தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இருப்பைப்பூ
135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
5
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
10
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர்
149. பாலை
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
5
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
10
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
15
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
225. பாலை
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளை,
5
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
10
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
15
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
செறி தொடி முன்கை, நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
247. பாலை
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
5
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
10
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
267. பாலை
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
5
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
மை பட்டன்ன மா முக முசுவினம்
10
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
15
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
தோளே தோழி! தவறு உடையவ்வே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10
ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
321. பாலை
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
5
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
10
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
15
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
யாய் அறிவுறுதல் அஞ்சி,
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
5
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
10
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
வேளிரொடு பொரீஇய, கழித்த
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
351. பாலை
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
5
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
10
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
15
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:21:55(இந்திய நேரம்)