201-210

201.குறிஞ்சி
''மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது'' என்றோய்! மற்றும்,
5
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்

202. பாலை
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
5
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
10
செல் சுடர் நெடுங் கொடி போல,
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.

உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ

203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
5
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு,
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
10
செய்த தன் தப்பல் அன்றியும்,
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்

204. குறிஞ்சி
''தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
5
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு'' என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
10
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-மள்ளனார்

205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
5
துன் அருங் கானம் என்னாய், நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே-படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
10
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்

206. குறிஞ்சி
''துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்'' என்று, அவ் வாய்த்
5
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க'' என
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
''நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி'' என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!-
செல்வாள் என்றுகொல்? ''செறிப்பல்'' என்றுகொல்?
10
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்

207. நெய்தல்
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
5
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
10
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.

நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-
5
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
10
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை,
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?

செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்

209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
5
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும்காலைஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!

குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்

210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
5
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்