தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஊர்ந்ததை எரி புரை

ஊர்ந்ததை எரி புரை
21. செவ்வேள்

பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
5
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
10
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்.
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி,
15
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்.
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்
வென்றிக் கொடி அணி செல்வ! நிற் தொழுது.

பரங்குன்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,
துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,
20
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்,
நுனை இலங்கு எஃகெனச் சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும்;
நிழல் காண் மண்டிலம் நோக்கி,
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;
25
பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;
பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந்
திட்டோய்! நின் குன்றின்மிசை.

குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்
30
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி
இசை படு பக்கம், இரு பாலும் கோலி,
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;
35
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க;
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று.

சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
40
மீ நீர் நிவந்த விறலிழை, 'கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக' என,
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,
கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
45
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று.

குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுகள்
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,
50
உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,
அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த
பசும் பூண் சேஎய்! நின் குன்றம் நன்கு உடைத்து.

சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்
55
ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,
மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்
பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,
பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்
60
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான்,
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்
ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்
65
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்.

முருகவேளை வாழ்த்துதல்
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை
இன்று போல் இயைக!' எனப் பரவுதும்
70

கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு
கண்ணகனார் இசை
பண் காந்தாரம்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:28:21(இந்திய நேரம்)