தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

  • 3.2 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
     

    E

    பாரதிதாசனின் காப்பியங்களில் முதலில் (1930) வெளிவந்தது ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் காப்பியம் ஆகும்.

    இக்காப்பியத்தில் குப்பன் என்பவனும் வஞ்சி என்பவளும் சஞ்சீவி மலைக்கு வருகின்றனர். அவர்கள் இருவரும் காதலர்கள். வஞ்சியின் கையைக் குப்பன் தொடுவதற்குப் போனான். அப்போது வஞ்சி ‘தொடாதீர்கள்’ என்று சொல்லி விட்டாள்.

    ‘ஏன் உன்னைத் தொடக்கூடாது?’ என்று கேட்ட குப்பனிடம் காரணத்தைச் சொன்னாள் வஞ்சி. அந்தக் காரணத்தைக் கூறுவதில்தான் கதையே தொடங்குகின்றது. அடுத்து அதனைக் காணலாம்.
     

    3.2.1 இரண்டு மூலிகைகள்
     

    சஞ்சீவி மலையில் இரு அற்புத மூலிகைகள் உண்டு என்று வஞ்சியிடம் குப்பன் கூறியிருந்தான். அந்த மூலிகைகளைப் பறித்துத் தருவேன் என்றும் சொல்லியிருந்தான். ஆனால் அந்த மூலிகைகளைப் பறித்துத் தராமல் அவன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான். அந்த மூலிகைகளைப் பறித்துத் தந்து விட்டு என்னைத் தொடுங்கள் என்று சொல்லி விட்டாள் வஞ்சி.
     

    மலை உச்சியில் இருக்கும் அந்த மூலிகைகளைப் பறிப்பதற்கு உன்னால் மலை உச்சிக்கு வரமுடியாது என்று எடுத்துச் சொன்னான் குப்பன். வஞ்சி விடுவதாய் இல்லை. மூலிகை பறிப்பதற்கு என்றால் எவ்வளவு உயரத்திற்கும் என்னால் வரமுடியும் என்று சொன்னாள் அவள். மூலிகைகளைப் பறித்துக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டான் குப்பன். அதற்கு முன் அந்த மூலிகைகளின் அற்புதத்தைச் சொல்கிறேன் கேள்! என்றான்.
     

    3.2.2 மூலிகையின் அற்புதங்கள்
     

    ‘அந்த இரண்டு மூலிகைகளில் ஒன்றைத் தின்றால் உலகில் உள்ளோர் பேசுவது நமது காதில் நன்றாகக் கேட்கும். இன்னொரு மூலிகையைத் தின்றால், இந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் கண்ணுக்கு எதிரே தெரியும்’ என்று குப்பன் தெரிவித்தான். ஆகவே இந்த மூலிகைகள் உனக்கு வேண்டாம் என்று அவன் மேலும் தெரிவித்தான். ஆனால் வஞ்சியோ, ‘நீங்கள் சொன்ன அற்புதத்தைக் கேட்டபிறகு அந்த மூலிகைகளின் மேல் ஆசை கூடுகிறது’ என்று கூறினாள். நீங்கள் என்னை அழைத்துச் சென்று அந்த மூலிகைகளைப் பறித்துத் தராவிட்டால் நானே சென்று பறிப்பேன். என்னால் மூலிகைகளைப் பறிக்க இயலவில்லை என்றால் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்து விடுவேன் என்றும் கூறினாள்.

    வஞ்சியின் உறுதியைக் கண்ட குப்பனும் அவளுடன் சென்று மூலிகைகளைப் பறித்தான். அவற்றில் உலகத்தில் உள்ளவர்களின் பேச்சை எல்லாம் கேட்கச் செய்யும் மூலிகையை இருவரும் தின்றார்கள்.
     

    • பிற நாட்டவர் பேச்சு
     

    உலகில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்கச் செய்யும் மூலிகையைத் தின்றதும் பிற நாட்டவர்களின் பேச்சுகளும் அவர்களின் காதுகளில் கேட்டன. அவ்வாறு கேட்டவற்றில் பிரான்சு நாட்டில் இருவர், அமெரிக்கர், இங்கிலாந்துக்காரர் ஆகியோரின் பேச்சுகளையும் இராமாயணச் சொற்பொழிவுக் காட்சி ஒன்றையும் இங்கே காண்போம்.
     

    • பிரான்சு நாட்டில் இருவர் பேச்சு
     

    இத்தாலி நாட்டுக்காரன் ஒருவன் பிரான்சு நாட்டு விடுதி ஒன்றில் தங்கியிருந்தான். அவன் அந்த விடுதியில் கறுப்பர்கள் உணவு உண்ணக்கூடாது என்று சொன்னான். அதைக் கேட்ட பிரான்சுக்காரன், எங்கள் நாட்டில் இந்த நிற பேதம் கிடையாது எனவே, நாங்கள் கறுப்பர்களைத் தடுக்க இயலாது என்றான்.

    • அமெரிக்கன் பேச்சு

    இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாய் இருக்க வேண்டும் என்று நல்ல அமெரிக்கன் நினைப்பான். தீய அமெரிக்கன் மட்டுமே, தான்மட்டும் செல்வம் உடையவனாக வாழ விரும்புவான். நான் நல்ல அமெரிக்கனாகவே வாழ விரும்புகிறேன்.
     

    • இங்கிலாந்துக்காரன் பேச்சு
     

    மூன்று கோடி மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களிடம் பிரிவினையும் முப்பத்து மூன்று கோடி இருக்கும். பிரிவினைகளை வளர்ப்பதற்காகவே அவர்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் வைத்திருக்கிறார்கள். ‘இந்த உலகம் பொய் பரம பதமே மெய்’ என்று வேதாந்தம் பேசும் வேதாந்திகள் அங்கே நிறைந்து உள்ளார்கள்.
     

    • இராமாயணச் சொற்பொழிவு
     

    இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வஞ்சி மகிழ்ச்சி அடைந்தாள். இந்த மூலிகை மிகவும் பயன்படும் என்று சொன்னாள். குப்பனின் அருகில் சென்றாள். அப்போது ஒரு குரல் யாரோ ஒருவர்க்குக் கட்டளை இடுவது போல் கேட்டது. “ஒரு நொடியில் ஓடிப்போய் சஞ்சீவி மலையை வேரோடு பேர்த்து வா” குரலைக் கேட்டதும் குப்பன் மிகவும் அஞ்சினான். ‘நாம் இருக்கும் இந்த மலையைத் தூக்கினால் நமது கதி என்ன ஆவது?’ என்றான். அதற்கு வஞ்சி ‘சஞ்சீவி மலையை மனிதனால் தூக்க இயலாது’ என்றாள்.

    அப்போது மீண்டும் குரல் கேட்டது.

    “உனக்கு இராமனின் அருளும் வானம் வரை வளரும் உடலும் உண்டு. உடனே போய், சஞ்சீவி மலையை எடுத்துவா” என்றது குரல்.

    இராமனின் அருள் பெற்றவன் வந்து மலையைத் தூக்கப்போகிறான் என்று கேட்டதும் குப்பன் மேலும் அஞ்சினான். அப்போது அந்தக் குரல் மேலும் கூறியது.
     

    “அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்து, அம்மலையில் உள்ள மூலிகையால் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் உயிர் கொடுத்தான். மீண்டும் சஞ்சீவி மலையை எடுத்த இடத்தில் கொண்டு போய் வைத்தான்” என்னும் குரலைக் கேட்ட குப்பன் ஆறுதல் அடைந்தான்; இனி ஆபத்து வராது என்று தெளிந்தான்.
     

    சற்று நேரத்தில், “இத்துடன் இன்று கதையை நிறுத்துகின்றேன். மீதியை நாளைக்குக் கூறுகின்றேன்” என்ற குரல் கேட்டது. உடனே வஞ்சி ‘இந்த மூலிகையைச் சாப்பிடுங்கள்’ என்று உலக நிகழ்ச்சியைக் கண்ணுக்குக் காட்டும் மூலிகையைக் குப்பனிடம் கொடுத்தாள். அதைக் குப்பன் சாப்பிட்டான். இராமாயணக் கதை சொல்பவனையும் அவனைச் சுற்றி இருந்த மக்களையும் குப்பனும் வஞ்சியும் பார்த்தார்கள்.

    ‘இப்போது புரிந்ததா? இராமயணக் கதை சொல்பவன் சொன்னதைத்தான் நாம் மூலிகையின் அற்புதத்தால் இதுவரை கேட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறினாள் வஞ்சி.

    உண்மையை உணர்ந்த குப்பன், வஞ்சியை அழைத்துக்கொண்டு மலை அடிவாரத்திற்கு வந்தான்.
     

    3.2.3 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - காப்பியக் கருத்து
     

    மனிதனோ விலங்கோ வானைத் தொடும் அளவு வளர்தல் என்பது அறிவுக்குப் பொருந்தாதது ஆகும். மனிதனாகப் பிறந்தவன் இறப்பது உறுதி. இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பவை கிடையாது போன்ற கருத்துகளைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

    பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைக் காலந்தோறும் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; சில ஏடுகளும் இதே கருத்துகளை வலியுறுத்துகின்றன. எவ்வளவுதான் முயன்றாலும் இவர்களால் மூடத்தனத்தைப் பரப்ப இயலாது என்பதை,
     

    பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஏடுகளால்
    எள்ளை அசைக்க இயலாது

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 361-362)


    என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

    உழைக்கின்ற அளவிற்கு ஏற்ப வருவாய் கிடைக்கும். வானத்திலிருந்து வருவாய் வந்து குவியாது. பரம்பொருள் ஒன்று இருக்கிறது என்பது உண்மையில்லை என்னும் கருத்துகளைப் பாவேந்தர்,

     

    மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?
    எக்காரணத்தாலும் இன்மையிலே உண்மை உண்டோ?

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 369-370)
     

    என்னும் வரிகளின் வழியாக விளக்கியுள்ளார்.

    இந்தியாவில் இமயமலை இருக்கிறது; கங்கை நதி பாய்கிறது; செந்நெல் வயல்களும் செங்கரும்புத் தோட்டங்களும் கனிகளும் நிறைந்துள்ளன. இங்கே முப்பத்து மூன்று கோடி மக்கள் வாழ்கிறார்கள்; எல்லா வளங்களும் இருக்கின்றன. இவற்றுடன் மூடப்பழக்கமும் இருக்கின்றதே! இந்த மூடப்பழக்கம் ஒழிந்தால்தான் இந்தியா முன்னேறும் என்பதை அழகாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
     

    நல்ல இமயம் நலம் கொழிக்கும் கங்கைநதி
    வெல்லத் தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை
    செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்
    தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன் மரங்கள்
    இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
    முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
    செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
    மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
    ஓடுவது என்றோ? உயர்வது என்றோ?

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 393-401)
     

    என்னும் வரிகள் பாரதிதாசனின் இச்சிந்தனையை நமக்குக் காட்டுகின்றன.

    இந்தியா விடுதலை பெறவேண்டும் என்றால் இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு முதலில் விடுதலை வேண்டும். பெண்களை ஊமை என்று சொன்னால் ஆண்கள் ஆமைகளாய் அந்நியருக்கு அடங்க வேண்டியது தான் என்னும் கருத்துகளைப் பாரதிதாசன் பின்வரும் அடிகளில் தெரிவித்துள்ளார்.
     

    பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
    மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
    ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும் உள்ளடங்கும்
    ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 56-59)
     

    என்று பெண் விடுதலைக் கருத்தையும் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் காப்பியத்தில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:59:51(இந்திய நேரம்)