தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.5 தமிழ்ச் சொல்லியல்

  • 6.5 தமிழ்ச் சொல்லியல்

    ஓர் உருபன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் ஒரு சொல்லாக அமையலாம். பொதுவாக ஒரு சொல் என்பது ஒரு வேர்ச்சொல்லையும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விகுதி அல்லது ஒட்டுகளையும் கொண்டதாக இருக்கும். தமிழில் உள்ள சொற்களை அவற்றின் இலக்கணச் செயற்பாட்டுக்கு ஏற்ப,

    1)
    பெயர்
    2)
    வினை
    3)
    பெயரடை
    4)
    வினையடை
    5)
    வல்லடை
    6)
    இடை

    என்று வகைப்படுத்தலாம்.

    பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்பது. எழுவாயாகச் செயல்படுவது. ஆக, ஆன முதலான விகுதிகளை ஏற்கும். பயனிலையாகவும் வரும்.

    சான்று:

    நிலம், மரம், யானை
    பெயர்கள்
    நிலத்தை, மரத்துக்கு, யானையால்
    உருபு ஏற்றன.
    நிலம் வலியது
    மரம் ஆடியது
    யானை வந்தது
    எழுவாயாக வந்தன.
    கருப்பாக, கருப்பான
    ஆக, ஆன விகுதிகளை ஏற்றன.
    அது கருப்பு
    பயனிலையாக வந்தது.

    ஆண்பால் பெயர், பெண்பால் பெயர், பலர்பால் பெயர், ஒன்றன்பால் பெயர், பலவின்பால் பெயர் என்று பெயர்களில் பல வகைகள் உள்ளன.

    செயலைக் குறிப்பது வினை. அது கால இடைநிலைகளை ஏற்கும். பால், இட விகுதியை ஏற்கும். முற்றாகவும், எச்சமாகவும் செயற்பட வல்லது. அடைகளால் தழுவப்படும்.

    எ.டு :

    ஆடு, பாடு, படி, போ, வா
    வினைச்சொற்கள்
    ஆடினான், பாடினான், படித்தான், போனான், வந்தான்
    கால இடைநிலைகளை ஏற்றன.
    ஆடினான், பாடினான்
    முற்றாக வருவன.
    ஆடிய, பாடிய
    எச்சமாக வருவன.
    வேகமாக ஆடினான், அழகாகப் பாடினான்
    வினையடைகளால் தழுவப்பட்டன.

    தமிழில் உள்ள வினைகளைத் தெரிநிலை வினை, குறிப்புவினை, குறைவினை என்று வகைப்படுத்தலாம்.

    தெரிநிலை வினை என்பது வினையடி, கால இடைநிலை, பாலிட விகுதி ஆகியவற்றைப் பெற்று வருவது.

    சான்று : செய்தான்.

    செய் -- வினையடி

    த் - கால இடைநிலை

    ஆன் - பாலிட விகுதி

    குறிப்பு வினை என்பது பண்படி, பாலிடவிகுதி மட்டுமே பெற்றுக் கால இடைநிலை பெறாமல் வருவது.

    சான்று : நல்லன்

    நல் - பண்படி
    அன் - பாலிட விகுதி
    (நல்லன் - நல்லவன்)

    குறைவினை என்பது கால இடைநிலை, பாலிட விகுதி ஏற்பதில்லை.

    சான்று : இல்லை, உண்டு.

    பெயருக்கு அடையாக வருவன பெயரடைகள் எனப்படும்.

    சான்று :

    உயரமான மரம்
    ஆழமான கிணறு.

    உயரமான, ஆழமான என்பவை மரம், கிணறு ஆகிய பெயர்களுக்கு அடையாக வந்தன. பெயரைத் தழுவி நிற்பன பெயரடைகளாம்.

    வினைக்கு அடையாக வருவன வினையடைகள் எனப்படும்.

    சான்று :

    அழகாகப் பாடினான்
    வேகமாக ஓடினான்

    அழகாக, வேகமாக ஆகியன பாடுதல், ஓடுதல் ஆகிய வினைகளுக்கு அடையாக வந்தன.

    பெயருக்கும், வினைக்கும், பெயரடைக்கும், வினையடைக்கும் அடையாக வரும் சொற்கள் வல்லடை ஆகும்.

    சான்று :

    மிகவும், நிரம்ப, இருமடங்கு, மும்மடங்கு, பன்மடங்கு என்பன. மிகவும் நீளம், மிகவும் அகலம், மிகவும் சுடுகிறது, மிகவும் வியர்க்கிறது, மிகவும் அழகான பாட்டு, மிகவும் வேகமாக ஓடினான்.

    இவற்றில் மிகவும் என்பது பெயருக்கும், வினைக்கும், பெயரடைக்கும், வினையடைக்கும் அடையாக வந்துள்ளதால் இதை வல்லடை எனலாம்.

    தனக்கென்று அகராதிப் பொருள் இல்லாதது இடைச்சொல் இலக்கணச் செயற்பாடு மட்டுமே கொண்டது. பெயர், வினை முதலானவற்றைச் சார்ந்தே இயங்குவது.

    சான்று :

    ஐ, ஆல், கு, ஓடு, இன், அது, கண் - ஆகிய வேற்றுமை உருபுகள்.
    த், வ் முதலான கால இடைநிலைகள்
    ஆ, ஏ, ஓ, தான் முதலானவை.
புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 11:58:41(இந்திய நேரம்)