தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறுவர் பாடல்கள்

  • 4.2 சிறுவர் பாடல்கள்
     

    E

    பாரதிதாசனின் இசைப் பாடல்களில் சிறுவர் பாடல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அப்பாடல்களின் வழியாகச் சிறுவர்களுக்கு நல்ல பொறுப்பு உணர்வை அவர் ஊட்டியுள்ளார். சிறார் பொறுப்பு என்னும் தலைப்பில் உள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.
     


     

    இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும்
    இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!

    (இன்று குழந்தைகள் நீங்கள்)
     

    நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள்
    ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்

    (இன்று குழந்தைகள் நீங்கள்)
     

    குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்!
    கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்!
    தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
    அன்றன்று வாழ்வின் புதுமை காண வேண்டும்!

    (இன்று குழந்தைகள் நீங்கள்)
     

    பல்கலை ஆய்ந்து தொழில் பல கற்றும்
    பாட்டின் சுவைகாணும் திறமையும் உற்றும்
    அல்லும் பகலும் இந்நாட்டுக்கு உழைப்பீர்கள்!
    அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
    சிறுவர்கள் சிறுமியர் என்று இருபால் -

    (இன்று குழந்தைகள் நீங்கள்)

    (இசையமுது, சிறார் பொறுப்பு)
     

    குழந்தைகளையும் இந்தப் பாடலில் அழைத்துப் பாடியுள்ளார் பாரதிதாசன். இவ்வாறு பாடுவதால் குழந்தைகளுக்குத் தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு தோன்றும். அவ்வாறு தோன்றும் உணர்வு அவர்களுக்கு நல்ல பண்புகளைக் கொடுக்கும்.
     

    4.2.1 தூய்மை
     

    சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்று தூய்மை ஆகும். இந்தத் தூய்மையைத் திருவள்ளுவர் உடல்தூய்மை, உள்ளத்தூய்மை என இரண்டாகப் பகுத்துள்ளார். திருவள்ளுவர் காட்டிய வழியிலேயே பாரதிதாசனும் தூய்மையை உடல் தூய்மையாகவும் உள்ளத் தூய்மையாகவும் பிரித்துக் காட்டியுள்ளார்.

    இரண்டு வகைத் தூய்மையையும் விளக்கிப் பாரதிதாசன் பாடியுள்ள பாடலைக் கேட்போமோ?
     

    தூய்மை சேரடா தம்பி - என்
    சொல்லை நீ பெரிதும் நம்பித்

    (தூய்மை சேரடா தம்பி)

    வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
    தூய்மை உண்டாகும்! மேலும் மேலும்

    (தூய்மை சேரடா தம்பி)

    உடையினில் தூய்மை - உண்ணும்
    உணவினில் தூய்மை - வாழ்வின்
    நடையினில் தூய்மை - உன்றன்
    நல்லுடல் தூய்மை - சேர்ப்பின்
    தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
    தரும்நாள் ஆகும் நீ என்றும் -

    (தூய்மை சேரடா தம்பி)

    துகளிலா நெஞ்சில் - சாதி
    துளிப்பதும் இல்லை - சமயப்
    புகைச்சலும் இல்லை - மற்றும்
    புன்செயல் இல்லை! - தம்பி!
    அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
    அச்சம் போகும்! நீ எந்நாளும் -

    (தூய்மை சேரடா தம்பி)

    (இசையமுது, ‘தூய்மை’)
     

    (துகளிலா = குற்றம் இல்லாத; துளிப்பது = செழிப்பது; புகைச்சல் = மன எரிச்சல்; புன்செயல் = தீய செயல்)
     

    தூய்மையை விளக்கும் இந்தப் பாடலில் சிறுவர்களுக்கு மட்டும் எடுத்து உரைப்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார். அடுத்த பாடலைச் சிறுமியைப் பார்த்துப் பாரதிதாசன் பாடியுள்ளார் பாருங்கள்.
     

    4.2.2 தந்தை - பெண்ணுக்கு
     

    ஒரு தந்தை தன் பெண் குழந்தையைப் பார்த்துப் பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
     

    தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
    சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
    சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
    சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
    விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
    வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
    மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
    வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

    (தலைவாரிப் பூச்சூடி)
     

    படியாத பெண்ணாய் இருந்தால், - கேலி
    பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!
    கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
    கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு!
    கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி
    கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!

    கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு - பெண்
    கல்வி பெண்கல்வி என்கின்றது அன்போடு!

    (தலைவாரிப் பூச்சூடி)

    (இசையமுது - தந்தை பெண்ணுக்கு)
     

    (படியும் = மனத்தில் பதியும்; படியாத = படிக்காத; மலைவாழை = மலைவாழைப்பழம்)
     

    பெண் குழந்தைகளுக்குக் கல்வி வேண்டாம் என்று வீட்டில் அடைக்கும் வழக்கம் இருந்த காலம் அது. அந்தக் காலத்தில் ஒரு தந்தை தன் பெண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு வற்புறுத்தி அனுப்புவது போல் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டீர்களா?

    இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘விலை போட்டு வாங்கவா முடியும் - கல்வி?’ என்று கேட்டுள்ளார் பாருங்கள். காசு கொடுத்தால் கடையில் சென்று பொருள்களை வாங்க முடியும். கல்வியைக் கற்றால் தான் பெற முடியும் என்று விளக்கியுள்ளது அருமை அல்லவா?

    மேலும் அந்தத் தந்தை ‘நீ படியாத பெண்ணாய் இருந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னைக் கேலி செய்வார்கள்’ என்று கூறியுள்ளார். பெண் குழந்தையைப் படிக்க வைக்காத தந்தை என்ற இழிசொல் தனக்கு வரக் கூடாது என்ற கருத்து இதில் வெளிப்படுகிறது. இதில் எனக்காகவாவது நீ சென்று படி என்னும் ஏவல் இருப்பதையும் நாம் உணர முடிகிறது.

    கல்வி கற்கும் போது முதலில் சிறிது கடினமாகத் தான் இருக்கும். ஆனால், கற்கக் கற்க அது இனிமையைத் தரும். எனவே, பின்னால் வர இருக்கும் கல்வி இன்பத்தை நினைத்து இன்று படி என்று கூறியுள்ளார் பாரதிதாசன்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-06-2017 15:27:44(இந்திய நேரம்)