தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நிலவரை அழுவத்தான்

நிலவரை அழுவத்தான்
15. திருமால்


திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரை தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
5
பல எனின், ஆங்கு அவை பலவே: பலவினும்,
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
10
குல வரை சிலவே: குல வரை சிலவினும்
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
15
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.


'திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக' எனல்

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
20
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
25
நாமத் தன்மை நன்கனம் படி எழ,
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!


மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்

30
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ்
சினை யெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.


சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்

சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே
35
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.


குன்றத்தில் பிறக்கும் ஓசைகள்

மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
40
மணி மருள் நல் நீர்ச் சினை மட மயில் அகவ,
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்க்
45
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று.


குன்றத்தானைச் சுற்றம் புடை சூழ்ப் போற்றுமின்

தையலவரொடும், தந்தாரவரொடும்,
கைம் மகவொடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
50
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்,
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.


பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்

கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
55
ஒள் ஒளியவை, ஒரு குழையவை;
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
60
வரி சிலை வய அம்பினவை;
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை:
என ஆங்கு
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
65
'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே.


கடவுள் வாழ்த்து
இளம்பெருவழுதியார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:30:05(இந்திய நேரம்)