தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் உரைநடைக்கு மு.வ.வின் பங்களிப்பு

4.3 தமிழ் உரைநடைக்கு மு.வ.வின் பங்களிப்பு

மு. வரதராசனாரின் படைப்புகள் அனைத்தும் தமிழ்
உரைநடைக்கு அவர் அளித்த பங்களிப்புகள் ஆகும். அந்தப்
பங்களிப்புகள் எந்தெந்த வகைகளில் அமைந்துள்ளன
என்பதைப் பற்றிக் காண்போம்.

மு.வ.வின் பங்களிப்புகளைப்     பின்வரும் ஐந்து
தலைப்புகளில் வகைப்படுத்திக் காணலாம். அவை,
 

(1)
புனைகதை
(2)
இலக்கிய ஆய்வுகள்
(3)
கடித இலக்கியம்
(4)
திருக்குறள் தெளிவுரை
(5)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்

என்பன.
 

புனைகதை என்பது     படைப்பிலக்கியம் என்றும்
அழைக்கப்படும். இப்பிரிவில் மு.வ.வின் சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், சிந்தனைக் கதைகள் ஆகியவற்றை
அடக்கலாம். முறையாகத் தமிழ் பயின்று, பள்ளிகளில்
அல்லது கல்லூரிகளில் தமிழாசிரியர்களாகத் திகழ்பவர்கள்
படைப்பிலக்கியத் துறையில் புகழ்பெறுவதில்லை என்றவொரு
கருத்து மு.வ. காலத்தில் நிலவியது. அதனைத் தம்
புனைகதைகளால் முறியடித்தவர் மு.வ. தமிழ்ப் பேராசிரியர்கள்
நாவல், சிறுகதை, நாடகம் முதலியவற்றைப் படைத்துப்
பாராட்டுப் பெற முடியும் என்பதை மு.வ. நிறுவினார்.
 

  • புனைகதைகளில் மொழிநடை
  • தமிழ் உரைநடையில் மு.வ.வின் முக்கியப் பங்களிப்பு
    என்பது அவரது புனைகதைகளில் காணப்பட்ட மொழிநடை
    ஆகும். புனைகதைகளில் கதைமாந்தர்களின் உரையாடல்
    அவர்தம் கல்வி, வாழ்க்கை நிலை, வாழ்விடம் இவற்றிற்கு ஏற்ற
    வகையில் தான் அமைய வேண்டும்; அமையும் என்று
    மற்றவர்கள் எண்ணியும் எழுதியும் வந்த போது மு.வ. தம்
    கதைமாந்தர்கள் அனைவரையும் தூய தமிழில் பிறமொழிக்
    கலப்பற்ற தமிழில் பேசுமாறு படைத்தவர். மு.வ.வின்
    புனைகதைகளில் கைவண்டி     இழுப்பவரும், கல்லூரிப்
    பேராசிரியரும் ஒரே வகையிலேயே பேசும் இயல்பினராகப்
    படைக்கப்பட்டுள்ளனர்.
     

    மு.வ. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில்
    தமிழகத்தில் சங்க இலக்கியங்களைப் பயில வேண்டும் என்ற
    வேட்கை எழுந்தது. அதற்கு ஏதுவாகச் சங்க இலக்கியக்
    காட்சிகளை மு.வ. தனித்தனி ஆய்வு நூல்களாக ஆக்கித்
    தந்தார். இவ்வகையில் மு.வ. ஆக்கியவற்றுள், முல்லைத்
    திணை, நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து,
    நற்றிணை விருந்து
    முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

    இந்த உரைநடை நூல்கள் சங்க இலக்கியக் காட்சிகளை
    இயல்பாக வெளிப்படுத்தும் தன்மையில் அமைந்தவை ஆகும்.
    இது மு.வ.வின் மற்றொரு பங்களிப்பாகும்.
     

    ஆங்கில இலக்கியத்தில் ‘கடித இலக்கியம்’ என்பது
    புகழ்பெற்ற உரைநடை வடிவமாக அமைந்திருந்தது. அதனைப்
    போலவே தமிழிலும் கடித இலக்கியத்தைப் படைத்துக் காட்ட
    வேண்டும் என்று முனைந்தவர்களில் மு.வ. குறிப்பிடத்தக்கவர்.
    இவர் எழுதிய கடித நூல்கள் நான்கு ஆகும். அவை முறையே,
     

    (1)
    அன்னைக்கு
    (2)
    நண்பர்க்கு
    (3)
    தம்பிக்கு
    (4)
    தங்கைக்கு

    என்பன.

    மு.வ.வின் கடித இலக்கியங்களில் ஒரு குடும்பம் கற்பனை
    செய்யப்படுகிறது. அது படித்த குடும்பம். குடும்பத்தில் தந்தை,
    தாய் இருக்கின்றனர்; இரண்டு ஆண்பிள்ளைகளும், ஒரு
    பெண்பிள்ளையும் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில்
    அண்ணன் தம்பிக்கும் தங்கைக்கும், மகன் அன்னைக்கும்
    எழுதும் கடிதங்கள் கடித இலக்கியம் என்னும் மு.வ.வின்
    பங்களிப்பாக அமைந்துள்ளன.

    மு.வ.வின் கடித உரைநடைக்கு ஓர் எடுத்துக் காட்டைக்
    காண்போம்.

    “தமிழர்கள்     நல்லவர்களாக     மட்டும் இருந்து
    தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும்
    அழிந்தது போதும், இனிமேல் வல்லவர்களாகவும் வாழக்
    கற்றுக் கொள்ள வேண்டும்” (தம்பிக்கு, பக்கம். 6)
     

    ‘தமிழ் மறை’ என்று போற்றப்படும் திருக்குறளுக்குப்
    பண்டைய நாளில் பத்துப்பேர் உரை எழுதியுள்ளனர்.
    இருபதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்கள் பலரும் இந்த
    அறநூலுக்கு உரை     வகுத்தனர். இவர்களுள் மு.வ.
    குறிப்பிடத்தக்கவர். மு.வ திருக்குறள் தெளிவுரை தமிழ்
    உரைநடைக்கு அவர் வழங்கியிருக்கும் வளம் நிறை
    கொடையாகும்.

    மு.வ.     திருக்குறள்     முழுமைக்கும்     தெளிவுரை
    வழங்கியிருக்கிறார். அவரது உரைநடை திருக்குறளைத்
    தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
     

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு

    என்னும் குறளுக்கு மு.வ வழங்கியிருக்கும் தெளிந்த உரையைப்
    பாருங்கள்.

    “மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
    என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு
    நல்லணிகலம் என்றும் கூறுவர்”.

    தமிழக மக்களிடையே திருக்குறளின் கருத்துகளை எளிய
    நடையில் எடுத்துச் சென்று சேர்த்த பெருமை மு.வ.வின்
    உரைநடைக்கு உண்டு என்பதில் ஐயமில்லை.
     

    தமிழ் உரைநடைக்கு மு.வ. வழங்கிய மற்றுமொரு
    பங்களிப்பாக அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களைக்
    குறிப்பிடுதல் வேண்டும். மு.வ எழுதிய வாழ்க்கை வரலாற்று
    நூல்கள் நான்கு. அவை முறையே,
     

    (1)
    அறிஞர் பெர்னாட்ஷா
    (2)
    காந்தியண்ணல்
    (3)
    கவிஞர் தாகூர்
    (4)
    திரு.வி.க.
    ஆகும்.
    பெர்னாட்ஷா
    காந்தி
    தாகூர்
    திரு.வி.க.

        வாழ்க்கை வரலாற்று நூல்களில் அமைந்திருக்கும்
    மு.வ.வின் உரைநடைக்குக் கவிஞர் தாகூர் நூலில் இருந்து
    (பக்கம். 50) சில வரிகளைக் காணலாம்.

    “அந்த வீட்டில் நூல் நிலையமும் ஆபீசும் அமைத்து,
    சுற்றிலும் தொண்டர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டன.
    உழவுத் துறையில் முன்னேற்றங்கள் காணுமாறு கவிஞர்
    தூண்டினார். சிறந்த வகையில் நெல்லும் கரும்பும் பயிராயின”.



     
    1.
    மு.வ. வகித்த பதவிகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
    2.
    மு.வ. படைத்த நூல்களின் எண்ணிக்கை யாது?
    3.
    சாகித்திய அக்காதமி பரிசு பெற்ற மு.வ.வின் நூல்
    எது?
    4.
    தமிழ் உரைநடைக்கு மு.வ.வின் பங்களிப்பை
    எத்தனைத் தலைப்புகளில் காணலாம்?
    5.
    புனைகதைகளில் மு.வ.வின் பங்களிப்பு என்ன?
    6.
    மு.வ.வின் கடித இலக்கியம் குறித்து எழுதுக.
    7.
    மு.வ. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள்
    எத்தனை?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:28:29(இந்திய நேரம்)