151-160

151. குறிஞ்சி
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
5
வாரற்கதில்ல-தோழி!-கடுவன்,
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
10
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்

152. நெய்தல்
மடலே காமம் தந்தது; அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே;
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர,
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்;
5
எல்லாம் தந்ததன்தலையும் பையென
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ,
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே?

மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்

153. பாலை
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
5
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு,
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து,
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி,
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
10
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.

பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.-தனிமகனார்

154. குறிஞ்சி
கானமும் கம்மென்றன்றே; வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஓவாதே;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
5
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!-
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
10
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?

இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்

155. நெய்தல்
''ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
5
கண்டோர் தண்டா நலத்தை-தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை!'' என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
10
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே.

இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்.-பராயனார்

156. குறிஞ்சி
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!-
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
5
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால்,
பகல் வந்தீமோ, பல் படர் அகல!
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
10
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே.

இரவுக்குறி மறுத்தது.-கண்ணங் கொற்றனார்

157. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
5
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்,
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
10
நுண் பல் தித்தி மாஅயோளே.

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்

158. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! நம்வயின்,
யானோ காணேன்-அதுதான் கரந்தே,
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே;
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே-
5
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி,
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே.

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்

159. நெய்தல்
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
5
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
''எழு'' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
''ஒழி'' என அல்லம் ஆயினம்; யாமத்து,
10
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்

160. குறிஞ்சி
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
5
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்,
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
10
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே.

கழற்று எதிர்மறை.