட்டலும்
            நயந்த நெஞ்சமொடு நன்கனம் அடக்கிச்
           சேறல் ஆற்றாள் மாறினள் மறைந்தபின்
 
              அம்கண் ஞாலத்து அன்புடை யோரைப்
            புன்கண் நீணீக்குதல் புகழுடைத்து ஆதலின்
       40   உங்கள் அன்பின் யான்உறு நோயினைப்
            பைங்கண் வேழத்துப் பகடுஅன்று ஈர்ந்ததுஇவள்
            செழுங்கடை மழைக்கண் செருக்கயல் புரைய
            உள்நெகிழ்ந்து கலிழ்ந்த உறாஅ நோக்கில்
            கண்நெகிழ் கடுநோய் கைவரு காலை
       45   ஈர்வது போலும் இருளுடை யாமத்துத்
            தீர்திறம் அறியேன் தேர்உழித் தீர்திறம்
            வந்துகை கூடிற்று ஆகலின் இன்றிது
            நீக்கல்நின் கடன்என மாக்கேழ் இரும்பிடி
            அந்தோல் செவியினுள் மந்திரம் ஆக
       50   வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன்
 
              கழிபோக்கு எண்ணிக் கடவா நின்றோன்
            கம்பலைக் கவற்சியில் கடுங்கொளைக் கொளீஇ
            அம்பொடு பிடித்த வில்லன் ஆகி
            ஒராஅ உரிமைக்கு ஒருபுடை வரூஉம்
       55   வராகன் என்னும் வயவனைக் கண்டே
            வந்தனை இப்பால் அஞ்சல் ஆர்ப்போர்
            கள்வர் ஆதலும் உண்டுஎன் கையகத்து
            தொள்வரிச் சிலையும் முடுவார் பகழியும்
            தந்தனை யாகிஎன் தகைவாள் ஏந்தி
       60   ஊறுஉண்டு எனினும் உழையிற் பிரியாது
            ஏறிவ் இரும்பிடி என்னொடு என்றுதன்
            நெஞ்சம் நெகிழா வஞ்சம்மனத்து அடக்கி
            அன்பின்று கிளந்த அருளில் பொருள்மொழித்
 
              தோட்டியின் வணக்கம் வேட்டவன் விரும்பிக்
       65   கொடுஞ்சிலை கொடுத்துக் கூப்பிய கையன்
            கடுஞ்செலல் இரும்பிடிக் கால்முதல் பொருந்தி
            ஏற்றம் விரும்பலும் இளம்பிடி எடுப்பி
            ஆற்றல் மன்னன் காற்றெனக் கடாவ
            விசையின் வீழ்ந்து வெருளி ஆற்றான்
       70   ஆய்பெருங் கடிநகர் வாயிலும் நோக்கான்
            கோமகன் உள்வழிக் குறுகலும் குறுகான்
            ஓவியம் உட்கும் உருவியைத் தழீஇப்
            போயினன் வத்தவன் புறக்கொடுத்து ஒய்யெனக்
 
              காவ லாளர் கலக்கம் எய்தி
       75   மண்ணக மழித்து மலைத்துச்சிறை கொண்ட
            நண்ணா மன்னன் நாட்டம் ஓராம்
            பண்ணமை பிடிமிசைப் பைஅரவு அல்குலை
            ஏற்றல் வேண்டுமென்று இரந்துஏற் றினமால்
            கூற்ற ஆணைஎம் கொற்றவன் தலைத்தாள்
       80   என்சொலிச் சேறுமென்று எண்ணுபு நாணினர்
 
              வெஞ்செலற் பகழியும் வில்லும் தழீஇத்
            தம்சினம் பெருகத் தாக்குநர்ப் பெறாஅர்
            பொங்குபுகழ் வேந்தன் வென்றி ஏத்தி
            விண்ணகம் ஏறின் அல்லது விரிநீர்
       85   மண்ணக வரைப்பின்எம் அண்ணலைப் பிழைத்தோர்க்கு
            இன்னுயிர்க்கு ஏமம் ஆகுதல் அரிதெனப்
            பின்னிலை முனியார் பிடிவழிப் படரக்
 
              கரைவேட்டு உலாஅங் கருங்கடல் அழுவத்து
            இரைவேட்டு உலாஅம் இனச்சுறவு இனத்தின்
       90   வத்தவ நாட்டு வித்தக வீரரும்
            மலைக்கும் மாந்தரைத் தலைக்கொண்டு ஓடி
            ஐந்தலை நாகத்து அழலுறு கண்ணினர்
            பைந்தலை துமித்துச் செங்குடர் சிதறிப்
            பிடித்த வாளர் மடித்த வாயர்
       95   திருஅமர் மூதூர்த் தெருவும் கோணமும்
            ஒருவழி ஒழியாது உயிர்நடுக்கு உறீஇத்
            திரிதருவர் மாதோ திருநகர் அகத்துஎன்