தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மேல்

 

முகவுரை

இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்றுமில்லை. இது பெரும்பாலும் பேச்சு வழக்கு நடையிலேயே அமைந்திருக்கிறது. இதிற் சொல்லப்பட்டனவெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. சிறுவர்களும் எளிதாகப் படித்துப்பாடம் பண்ணக்கூடியவாறு எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாகவுள்ள சிறப்பியல்பு ஆகும். இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளிநாய்ச்சியாரிடத்திலும் பக்தியுடையவரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்துவாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது. இவர் இருந்த காலம் இடம் முதலியன தெரியவில்லை. ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியவற்றைப் போலவே இந்நூலும் தமிழ்நாட்டில் சிறுவர் சிறுமியர் அனைவரும் படித்துப் பயனெய்தற்குரியதாய் விளங்குகின்றது.

ந.மு. வேங்கடசாமி.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:06:07(இந்திய நேரம்)