தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியன் நல்லந்துவனார்

ஆசிரியன் நல்லந்துவனார்
6. வையை


வையையில் பெருவெள்ளம்

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
5
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
10
தாயிற்றே தண் அம் புனல்.


புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்

புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.


வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து எழுதலும்

தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
15
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
20
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: 'வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக' எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று.


மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்

25
அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
30
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்
அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்:
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
35
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,


ஆற்றினது நீரோட்டம்

சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
40
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.


அந்தணர்கள் கொண்ட கலக்கம்

நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து,
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
45
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு.


பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்

மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப, 'நலன் அழிந்து,
50
வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என,
சேறு ஆடு புனலது செலவு.
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
கரை அழி வால் அருவி கால் பாராட்ட,
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
55
புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி,
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே,
60
தமிழ் வையைத் தண்ணம் புனல்.


இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை
நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்

'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்.'
'தளிர் அறிந்தாய், தாம் இவை.'


களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்

'பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து;
என்னோ துவள் கண்டீ?
65
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக்
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.'


தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என

'புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
70
பெருக்கு அன்றோ, வையை வரவு?'


தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து உரைத்தல்

'ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப்
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
75
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,
குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில்,
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
வையை வயமாக வை.
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
80
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
85
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி, வரவு!'


தலைமகன் மேலும் கூறுதல்

'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான்
90
கொள்ளா அளவை, எழும் தேற்றாள்: கோதையின்
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என


காதற் பரத்தை கூற்று

தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்
யாறு உண்டோ? இவ் வையை யாறு.


தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை

'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
95
தலை தொட்டேன், தண் பரங்குன்று!'


விறலிக்குத் தலைமகள் கூறுதல்

'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
100
வல் இருள் நீயல்; அது பிழையாகும்' என,
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து,
வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
105
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க, வையை! நினக்கு.
'வையை நீர் விழவணியில் காதற்பரத்தை, "இற்பரத்தையுடன் நீராடினான் தலைமகன்' எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்' எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ் வையை நீர் விழவணியும், ஆங்குப் பட்ட செய்தியும் கூறி, வாயில் மறுத்தது. ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்



8. செவ்வேள்


திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்

மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
5
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
10
பற்றாகின்று, நின் காரணமாக;
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
15
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்
அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
20
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.


குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள வழி

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
25
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின்
குன்றத்தான் கூடல் வரவு.


குன்றத்தின் முழக்கம்

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
30
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழை குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
35
குன்றம் குமுறிய உரை.


தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்பு கூறுதல்

'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
40
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
45
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்
சிறப்பிற்றே தண் பரங்குன்று.'


தலைமகள் புலந்து உரைத்தல்

'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்
50
காலை போய் மாலை வரவு.'


தலைமகன் சூளும் தலைவி விலக்கலும்

'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;...
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
55
துனியல் நனி' 'நீ நின் சூள்.'


தோழி தலைமகனைச் சூள் விலக்கிக் கூறுதல்

'என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்:
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
60
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ?
65
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்:
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்:
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
70
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'


தலைமகனது உரை

யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!
கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
75
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண்
பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்
80
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!


தோழி தலைமகளின் கற்புடைமை கூறுதல்

'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
85
பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை
எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்.


தலைமகளிரது செய்தி

90
வளி பொரு சேண் சிமை வரையகத்தால்
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
95
நனி மலர்ப் பெரு வழி,
சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
100
மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
'கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
105
வரு புனல் அணிக' என வரம் கொள்வோரும்,
'கரு வயிறு உறுக' எனக் கடம்படுவோரும்,
'செய் பொருள் வாய்க்க' எனச் செவி சார்த்துவோரும்,
'ஐ அமர் அடுக' என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
110
மஞ்சு ஆடு மலை முழக்கும்,
துஞ்சாக் கம்பலை
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர்,
115
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
120
அரிவையர் அமிர்த பானம்
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;


பரங்குன்றை வாழ்த்தல்

என ஆங்கு,
125
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
130
தண் பரங்குன்றம்! நினக்கு.


கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்


11. வையை


மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்

'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
5
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
10
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
15
நெரிதரூஉம் வையைப் புனல்.


தோழி திருமருதத் துறையின் சிறப்புக் கூறுதல்

'வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்,
20
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
25
வயவர் அரி மலர்த் துறை என்கோ?
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ? பெரிய
30
திருமருத நீர்ப் பூந் துறை.'


கண்டார் கூற்று

'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
35
வழியது பக்கத்து அமரர் உண்டி
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
40
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற!
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'
45
என ஆங்கு
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு.


வையை போர்க்களத்தை ஒத்தல்

50
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர்
குந்தம் ஏந்துவோர், கொள்வார் கோல் கொள்ளக்
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம்
படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும் சாயற் கழித்
55
துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
60
பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும்
பாய் தேரான் வையை அகம்.


இளவேனிற் காலத்து ஆடல்

நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
65
புனை வினைப் பொலங் கோதையவரொடு,
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
70
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை.
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.


தைந் நீராடல்

கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
75
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
80
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
85
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
90
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!


மகளிர் செயல்கள்

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
95
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
100
கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்.
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
105
மல்லிகா மாலை வளாய்.


மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்

தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
110
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு' என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு.
115
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும்,
'"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும்,
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,
120
'"கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!' என்மாரும்


ஒருவன் உவந்தவை காட்டுதல்

'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
125
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்:
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை
ஓர்மின்: பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப்
பாடி, கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும்
130
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ
நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து,
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்
என ஆங்கு


தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்

இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
135
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
140
நறு நீர் வையை நயத் தகு நிறையே!

வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட் டேம்' என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

20. வையை

புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
5
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
10
கான் ஆற்றும் கார் நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.


புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வகை

தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று: உயர் மதிலில்
15
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
20
மகளிர் கோதை மைந்தர் புனையவும்,
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
25
மாட மறுகின் மருவி மறுகுற,
கூடல் விழையும் தகைத்து தகை வையை.


தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட 
காலத்து நேர்ந்த நிகழ்ச்சி

புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
தகை வகை தைஇயினார் தார்;
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
30
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
35
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க,


தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதலும்

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.


தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்

40
என ஆங்கு,
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள் இவ் வாணுதல்'
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு 'யாது தொடர்பு?' என்ன
45
மறலினாள், மாற்றாள் மகள்.


தலைமகளின் திகைப்பு

வாய் வாளா நின்றாள்,
செறிநகை சித்தம் திகைத்து.


ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்

ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
50
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
மூரி தவிர முடுக்கு முது சாடி!
55
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்
தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
60
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து,
மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம்.
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
65
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்


பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று

தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார், வையையகத்து.
'சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க;
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை
70
வந்திக்க வார்' என


பரத்தையின் பதில் உரை

'மனத் தக்க நோய் இது;
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு.'


தலைவி கூற்று

75
'அ...சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.'


பரத்தையின் மறுமொழி

80
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
கால சிலம்பும் கழற்றுவான்; சால,
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'
என ஆங்கு


கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்


85
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே.


தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்

சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
90
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்!
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல்!
95
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'


வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின் சுருங்கை வழியே பாயும் காட்சி

என ஆங்கு
இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்,
தென்னவன் வையைச் சிறப்பு.
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
100
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
அருவி சொரிந்த திரையின் துரந்து;
105
நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும்
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது.


பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு

நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும்,
110
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்
பூ மலி வையைக்கு இயல்பு.

பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:23:51(இந்திய நேரம்)