தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    இருபதாம் நூற்றாண்டில் இயற்றமிழ்ப் பிரிவிலடங்கும் உரைநடை இலக்கியத்தில் சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்பன தனித்தனியே பல பிரிவுகளாக வளர்ச்சி பெற்றுள்ளன. இசைத்தமிழ் சுதந்திரத்துக்குப்பின் பெரிதான, குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஒன்றையும் பெறவில்லை. நாடகத்தமிழ், நசிந்து வந்தாலும் தொலைக்காட்சி, வானொலி என்பவற்றில் வாழ்கிறது. அதனை மீட்டு எடுக்கக் கூத்துப்பட்டறை, பரீக்ஷா, வீதிநாடகம் என்பன தோன்றியுள்ளன. சிறுகதை வளர்ச்சிக்கென 5 தனித்த இலக்கியப் பத்திரிகைகள் தோன்றியுள்ளன. நாவல் பல வகைகளுடன் கிளைத்துள்ளது. விடுதலைக்குப் பின் தொடர்கதையாக வந்து மக்கள் மனதில் நிலைத்த கல்கியின் வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள், சர்ச்சைக்கு உள்ளான ஜெயகாந்தன் நாவல்கள், தலித் நாவல்களான கருக்கு, சங்கதி என்பன குறிப்பிடத்தக்கன. கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் பல்துறை நூல்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தாலும் நாற்பது மொழிகளில் இருந்து அறிவியல் இலக்கியப் படைப்புகள் வந்துள்ளது அறிவியல் தமிழின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தமிழின் பக்தி இலக்கியம் அதிக அளவில் பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. புதுக்கவிதையின் வளர்ச்சியாக ஹைக்கூ கவிதைகள் உள்ளன. இலக்கணமும் மொழியியலும் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் வளர வேண்டியுள்ளது. தமிழ் இலக்கிய வரலாறு அறிஞர்க்கு, மாணவர்க்கு, ஆய்வாளர்க்கு எனப் பல்வகைத் தரம் உடையதாகத் தோன்றியுள்ளது. இலக்கியத்தின் மூலம் சமுதாய வரலாற்றை அறியும் முயற்சிகளும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. நாட்டுப்புறவியல், இதழியல், ஒப்பியல், கோயில் ஆய்வு எனப் பல துறைகள் புதிதாகத் தமிழில் வளர்ந்து வருகின்றன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1

    இலக்கண வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?

    2

    வாழும் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?

    3

    எழுத்துச் சீர்திருத்தத்தை முதலில் நடைமுறைப் படுத்தியவர் யார்?

    4

    European Contribution to Tamil - நூலின் ஆசிரியர் யார்?

    5

    தமிழில் முதலில் இலக்கிய வரலாற்று நூலை எழுதியவர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:27:34(இந்திய நேரம்)