தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கள்ளி
53. பாலை
அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
10
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
15
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
5
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
10
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
உறுவது கூறும், சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
15
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்
184. முல்லை
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
5
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
10
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி,
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
15
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
337. பாலை
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
5
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
10
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
15
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
கள்ளி நீழல் கதறுபு வதிய,
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
எமியம் கழிதந்தோயே பனி இருள்
20
பெருங் கலி வானம் தலைஇய
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:12:05(இந்திய நேரம்)