தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள்

1.4 சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மை

தமிழில் உரைநடையை     வளர்த்த அறிஞர்கள்
ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனிநடையை வகுத்துக்
கொண்டனர். திரு.வி.க.வின் உரைநடை வேறு;
மறைமலையடிகளின் உரைநடையின்     இயல்பு வேறு.
ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையது. அதைப்போலவே
இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடையும் தனிச்சிறப்புடையது
எனலாம்.

‘ஊரும் பேரும்’ என்னும் இவரது நூலின் முதற்பதிப்பிற்கு
முன்னுரை தந்த திரு.வி.க.

“நூலின் நடைக்கண் நடம்புரியும் பீடும் மிடுக்கும் வீறும்
நாட்டின் கவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை
எழுப்பி, அதை ஊக்குவனவாம்” என்று குறிப்பிடுகின்றார்.
இங்கு, திரு.வி.க. அவர்கள் இரா.பி. சேதுப்பிள்ளையின் நடை
பீடும் மிடுக்கும் வீறும்
கொண்டது என்று குறிப்பிடுவதை
நினைவில் கொள்ள வேண்டும். இதையே சேதுப்பிள்ளை
உரைநடையின் தனித்தன்மை என்று குறிப்பிடுதல் பொருந்தும்.

திரு.வி.க. அவர்கள் பீடும் மிடுக்கும் வீறும் என்று
குறிப்பிடுவதற்குச்     சேதுப்பிள்ளையின்     உரைநடையில்
காணப்படும் ‘அழகுபொதி (நிறை) அடுக்குமொழிகளே’ பெரும்
பங்கு ஆற்றுகின்றன     எனலாம். கவிதைக்கே உரிய
எதுகையையும் மோனையையும் உரைநடைக்கும் ஏற்றித் தமிழ்
உரைநடைக்கு வீறு     தந்தவர்     என்பதற்குப் பல
எடுத்துக்காட்டுகளை முன்னரே கண்டோம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:20:35(இந்திய நேரம்)