Primary tabs
பாடப்பட்டோர் பெயர்கள் பாடல்களிலும் அவற்றின் அடிக்குறிப்பிலும் காணப்பெற்றவாறே இங்குத் தரப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சில பெயர்கள் ஒருவரையே சுட்டுவனவாகவும் உள்ளன. உதாரணமாக அண்டிரன், ஆய், ஆய்அண்டிரன், என்பனவும், அஞ்சி, அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, நெடுமான் அஞ்சி, என்பனவும், செல்வக் கடுங்கோ வாழியாதன், செல்வக் கோமான், என்பனவும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், என்பனவும், ஒவ்வொருவரைச் சுட்டிய வேறுவேறு பெயர்கள். இவை போல்வன வேறும் சில உள. இங்ஙனமாக உள்ள பெயர்கள், சிறிது கூர்ந்து நோக்கினால் எளிதிற் புலப்படுவனவாம்.